என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்.
    • மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

    மேலும், மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
    • அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    மீனவர்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.


    அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் 4-வது நாளான நேற்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.

    மேலும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள். அந்த அபராத தொகையை செலுத்த நாங்கள் பிச்சை எடுக்கிறோம் என்றனர்.

    அத்துடன் இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடியை அந்நியச் செலாவணியாக ஈட்டித்தரும் மீனவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு போராட்ட பந்தலுக்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனையை முன்னிறுத்தி தீர்வுகாண உத்தரவிட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

    இருந்தபோதிலும் முதலமைச்சர், பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதன்படி இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.


    இந்தநிலையில் இன்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு பேராட்ட பந்தல் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் தீவிர மடையும் போராட்டத்தால் ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகளும், மண்டபம் கோவில்வாடி பகுதியில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அத்துடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். 

    • மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.
    • ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பை கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்.

    போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

    மேலும் மத்திய மந்திரி நேரில் வந்து மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக போராட்ட பந்தல் முன்பாக கியாஸ் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு உணவு தயார் செய்யப்பட்டது.

    இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் சென்றிருந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மீனவர்களை திடீரென்று சந்தித்தார். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கவர்னரிடம் வழங்கினார்.

    அப்போது அவர்களிடம் பேசிய கவர்ன மத்திய, மாநில அரசுகளிடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்.

    காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்ட பந்தல் முன்பாக திருவோடுகள் கொண்டு வரப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் மீனவர்கள் அதனை கையில் ஏந்தி போராடினர்.

    இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் ஒருவர் கூறுகை யில், எங்கள் போராட்டத் திற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நேரில் வந்த கவர்னரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளார். இருந்தபோதிலும் மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.

    இல்லையென்றால் நாளை நாங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனை எங்கே நடத்துவது என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். இந்த ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம் என்றார்.

    • தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
    • மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி தனியார் மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    அமைச்சர் சேகர்பாபு என்னை கர்நாடகா டூப் போலீஸ் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர். வேண்டுமென்றால் அமைச்சர், நான் வேலை பார்த்தது தொடர்பாக சோதனை செய்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது பொழுது விடிந்தால் போதும் பா.ஜ.க.வினரை விமர்சிப்பதே தி.மு.க.வினரின் தொழிலாக உள்ளது.

    தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு தான் செல்கிறோம் என தெரிந்து செல்வோம். ஆனால் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என தெரியாமல் அதில் எப்படி கலந்து கொள்வது? எந்த விதத்திலும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதி எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட விதண்டா வாதமாக பேசி வருவது அவர்களின் வாடிக்கை. அப்படி இருக்க அந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொள்வது?

    திராவிட மாடலை அகற்றும் வரை காலில் செருப்பு அணியப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளேன். செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம் என்பது காலில் செருப்பு போடாமல் நடக்கலாம் அதில் தவறில்லை, ஜெயிலுக்கு தான் போகக்கூடாது.

    மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையே இரு மொழிக் கொள்கையில்தான் படித்ததாக கூறியுள்ளார். நான் மும்மொழி கொள்கையில் தான் படித்தேன். விருப்பமொழியாக தமிழை தேர்வு செய்தேன். படிக்காத நபர்களுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைபிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட அத்துமீறல்களை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. இருந்தபோதி லும் மீனவர்கள் பிரச்சி னைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு மட்டும் எட்டப்படவில்லை.

    கடந்த மாதம் 16-ந்தேதி ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    இந்தநிலையில் கடந்த வாரம் 2 நாட்களில் ராமேசு வரம் மீனவர்கள் 42 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்ட அவர்கள் வவு னியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தரையில் படுக்க கூட இடமில்லாமல் மிகவும் குறுகிய அறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

    மேலும் சரியான தூக்கம், உணவின்றி தவித்து வருவதாக கிடைத்த தகவல்கள் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 24-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக ராமேசு வரம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகி றார்கள். தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் முடங்கியுள்ளது.

    போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கச்சிமடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    மீனவர்கள் பிரச்சி னைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் நேற்று அழைத்திருந்தார். அதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், மத்திய மந்திரி நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

    அத்துடன் 6 மாதம், ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் போது அவற்றை செலுத்த முடியாத மீனவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    எனவே இலங்கை கோர்ட்டு விதிக்கும் அபராத தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும், 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர்.

    இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, ஏலத்தில் விட்டு படகுகளை உடைப்பது, அதில் இருக்கும் இரும்பு களை ஏற்றுமதி செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அதிகப்படியான அபதாரங்களை விதித்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவது, அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

    போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெறும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ராமேசுவரம் வருகை தருகிறார். செம்மமடம் பகுதியில் தனியார் காப்பகத்தை புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    இதற்கிடையே மீன வர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகி றது. அதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

    • மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.

    ராமேசுவரம்:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

    இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதியளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக தொடரும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, தாசில்தார் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரை சந்திக்க வருமாறு அழைத்தனர். ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சிமடம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    • 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
    • வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற 42 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மேலும் 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் ராமேசுவரம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    42 மீனவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தி கடந்24-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

    ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக வேலை நிறுத்தம் தொடர்வதால் ராமேசு வரத்தில் இதுவரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன் வர்த்தம் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கைதான மீனவர்களை விடுதலை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கால வரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மீனவர்களை விடு விக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மீனவ சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

    • மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (19-ந் தேதி) மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,200 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இதில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த சூசை மற்றும் அவரது விசைப்படகையும், அதில் இருந்த ஜான்முத்து (44), பவுல்ராஜ் (55), லவ்சன் (52) மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்ட்ரின் விசைப்படகு அதிலிருந்த தொன் போஸ்கோ (60), அந்தோணி (45), செல்வராஜ் (62) ஆகிய ஆறு பேரும் நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களை வருகிற மார்ச் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோன்று ராமேசுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜோதி ராஜன் (55), படகு ஓட்டுநர் ராமு (62) அருள்ராஜ் (60) கென்னடி (57) ஆகிய நான்கு பேரும் தலைமன்னார் தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் மார்ச் 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவிற்கு வரும்பொழுது மீனவர்களை சந்திக்க வேண்டும். அவர் வருவதற்கு முன்பே இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற 28-ந்தேதி அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து கடும் போராட்டம் நடத்துவோம்.

    தமிழக முதல்வரை நான்கு முறை சந்தித்தோம். அவர் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் என்று படகுகளுக்கு ஏற்றவாறு வழங்கினார். தற்பொழுது ரூ.360 கோடி செலவில் தங்கச்சிமடம் பகுதியில் படகுகளை நிறுத்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்வதே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

    • காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), அந்தோணி ஆரோன் உள்பட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    பின்னர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அந்த மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 14 பேரில் 12 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வருகிற 28-ந்தேதி முதல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கைதானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×