search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பரோலில் தலைமறைவாகி கோவையில் பிடிபட்ட பிரபல தாதா
    X

    பரோலில் தலைமறைவாகி கோவையில் பிடிபட்ட பிரபல தாதா

    • பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.
    • போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அனிதா நகரை சேர்ந்த பிரபல தாதா கர்ணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்தார்.

    நன்னடத்தை விதிப்படி தனக்கு விடுதலை கோரி கர்ணா மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோலுக்கு விண்ணப் பித்தார். ஏற்கனவே பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.

    அதன்படி கடந்த 13-ந் தேதி மீண்டும் சிறைக்கு வர வேண்டிய கர்ணா திரும்பாததையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தேடப்படும் குற்றவாளியாக புதுவை காவல்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமான 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே முதலியார்பேட்டை அனிதாநகரில் உள்ள கருணாவின் பூட்டிய வீட்டை கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனையிட்டனர்.

    கர்ணாவின் நெருங்கிய கூட்டாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவையில் இருந்த ரவுடி கர்ணாவை புதுச்சேரி சிறப்பு படை போலீசார் தலைமறைவான 4 நாட்களுக்கு பிறகு கைது செய்தனர். தொடர்ந்து கர்ணாவை இன்று அதிகாலை புதுச்சேரிக்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×