தமிழக கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது அற்ப சிந்தனை இல்லையா?- செல்வப்பெருந்தகை
- தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்.
- தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.
PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடி நிதி, வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆளும் பாசிச பா.ஜ.க அரசு.
தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
தற்போது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஆளும் பா.ஜ.க. அரசின் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் வரி செலுத்துவதற்கேற்ப ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.