புதுச்சேரி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-22 03:29 GMT   |   Update On 2023-02-22 03:29 GMT
  • புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார்.
  • சமீப காலமாக நடராஜன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.

சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News