புதுச்சேரி

புதுச்சேரியில் அலங்கார வளைவு சரிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

Published On 2023-08-08 15:29 IST   |   Update On 2023-08-08 15:29:00 IST
  • புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலசாரம் அதிகரித்து உள்ளது.
  • சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.

புதுச்சேரி:

புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலாசாரம் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி நகரப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்-அவுட்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஆனால் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

இந்தநிலையில் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு பேனர்களில் நேற்று இரவு அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மீது அலங்கார வளைவு விழுந்ததில் பாதசாரிகள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த அலங்கார வளைவு மற்றும் பேனர்களை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

Tags:    

Similar News