என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancestor Worship"

    • அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள்.
    • முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள்.

     திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தை அமாவாசை அன்று புதிய வட்டமான மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசனிக்காய் வைத்து, அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு, பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒருவரிடம் தட்சினை (பணம்) கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலியிடம் கொடுத்து, அவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்று அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள். இதேபோல் சில கோவில்களில் இந்த பிதுர் பூஜை நடைபெறுகிறது.

     தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி. இந்த தலமும் அமாவாசை தினத்தன்று பித்ருபூஜை செய்ய ஏற்ற தலம் என்பார். இத்தலத்தில் கவுசிக முனிவரின் வேண்டுகோளுக்கேற்ப, காசி கங்கை உள்பட பதின் மூன்று கங்கைகளும் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தனவாம்.

    மேலும் அமாவாசையன்று இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்த நாளில் இங்கு வழிபாடு செய்தால் பிதுர்தோஷம் நீங்கும். முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

     இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தற்போது சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கர் ஆலய அமாவாசை விழா விளங்குகிறது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாக கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பவுர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது.

    அந்த நாளில் இந்த மலை உச்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாகவே பக்தர்கள் தகுந்த உணவு, தேவையான மருந்து, மாத்திரையுடன் வந்து விடுகிறார்கள்.

    அடிவாரத்தில் இருந்து சுமார் நான்கு மணி நேரம் மலையில் நடந்து சென்று மகாலிங்க சுவாமியைத் தரிசித்த பிறகு தங்கள் துன்பங்களும் பாவங்களும் நீங்கியதாக உணர்கிறார்கள். தை அமாவாசையன்று நடைபெறும் பிதுர் பூஜைக்குரிய பொருட்களை மலையடிவாரத்தில் இருந்தே வாங்கிச் சென்று இறைவனின் சந்நிதியில் சமர்ப்பித்து தங்கள் முன்னோர்களையும் மறைந்த பெற்றோர்களையும் நினைவு கூர்ந்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆசி கிட்டும் என்பதுடன் பிதுர்தோஷமும் விலகிவிடும்.

    • பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
    • மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.

    ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.

    ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.

    அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்றுக் கொடுத்தது. அந்த வரிசையில்தான் தை அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தி இருந்தனர்.

    மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இன்று பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள்.

    • ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் தோஷங்கள் விலகி விடும்.
    • பாவ, புண்ணியங்கள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகள்.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன.

    ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.

    அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரீஷத் மகாராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. `என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மா வை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது. சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள்.

    உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.

    மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.

     தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

     திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

     மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
    • பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    பவானி:

    தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    தை, ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆண்டு முழுவதும் தங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் தை அமாவாசையான இன்று சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள், பிண்டம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
    • முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர்.

    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

    திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன் களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர் களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள்.

    உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

    இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் நாளை (18-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியில் முடிகிறது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் தூய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது.


    இந்த காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேசுவரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை கோவில்களுக்கு செல்லலாம்.

    முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று சொல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெற தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள்.


    மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

    தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச்செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்!

    ×