வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
- வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அங்குள்ள மெர்சைல் நகரில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.