VIDEO: மூன்றாம் உலகப்போர்.. வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கியிடம் சண்டையிட்ட டிரம்ப்
- ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.
- ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெறாது.
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.
உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.
உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன்.
நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி கூறும் போது, "நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் வலுவாக இருந்தோம். நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்தோம். போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. உங்களுக்கும் கூட பிரச்சினை உள்ளன. இப்போது அதை உணர மாட்டீர்கள், ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உணருவீர்கள்" என்று கூறினார்.
ஆனால் ஜெலன்ஸ்கி பேசியபோது டிரம்பும், துணை அதிபர் வான்சும் குறுக்கிட்டு பேசி கொண்டே இருந்தனர். இதில் இருவரும் சத்தமாக பேசினார். அப்போது வான்சிடம் ஜெலன்ஸ்கி, சத்தமாக பேசுவதை நிறுத்துமாறு கேட்டும் கொண்டார்.
இதனால் வான்ஸ் - ஜெலன்ஸ்கி இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேச்சு வார்த்தையை பாதியில் டிரம்ப் முடித்துக் கொண்டு எழுந்தார். இதனால் இந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாதியில் முடிந்தது. வெள்ளை மாளிகைக்கு செல்லுமாறு ஜெலன்ஸ்கி கேட்டு கொள்ளப்பட்டார். உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியும், மதிய விருந்து நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.
இந்த சந்திப்பு தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும் போது, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாகும். அவர் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், நான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தயாராக உள்ளேன் என்றார்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு ஜெலன்ஸ்கி கூறும்போது, "டிரம்பிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் நடவடிக்கை இரு தரப்பினருக்கும் நல்லதல்ல. தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை உக்ரைன் ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றார்.
.