search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அருகே மாட்டை கடித்துக் கொன்ற சிறுத்தை
    X

    பவானிசாகர் அருகே மாட்டை கடித்துக் கொன்ற சிறுத்தை

    • விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதே போல் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய தோட்டங்கள் அமைந்து உள்ளன.

    மேலும் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதி விவசாயிகள் ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவில் பட்டியில் கட்டி வைப்பது வழக்கம்.

    அப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு உள்ள மாடு, ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் பகுதியில் சிவராஜ் (62) என்ற விவசாயி மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் இரவில் தோட்டத்தில் மாடுகளை கட்டி வைத்து வந்தார்.

    இதே போல் நேற்று இரவும் அவர் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைத்து இருந்தார். அப்போது நள்ளிரவில் ஒரு சிறுத்தை புலி வனத்தை விட்டு வெளியேறி சிவராஜ் தோட்டத்துள் புகுந்தது. அங்கு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 3 வயதுடைய ஒரு மாட்டை கடித்து கொன்றது.

    இதையடுத்து சிவராஜ் இன்று அதிகாலை வந்து பார்த்தார். அப்போது அவரது ஒரு மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். இதில் சிறுத்தை புலி மாட்டை கடித்து கொன்றது தெரிய வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×