ஸ்ரீவைகுண்டம் அருகே பிளஸ்-1 மாணவனை வெட்டிய வழக்கில் வாலிபர் உள்பட 3 பேர் கைது
- மாணவனின் இடது கையில் 5 விரல்களும் வெட்டுபட்டு சிதைந்திருந்தது.
- நேற்று பகல் 10 மணிக்கு தொடங்கி 7 மணி நேரம் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பல் வெட்டியதில் மாணவனின் இடது கையில் 5 விரல்களும் வெட்டுபட்டு சிதைந்திருந்தது. மேலும் வலது கையில் 1 விரல் சிதைந்திருந்தது. அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்பட 7 சிறப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று பகல் 10 மணிக்கு தொடங்கி 7 மணி நேரம் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் துண்டான 5 விரல்களில் 4 விரல்கள் ஒட்ட வைக்கப்பட்டு விட்டது. மாணவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும்போது 4 விரல்களோடு தான் வந்திருந்தார் என்பதால் அவற்றை ஒட்ட வைத்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வலது கையில் வெட்டுபட்ட 1 விரலும் ஒட்டவைக்கப்பட்டது. தற்போது வரை மாணவன் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பதாவும், அவன் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.