அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறோம்: பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.
நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.