என் மலர்
நீங்கள் தேடியது "airport"
- மதுரை விமானநிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
- மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக பல வருடங்களாக சர்ச்சை இருந்து வருகிறது. பல்வேறு சமூகத்தினர் அவர்களது சமூகத் தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மதுரை விமான நிலை யத்திற்கு முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகர், முத்தரையர் என பெயர்கள் சூட்ட வேண்டும் என கோரிக்கை பல ஆண்டு களாக இருந்து வருகிறது.
கடந்த வருடம் மதுரை விமான நிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்துராமலிங்க தேவர் விமான நிலையம் என காட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்திகள் வெளியான பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையம் என திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கூகுள் மேப்பில் மதுரை விமான நிலையம் இருக்கும் இடத்தின் பெயர் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காண்பிக்கிறது. அதே வேளையில் ஆங்கிலத்தில் madurai airport என காண்பிக்கிறது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் விமான போக்குவரத்து துறை செயல்பாடுகள் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கான கொள்கைகளால் உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக நாம் மாறியுள்ளோம்.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட) மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது 148 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டில் இந்தியா 6 கோடி உள்நாட்டு பயணிகளை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 135 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைப்போலவே சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் (4.7 கோடியில் இருந்து 7 கோடியாக) அதிகரித்து இருக்கிறது.
மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, கடந்த 2014-ல் 400 ஆக இருந்த விமானங்கள் தற்போது 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
இது வெறும் தொடக்கம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் 1,200 முதல் 1,400 புதிய விமானங்கள் வரை வாங்குவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர்களை வழங்கும்.
இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளில் ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயரும்.
அடுத்த சில ஆண்டுகளில் விமான நிலையத்துறை ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை பெறும்.
இதைப்போல 2030-ம் ஆண்டுக்குள் நாம் ஆண்டுதோறும் 45 கோடி உள்நாட்டு பயணிகளை பார்க்கலாம். விமான நிலையங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
- வாகனங்களில் பெரும்பாலும் பாஸ்ட் டேக் மூலம் பணம் எடுக்கப்படுவதால் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தெரியவில்லை.
- விமான நிலையத்தில் பயணிகள் இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ளமாட்டார்கள் என்றார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்ற, இறக்க செல்லும் வாகனங்கள் முதல் 10 நிமிடத்துக்கு இலவசமாக அனுமதிக்கப்படும். அதன் பிறகு முதல் 30 நிமிடத்துக்கு ரூ.75, அதற்கு மேல் 30 நிமிடத்துக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே வசூலிக்கப்படுவதை விட தற்போது விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களுக்கு வழக்கத்தை 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 30 நிமிடத்துக்குள் திரும்பி வந்தாலும் ரூ.150 வசூல் செய்யப்படுவதாகவும், 30 நிமிடத்தை தாண்டினால் ரூ.225 வசூல் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
வாகனங்களில் பெரும்பாலும் பாஸ்ட் டேக் மூலம் பணம் எடுக்கப்படுவதால் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும் போது, செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பிறகே கூடுதல் கட்டணம் பற்றி எங்களுக்குத் தெரியும். திரும்பி சென்று அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. தகவல் தெரிவிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "விமானநிலையத்துக்கு வரும் பயணிகளின் வாகனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று நாங்கள் தனியார் நிறுவனத்திடம் கூறி உள்ளோம். இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் பெற்று உள்ளோம். இனிமேல், விமான நிலையத்தில் பயணிகள் இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ளமாட்டார்கள்" என்றார்.
- விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் கேரளா வரும் விமானங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நெடும்பாச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு அருகே ஒரு குழாய் கிடந்தது. அதில் பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஒரு கிலோ தங்கம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
- என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக விமானி, விமானத்தில் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை அறிந்து, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு ஆவேசமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருக்கிறோம், இவ்வளவு நேரம் தாமதம் என்று கூறிவிட்டு, இப்போது திடீரென ரத்து என்று கூறுகிறீர்களே? இதை அப்போதே கூறியிருந்தால், நாங்கள் வேறு விமானத்தில் சென்று இருப்போமே என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் சமாதானம் செய்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும்போது, விமானத்தை இயக்குவது பாதுகாப்பானது இல்லை. உங்களுடைய நலன் கருதி தான் விமானத்தை ரத்து செய்து இருக்கிறோம். நாளை காலை விமானம் புறப்பட்டு செல்லும். விருப்பப்பட்டவர்கள் நாளை பயணியுங்கள். மற்றவர்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். இதனால் பயணிகள் வேறு வழியின்றி அமைதி அடைந்தனர். சிலர் தங்களுடைய விமான டிக்கெட்டை வேறு விமானத்திற்கு மாற்றி பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமானதால், 328 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் அவதி அடைந்துள்ளனர்.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை வந்துவிட்டு மீண்டும், காலை 5:30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து 328 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, லண்டனிலிருந்து தாமதமாக புறப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு மேல் தான் சென்னை வந்தது. எனவே சென்னையிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக, காலை 11:20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்ல வேண்டிய 328 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தனர்.
- விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
- பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
இதையடுத்து கடத்தல் காரர்கள் விமான பார்சல் மூலம் தங்கம் கடத்த தொடங்கினர். அதனையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதனை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது, அதில் பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு விமான பார்சல் மூலம் தங்கம் கடத்தி வர முயன்றது இது 4-வது முறையாகும்.
- சென்னை-கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமான சேவைகளும் அதே போல் மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக சென்னை-மதுரை இடையே 2 சேவைகளும், மதுரை-சென்னை இடையே 2 சேவைகளும் அதிகரித்துள்ளது.
இதைப்போல் சென்னை-கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவிற்கு, சென்னையில் இருந்து இதுவரையில் காலையில் ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது. கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.
தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இன்று முதல் மதியம் 1:50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவையும், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் திரும்பி வருகிறது. இதனால் சென்னை-கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பெண் யூடியூபர் சண்டிகரில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.
- மற்றொருவர் தனது பதிவில், போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு சேர்த்து இந்த விலையாக இருக்குமோ? என கூறி இருந்தார்.
பொதுவாக விமான நிலைய வளாகங்களில் உள்ள கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பெண் யூ-டியூபரான சேஜல் சுட் என்பவரது பதிவு டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் சண்டிகரில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது சண்டிகர் விமான நிலையத்தில் மேகி நூடுல்ஸ் ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கான பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பில்லை டுவிட்டரில் தனது பக்கத்தில் பகிர்ந்த சேஜல் சுட், விமான நிலையத்தில் ரூ.193-க்கு மேகியை வாங்கினேன்.
இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் மேகி போன்றவற்றை இவ்வளவு உயர்ந்த விலைக்கு விற்கிறார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த பதிவு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 3,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று வைரலானது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒருவர், ஒரு வேளை இந்த மேகி நூடுல்ஸ் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயிலில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என நினைக்கிறேன் என கிண்டலாக பதிவிட்டார். மற்றொருவர் தனது பதிவில், போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு சேர்த்து இந்த விலையாக இருக்குமோ? என கூறி இருந்தார்.
- திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
- பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
திருவனந்தபுரம்:
விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான நிகழ்வு. சர்வதேச விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பாதுகாப்பு நடை முறைகள் அதிகநேரம் இருக்கும்.
அதேபோன்று தான் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரு விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு நடை முறைக்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களில் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சாபு வர்க்கீஸ் (வயது55 ) என்பவரும் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தார்.
அவர் திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். திடீரென்று அவர் கூறிய இந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்பு சாபு வர்க்கீஸ் சுட்டிக்காட்டிய பயணியின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணியின் பையில் வெடிகுண்டு இல்லை என்பதும், சாபு வர்க்கீஸ் கூறியது பொய் என்பதும் தெரியவந்தது.
பாதுகாப்பு நடை முறையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் எரிச்சல் அடைந்த சாபு வர்க்கீஸ், வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். சாபு வர்க்கீசை நெடும்பாசேரி போலீசார் கைது செய்தனர். பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போல் அந்த நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமான பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவை உயிரினங்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என்ற பயணி சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது 47 அரியவகை பாம்பு மற்றும் 2 பல்லி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
- ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
- விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.
சென்னை:
மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் கொள்ளையர்கள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 14-ந் தேதி மாதவரத்தில் கவிதா என்ற பெண்ணிடம் 3 பேர் கொண்ட கும்பல் 8 பவுன் செயினை பறித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்குமார் என்கிற கொள்ளையன் பிடிபட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதவரம் பகுதியில் பெண்களை குறிவைத்து ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.
ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு நேற்று இரவு துப்பாக்கி முனையில் தினேஷ் புஜார், ரமேஷ் பஞ்சாரா ஆகிய 2 கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தனர். இருவரையும் போலீசார் விமானத்தில் அழைத்து வருகிறார்கள். ராஜஸ்தான் கொள்ளையர்கள் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து இங்கு மோட்டார் சைக்கிள்களை முதலில் திருடியிருக்கிறார்கள்.
பின்னர் திருட்டு மோட்டார் சைக்கிளில் மாதவரம் பகுதியை குறிவைத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.
விமானத்தில் வந்து செயினை பறித்து விட்டு ராஜஸ்தான் கொள்ளையர்கள் ரெயிலில் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விடுவார்கள். விமானத்தில் சென்றால் திருட்டு நகைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளிநாடுகளுக்கு கூடுதலாக விமான சேவைகள் வருகிற அக்டோபர் மாதம் முதல் செயல்படுகிறது
- திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76-லிருந்து 17 ஆக அதிகரிக்கும்
திருச்சி
திருச்சி சர்வதேச விமான நிலையம் மாநிலத்தில் மத்தியில் அமைந்துள்ளதால் எந்த பகுதியில் இருந்தும் வெளிநாடு செல்வோர் மற்றும் திரும்புவோர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாகப் வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. பயணிகளை கையாள்வதில் திருச்சி விமானநிலையம் 11-வது இடத்தில் உள்ளது. தற்போது ரூ.951 கோடியில் மொத்தம் 60.723 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.
இது குறித் திருச்சி விமானநிலைய அதிகாரி கூறும் போது,
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் திருச்சி விானநிலையம் ரூ.31.51 கோடி லாபம் ஈட்டியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவையாக சிங்கப்பூருக்கு 4, மலேசியாவுக்கு 3, கொழும்பு, சார்ஜா, துபாய் ஆகிய நாடுகளுக்க தலா 1 என 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது வாரத்துக்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 29-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, தருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3 லிருந்து 5 ஆகவும், சிகங்கப்பூருக்கு 4 லிருந்து 5 ஆகவும், இலங்கைக்கு 1லிருந்து 2 ஆகவும், வியட்நாமுக்கு வாரத்துக்கு புதிதாக 3-ம் என வாரத்துக்கு 31 விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76-லிருந்து 17 ஆக அதிகரிக்கும். என்றார்.