FCPA சட்டம்: நிறுத்திய டிரம்ப்.. தப்பிய அதானி - மோடி பயணம் காரணமா?
- லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
- பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.