search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkalukkunram"

    • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
    • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

    ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

    இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

    மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

    அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

    தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

    • சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
    • சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.

    உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நமக்கு மன நிம்மதியை உடனடியாக தருவது சிறப்பு.
    • நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீமந்நாராயணன் பலவிதமான ரூபங்களில், பலவிதமான திருநாமங்கள் தாங்கி, உலகெங்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த வீராபுரம் என்ற கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருத்தலத்தில் எங்குமே காண இயலாத ரூபத்தில் தேவராஜப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்து வருவது பலரும் அறியாத ஒன்று.

    பச்சைப்பசேல் என்ற இயற்கை சூழலில் கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம், நமக்கு மன நிம்மதியை உடனடியாக தருவது சிறப்பு. ஆலயத்திற்குள் நுழைந்ததும் இத்தலத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் விளக்குத்தூண் அமைந்துள்ளது.

    அடுத்ததாக ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மற்றுமொரு சிறிய சன்னிதியில் பெரிய திருவடியான கருடாழ்வார், சீனிவாசப்பெருமாளை தரிசித்த வண்ணம் காட்சி தருகிறார். கருவறை - அர்த்தமண்டபம் என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தில், கருவறையில் சீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

    அந்த கரங்களில் சக்கரம், சங்கு, அபய, வரத ஹஸ்த சின்னங்களுடன் காணப்படுகிறார். அருகில் அமைந்துள்ள மற்றோர் சன்னிதியில் பத்மாவதித் தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுற வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    சுற்றுப்பிரகாரத்தில் ஒரு தனி சன்னிதியில் எங்குமே காண இயலாத வகையில் தேவராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக தேவராஜப் பெருமாள், நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடனும், அபய, வரத ஹஸ்த நிலையிலும் காட்சி தருவார்.

    ஆனால் இத்தலத்தில் அதே நான்கு கரங்களுடன் இருந்தாலும், அந்த கரங்களில் சங்கும், சக்கரமும், கமலமும், கதையும் தாங்கி அருள்பாலிக்கிறார். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.

    இத்தலத்திற்கு வந்து பத்மாவதித் தாயாரையும், சீனிவாசப் பெருமாளையும் மனமுருகி தரிசித்து வேண்டிக்கொண்டால், திருமணத்தடைகள் அனைத்தும் விலகி விரைவில் திருமணம் கைகூடுவதாக ஐதீகம். மேலும் மன சஞ்சலத்தை நீக்கி புத்திர பாக்கியத்தை வழங்கும் பரிகார தலமாகவும் இத்தலம் புகழ் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று வாஷிக உற்சவமும், ஆவணி மாதத்தில் பவித்தோற்சவமும், பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், வைகுண்ட ஏகாதசி உற்சவமும் கொண்டாடப்படுகின்றன. மேலும் நவராத்திரி உற்சவம், புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து அமைந்தகரை மார்க்கத்தில் டி-72 என்ற நகரப்பேருந்து வீராபுரம் வழியாகச் செல்கிறது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து வீராபுரத்திற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

    ×