குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது- உணவு பாதுகாப்புத்துறை
- நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
- அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டன.
குறிப்பாக, ஒரு குடிநீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்து வரும் வாரங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.