என் மலர்
புதுக்கோட்டை
- வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதில் முரளிராஜா வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 2 இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களை சம்பந்தப்பட்ட நபர்களாகக் கருதியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை பல்வேறு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.
வேங்கைவயல் பகுதி மக்கள் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் சார்பில் வி.சி.க. வக்கீல் மலர்மன்னன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குறப்பத்திரிகையை ஏற்க கூடாது.
சி.பி.ஐ. விசாரணை வேண்டும். 3 பேரின் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர்.
- திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
மேலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி ஜகபர் அலி மசூதிக்கு சென்று திரும்பிய போது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப் பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராசு ,ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர் பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.
நேற்று இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்து வந்தவர்கள் தொடர்பாக அவரது 2-வது மனைவியிடம் விசாரித்தனர். அதன் மூலம் கொலையின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.
அதன் பின்னர் இன்று கொலை நடந்த இடம் மற்றும் புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜகபர் அலி கொலை சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் பிறப்பித்து உள்ளார்.
- கொலையாளி வெற்றிவேல் சிவகங்கை மாவட்டம் கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
- கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 25). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் திரும்பினார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த சசிகுமாரை மர்மநபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் வடக்கு இளையாத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்( 23 ) என்பவர் மஞ்சு விரட்டு முன் விரோதம் காரணமாக சசிகுமாரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே கொலையாளி வெற்றிவேல் சிவகங்கை மாவட்டம் கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்திரு திருமயம் போலீசார் சரணடைந்த வெற்றி வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மஞ்சு விரட்டு முன்விரோதத்தில் சசிகுமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? இந்த கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
மஞ்சுவிரட்டு முன் விரோதத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
- அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூர் பகுதியில் இயங்கி வந்த கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக போராடி வந்தார். மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்து, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 2 கல்குவாரி அதிபர்கள் பின்னணியில் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து லாரி ஏற்றி கொலை செய்த மினி லாரி உரிமையாளர் திருமயம் முருகானந்தம் (56),
அவருக்கு உதவியாக செயல்பட்ட மினி லாரி டிரைவர் காசிநாதன்(45), துளையானூர் கல்குவாரி உரிமையாளர் ராசு( 54), அவரது மகன் தினேஷ் (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மற்றொரு கல்குவாரி உரிமையாளர் ராமையா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கு அதிரடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு நேற்று மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்குகிறார்கள்.கொலை நடந்த இடத்தை முதலில் ஆய்வு செய்கிறார்கள்.
பின்னர் திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு விவரங்களை கேட்டறிந்து விசாரணையை தொடர் வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே புகாருக்குள்ளான ராசு மற்றும் ராமையா கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆய்வு நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இந்த ஆய்வு நேற்று பிற்பகல் நிறைவடைந்தது இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
நவீன ட்ரோன் மூலம் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
- கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலை வீசி தேடி வருகின்றனர்
- கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூரில் இயங்கி வரும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக கனிமங்கள் தோண்டி எடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தார்.
மேலும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நிர்வாகத்திடமும் அவ்வப்போது புகார் அளித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலியை லாரி ஏற்றி திட்டமிட்டு கொலை செய்தனர். இது தொடர்பாக லாரி ஏற்றி கொலை செய்த திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம்(56), அதற்கு உறுதுணையாக பின் தொடர்ந்து வழிகாட்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது லாரி டிரைவர் காசிநாதன், கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக கூறப்படும் திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் ராசு(54)அவரது மகன் தினேஷ் (28 )ஆகிய 4 பேரை திருமயம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலைவீசி தேடி வருகின்றனர்
கல்குவாரி முறைகேடு தொடர்பாக ஜகபர் அலி தான்கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஜகபர் அலியால் குற்றம் சாட்டப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகியோரின் கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வில் திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேர் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.
இதில் எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்று 2-வது நாளாக காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,
புகாருக்கு ஆளாகியுள்ள ராசு, ராமையா ஆகியோர் நடத்தும் கல்குவாரி மற்றும் கிரஷர்களின் அனுமதி ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது.
இருப்பினும் சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாக ஏற்கனவே ராமையாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.6.70 கோடி அபராதமும், ராசுவுக்கு ரூ.12 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆய்வு செய்யப்பட்டதில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
அளவீடும் பணிகள் மேலும் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அளவிடும் பணி முடிந்ததும் அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கல்குவாரி மற்றும் கிரசர்களில் பல கோடி கனிம வளம் முறைகேடு நடந்துள்ளது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்று உரிமங்களை புதுப்பிக்காமல் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் உதயகுமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதேபோன்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார்.
- அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை.
ஜகபர் அலியின் கொலை இதை தான் சமூகத்துக்கு சொல்கிறது. ஏனெனில் தவறுகள் நடப்பது கண்ணுக்கு தெரிந்தால் தட்டிக் கேட்கவும், சுட்டிக் காட்டவும் பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றுதான் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
அப்படி செய்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதற்கு ஏற்கனவே சில சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது ஜகபர் அலியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஜகபர் அலியின் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள வெங்களூர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி புதுக்கோட்டையில் இருக்கிறார். 2-வது மனைவி மரியம் காரைக்குடியில் இருக்கிறார்.
ஜகபர் அலி காரைக்குடிக்கு அடிக்கடி சென்று வருவார். ஜகபர் அலி கொலை வழக்கில் சிக்கி இருக்கும் ராசுவின் கல்குவாரியில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலாளராக பணியாற்றி இருக்கிறார்.
ராசுவும், தேடப்படும் ராமையாவும் ஜகபர் அலிக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த கல்குவாரியில் நடந்து வந்த தில்லாலங்கடி வேலைகளை ஜகபர் அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முறைகேடான நிறுவனத்தில் வேலை பார்ப்பது முறையல்ல என்று தான் வேலையை உதறிவிட்டு வெளியேறி இருக்கிறார்.
அதன் பிறகுதான் கல்குவாரியில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியிலும், சட்டப்படி அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் துணிந்து ஈடுபட்டுள்ளார்.
அவரது முதல் போராட்டம் மெய்ப்புரம், லட்சுமிபுரம் கிராம மக்களை பாதுகாத்த போராட்டம். அந்த கிராமங்களில் கல்குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதும் அதனால் மக்கள் படும் வேதனைகளையும் அறிந்து அந்த பகுதி மக்களை திரட்டி கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த குவாரிகளை மூட வைத்தார்.
இதனால் ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார். தான் வேலை பார்த்த இடத்தில் நடக்கும் தவறுகளை கண்கூடாக பார்த்ததால் ராசுவின் கல்குவாரி முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் 2023-ல் அனுமதி முடிவடைந்த பிறகும் குவாரி இயங்கி வந்ததால் சட்டப்படி அதை மூட நடவடிக்கை எடுத்து உள்ளார்.
70 ஆயிரம் லாரி அளவுக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் மலை போல் குவித்து வைத்திருந்ததை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக அவரது புகார் பற்றி கல்குவாரி உரிமையாளர்களுக்கு தகவலை கசிய விட்டு உள்ளார்கள்.
தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்ட ஜகபர் அலியிடம் அவர் இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருங்கள் என்று கூறி இருக்கிறார். அப்படி காலதாமதம் செய்தால் பதுக்கி வைத்திருக்கும் கனிம வளங்களை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை ஜகபர் அலி எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அதிகாரிகளிடம் நியாயம் கிடைக்காது என்பதால் ஜனவரி 17-ந்தேதி மக்களை திரட்டி போராடுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.
இதற்கிடையில் ஜகபர் அலி குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வர இருந்ததால் குவாரி உரிமையாளர்களுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. நேரடியாகவே ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று மிரட்டி இருக்கிறார்கள்.
எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நடப்பதே வேறு... என்று மிரட்டி சென்றுள்ளார்கள்.
சொன்னபடியே ஜகபர் அலி போராட்டம் நடத்த இருந்த அதே ஜனவரி 17-ந் தேதியே அவரது உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மிகவும் கோரமான முறையில்.
லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், 'அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழியில் திட்டமிட்டபடி மினி லாரியை மோத செய்தேன். முதல் முறை மோதிய போது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் என நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த சகதியில் கிடந்த ஜகபர் அலியின் உடலை பார்த்தும் போலீசுக்கு எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட வில்லையாம்.
சாலை விபத்து என்றே முதலில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் கொடுத்த பிறகே கொலை வழக்காக மாற்றப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தது பற்றி ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் செய்துள்ளார். அப்போதே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜகபர் அலி காப்பாற்றப்பட்டிருப்பார்.
ஜகபர் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் அரங்கேறி இருக்காது.
ஊருக்காக போராடினால் இதுதான் கதியா? என்று கண்ணீர் மல்க கேட்கும் ஜகபர் அலியின் மனைவி மரியத்தின் கேள்விக்கு என்ன பதில்?
- தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராகவும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
சமூக ஆர்வலரான இவர் திருமயம் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டி வந்தார். மேலும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குவாரி அதிபர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஆனால் அபராத தொகை வசூலிக்கப்படவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அபராத தொகை வசூலிக்காதது குறித்து மீண்டும் ஜகபர் அலி அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.
மேலும் 20 ஆயிரம் டாரஸ் லாரி அளவுக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அனுமதி இல்லாத இடத்தில் கொட்டப்பட்டு உள்ளது என உதவி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
அதை தொடர்ந்து அந்த கனிம வளம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணி பணி நடைபெற்றுள்ளது. இது குறித்து கடந்த 13-ந் தேதி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் அரசு அலுவலர்களிடம் கனி கனிமவள கொள்ளை குறித்து மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்றபோது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் திருமயம் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரது மனைவி மரியம் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் திருமயம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் 2 கல்குவாரி அதிபர்கள் சேர்ந்து திட்டமிட்டு அவரை லாரி ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் (56 ) போலீசில் சரணடைந்தார்.
இதை தொடர்ந்து லாரியை ஏற்றி சமூக ஆர்வலரை கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் காசிநாதன் (45) கைது செய்யப்பட்டார். இவர் சமூக ஆர்வலரின் நடமாட்டத்தை கண்காணித்து முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை பின்னணியில் கல்குவாரி உரிமையாளர்களான திருமயம் பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28) மற்றும் மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் கல்குவாரி அதிபர் ராசு மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கைதான லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கல்குவாரி அதிபர்கள் ராசு மற்றும் ராமையா ஆகியோரின் சதி திட்டத்தின் படி திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன். அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழி குறித்து எனது மினி லாரி டிரைவர் காசிநாதனை கண்காணிக்க செய்து தகவல் அளிக்க சொன்னேன்.
அவரும் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து எனக்கு தகவல் அளித்தார். அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டபடி மினி லாரியை மோதச் செய்தேன். முதல் முறை மோதியபோது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் எனக் கருதிய நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் கொலையும், லாரி உரிமையாளரின் வாக்குமூலமும் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல் குவாரி முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருமயம் பகுதியைச் சேர்ந்த கல் குவாரி அதிபர் ராசு, அவரது மகன் தினேஷ் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இன்னொரு கல்குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சமூக ஆர்வலர் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகிய இருவரது கல் குவாரிகளிலும் இன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த குவாரிகள் திருமயம் அருகே துளையானூரில் இருவரது குவாரிகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்த சோதனை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா, திருச்சி சுரங்கத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன், கரூர் உதவி இயக்குனர் சங்கர் மற்றும் பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கல் மற்றும் கனிம வளம் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடத்துகிறார்கள். இந்த சம்பவம் கல் குவாரி அதிபர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.
- விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்தனர்.
விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நெற்பயிர்கள் நல்ல மகசூலை எட்டியது. இந்நிலையில் சமீபத்தில் பருவம் தவறி காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.
மேலும் சாய்ந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளது. ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் சாய்ந்து சேதமாகியுள்ளது.
சாய்ந்த கதிர்கள் சுமார் 90 சதவீதம் சேதமடைத்துள்ளதால், இனி அதனை அறுவடை செய்து எந்த பயனும் இல்லை. எனவே அரசு உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
- முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பாக மாடு பிடி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விழா கமிட்டியினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சைக்கிள், பைக், குக்கர், டிரஸ்சிங் டேபிள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டது.
- நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.
- போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பெருமாள் கோவில் கிழக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா நாராயணன். இவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது.
சமையல் அறையில் தீ பிடித்ததால் அங்கிருந்த சிலிண்டரும் வெடித்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின. சவுமியா நாராயணன் உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.
இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி மகேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.
வீட்டில் இருந்த மற்றொரு காலி சிலிண்டர் வெளியே கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தினால் எவ்வித உயிர் சேதமோ எவருக்கும் தீக்காயமும் ஏற்படவில்லை. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சேதமாயின. மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தீ விபத்து நடைபெற்ற பகுதியை டி.எஸ்.பி. முத்துராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
- 21 பதார்த்தங்களை படைத்து வழிபாடு செய்வார்கள்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப் புள்ளான் விடுதியில் பிரசித்தி பெற்ற கருப்பையா பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
கார்த்திகை தீபம் முடிந்த 21 நாட்களுக்கு விரதமிருந்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொங்கல், எள்ளுருண்டை, அப்பம், சுண்டல் போன்ற 21 பதார்த்தங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாக படைத்து வழிபாடு செய்வார்கள்.
பின்னர் 22-ம் நாள் சதய நட்சத்திரம் சஷ்டி திதி ஒன்று கூடிய நாளில் 21 நாட்கள் படைத்த பதார்த்தங்களையும் செய்து விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வர்.
அப்போது பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து விநாய கருக்கு பிடித்த விநாயகர் அகவல் பாடல்களை பாடியும் விநாயகர் நோன்பு கொண்டாடப்படுவதற்கான கதைகளை கூறியும் வழிபாடு செய்வர்.
இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை ஏற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தீயை விழுங்கும் வழிபாடு செய்வர்.
இவ்வாறு தீயை விழுங்கி வழிபடுவதால் நோய்தீரும், தீயசக்திகள் தொடாது என்றும் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்றும் நம்பப் படுகிறது. இந்த வினோத வழிபாட்டை அப்பகுதி மக்கள் பயபக்தியுடன் கண்டுகளித்தனர்.