திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட வழக்கு: கனல் கண்ணனுக்கு முன்ஜாமீன்
- கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையுடன் சர்ச்சைக்குரிய வாசகம் அடங்கிய பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.
இதனையடுத்து, "மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்வதால்தான், இதுபோன்ற நபர்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது" என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது