search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagai Constituency"

    • நாகை தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதமாக நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவெய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். செல்வராஜ் 4 முறை நாகை பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

    டெல்டா மாவட்டங்களுக்கு ரெயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் முன்னெடுத்துள்ளார்.

    என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் செல்வராஜ். கடந்த ஆகஸ்டு மாதம்தான் செல்வராசின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.

    கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார்.
    • அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சோகத்தில் உள்ளனர்

    சென்னை:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நாகை எம்.பி. செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இவர் நாகை தொகுதியில் கடந்த 1989, 1996, 1998 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    நாகை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம் தொகுதியில் 13,03,060 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 9,95,947 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் 3,02,520 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் செங்கொடி 68 ஆயிரத்து 451 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 50 ஆயிரத்து 091 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையார் 14 ஆயிரத்து 077 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    ×