என் மலர்
நீங்கள் தேடியது "AAP"
- டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார்.
- பஞ்சாப் மாநில முதல்வராக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆனால், இது வழக்கமான கூட்டம். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்கும் திட்டம் ஏதும் இல்லை என ஆம் அத்மி கட்சி விளக்கம் அளித்தது. இதனால் அந்த பரபரப்பு அடங்கியது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய நகர்வு, தற்போது கெஜ்ரிவால் பாராளுமன்ற மாநிலங்களை எம்.பி. ஆகிறாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞசாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருந்த குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் காலமானார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில்தான் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அவருக்கு பதிலாக கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் "அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்லப்போவதில்லை. முன்னதாக கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு செய்திகளும் முற்றிலும் தவறானவை.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருடைய தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் எந்த ஒரு இடத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை" என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
- மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை டெல்லி சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக முதல்வர் ரேகா குப்தா இதை தாக்கல் செய்தார். சி.ஏ.ஜி. அறிக்கையில் மதுபான கொள்கையால் ரூ.2000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆம் ஆத்மி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும் போது, 2017-2018க்கு பிறகு சி.ஏ.ஜி. அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் அமைப்பை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
- முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக அதிஷி குற்றச்சாட்டு.
- சிஏஜி அறிக்கை ஊழலை வெளிப்படுத்தும் என்பதால் மக்களை திசைதிருப்பு முயற்சியாக வதந்தி பரப்புவதாக பாஜக குற்றச்சாட்டு.
டெல்லி தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, பாஜக எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்பின் இன்று முதன்முறையாக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.
அப்போது "முதல்வர் ரேகா குப்தா அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி தலைமையில் சட்டமன்றம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. படங்கள் நீக்கப்பட்டது தலித்திற்கு எதிரான நிலையை காட்டுகிறது" என அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக கூறுவது வதந்தி. சிஏஜி அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும்போது அதன் ஊழலை வெளிப்படுத்தும் என்பதால், அதில் இருந்து மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சி பரப்பப்படும் வதந்தி.
முதல்வர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பகத் சிங், ஜனாதிபதி, பிரதமர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மந்திரிகள் அலுவலகத்திலும் இதுபோன்று வைக்கப்பட்டுள்ளன என பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா "அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் அதிஷி வதந்தை பரப்பி வருகின்றனர். இது அற்ப அரசியலை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.
- டெல்லி தேர்தலின்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவிப்பு.
- மார்ச் 8-ந்தேதிக்குள் பெண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்திருந்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
தேர்தலுக்கான பிரசாரத்தின்போது டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும். மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அமைச்சரவையில் எடுக்கப்படும் முதல் முடிவு இதற்கானதாகத்தான் இருக்கும். இது மோடி உத்தரவாதம் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அதிஷி தலைமையில் முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 2500 ரூபாய் வழங்குவதாக தெரிவித்த வாக்குறுதி என்னாச்சு? என கோரிக்கை எழுப்பினர்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, சட்டமன்றத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே கூடினோம்.
முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி அளித்த 2500 ரூபாய் வாக்குறுதி பற்றி அவரிடம் கேட்டுக்கொள்ள விரும்பினோம். மோடியின் உத்தரவாதம் தவறு என நிரூபனமாகிக் கொண்டு வருகிறது.
முதல்வர் எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனால், மார்ச் 8-ந்தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
இன்று முதல்வர் ரேகா குப்தா சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்றனர். எம்.எல்.ஏ.-க்கள் ஆங்கிலம், இந்தியா, சமஸ்கிருதம், உருது, மைதிலி, பஞ்சாபி என ஆறு மொழிகளில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக குற்றம் சாட்டியது.
ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.
பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய பொதுப்பணித் துறையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்தது.
- பாஜக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதிஷி குற்றச்சாட்டு.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை (10 வருடங்கள்) ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியால் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனால் டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், முதல்வராக இருந்த அதிஷி கடந்த 9-ந்தேதி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் வழங்கினார்.
இந்த நிலையில ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து விலகிய 3 நாட்களுக்குள் டெல்லியில் பல்வேறு நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. டெல்லியை உ.பி.யாக மாற்ற பாஜக விரும்புகிறது என அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த நிலையில் டெல்லி மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பலமணி நேரம் மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பாஜக டெல்லியை உத்தர பிரதேசம் போன்று மாற்ற விரும்புகிறது.
40-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மக்கள் தற்போது இன்வெர்ட்டர்களை வாங்க தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத்துறை தொடர்ந்து கவனித்து வந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற 3 நாட்களிலேயே சீர்குலைந்து விட்டது.
எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது பாஜக-வுக்கு தெரியாது. உத்தர பிரதேசம் போன்று டெல்லியில் நீண்ட நேர மின்தடை சூழ்நிலையை பாஜக உருவாக்கும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. 8-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் அடுத்த முதல்வர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் புதிய முதல்வர் பதவி ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
- நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம்.
- நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை சந்தித்தது. இதில் கெஜ்ரிவால் கட்சியால் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் 10 வருடத்திற்கு மேலாக டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் அரசு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.
அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது டெலலி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அரிவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார்.
- பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள் என்றார் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அணி மாறலாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர் கெஜ்ரிவாலுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பகவந்த் மான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள், பிரதாப் சிங் பஜ்வா கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
பஜ்வா எங்கள் எம்.எல்.ஏ.க்களை எண்ணாமல், டெல்லியில் காங்கிரசுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என பார்க்க வேண்டும்.
ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள்.
20 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 40 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பாஜ்வா கூறி வருகிறார். அதை அவர்கள் சொல்லட்டும்.
பெரும்பாலான மாநிலங்களைவிட பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எல்லை மாநிலமாக இருப்பதால் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும், அதைச் செய்து வருகிறோம்.
மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களிடையே எங்களின் வியர்வை மற்றும் ரத்தத்தைச் செலுத்தி இந்தக் கட்சியை உருவாக்கியுள்ளோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
#WATCH | Delhi: Punjab CM Bhagwant Mann says, "... I would ask Pratap Singh Bajwa to count how many MLAs they have in Delhi... The law and order of Punjab is better than most states... We have to put in extra effort being a border state, and we are doing that..." pic.twitter.com/HsMLsAeETF
— ANI (@ANI) February 11, 2025
- பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
- இக்கூட்டத்துக்கு முன் ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவர் எனும் வதந்தி பரவுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கிடையே, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முன் கட்சித்தாவல் வதந்தி பரவி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தலைநகர் டெல்லிக்கு அழைத்துள்ளார்.
கட்சியின் உயர்மட்டத் தலைமையின் கவனம் தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே மாநிலமான பஞ்சாபின் மீது திரும்பியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆபரேஷன் தாமரை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. எனவே, டெல்லி போல் பஞ்சாப்பிலும் இதுபோன்ற வீழ்ச்சி ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக பதிலடி.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியின் 30 எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான மல்விந்தர் சிங் கங் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மல்விந்தர் சிங் கங் கூறியதாவது:-
அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா?. அவர்கள் இருந்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அபோஹர் எம.எல்.ஏ. சந்தீப் ஜகார் எங்கே? ராஜ்குமார் சபேவால் (தற்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்த வெளியேறினார்) கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்?.
பிரதாப் சிங் பஜ்வாலின் சொந்த சகோதரர் பெடாஜங் பஜ்வா பாஜகவில் இணைந்தார். அதைக்கூட அவரால் தடுக்கமுடியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குறித்து பாஜ்வா கவலைப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு மல்விந்தர் சிங் கங் தெரிவித்துள்ளார்.
- இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம்.
- கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது 2-வது காரணமாக பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவாகும். மேலும் சமீபகாலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இந்தியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டதால், அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
மேலும் ஆம்ஆத்மி, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.
எனவே இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம். தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே அங்கு கட்சியை வளர்க்க கெஜ்ரிவால் கவனம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.