என் மலர்
நீங்கள் தேடியது "Anmikam"
- இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை.
- உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என்ற பெருமையை கொண்டவர். இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை. உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார் மூலவர்.
இங்கு மூன்று அடி உயரத்தில் உள்ள சுயம்புவாக தோன்றிய பலிபீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலிபீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடக்கின்றது.
குடும்ப பிரச்னை, தீராத நோய், வழக்கு பிரச்னை என எப்பிரச்னைகள் ஏற்பட்டாலும் இக்கோயிலில் உள்ள முருகனை வேண்டினால் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இக்கோயிலின் முகப்பில் வீரனார் ஆலயம், கொளஞ்சியப்பருக்கு கிழக்கு கோபுரம், வடக்கு கோபுரம் என இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொளஞ்சியப்பரை அடையாளம் காட்டிய பசுவின் சிற்பம் பீட வடிவில் தோன்றி பெருமானுக்கு பால் சொரிவது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. சித்தி விநாயகரின் கருவறையின் மேலே வட்ட வடிவிலான விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் நாற்புரமும் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால் , பிரம்மாவின் சிற்பங்களை காணலாம். பீட வடிவில் உள்ள கொளஞ்சியப்பருக்கு கிரீடம் சூட்டி வெள்ளியால் கண்ணமைத்து பீடத்தின் கீழே முருகனின் ஆறு எழுத்து மந்திரமான சரவணபவ சடாச்சரம் சாத்தி வேல் ஏந்திய நிலையில் அழகுற காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.
திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு வேப்பெண்ணை மருந்து. இங்கு வரும் பக்தர்கள் வேப்பெண்ணையை வாங்கிக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இறைவனின் காலடியில் வைத்து பூஜை செய்து சிவபெருமானின் பிரசாதமான திருநீற்றை சிறிதளவு அந்த எண்ணெயில் போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த எண்ணெயானது பல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக, பக்தர்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்கிறார்கள்.
ஆறாமல் இருக்கும் புண்கள், கட்டிகள் இவற்றுக்கு மருந்தாக இந்த எண்ணெய் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கு ஏற்படும் காமாலைகட்டிக்கும் இந்த எண்ணெயானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இந்த எண்ணெயானது கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால், இந்த எண்ணையை மருந்தாக பயன்படுத்துபவர்கள் சுத்தமாகவும் எந்தவிதமான தீட்டும் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும்.
- கோவிலின் மற்றொரு சிறப்பு சீட்டு கட்டுதல்.
- நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். இன்று 'விருதாச்சலம்' என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு 'திருமுதுகுன்றம்' என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் சிவபெருமானும், விருத்தாம்பிகையும் சேர்ந்து சுந்தரருக்கு காட்சி தந்தனர்.
'விருதம்' என்றால் 'பழமை' என்ற பொருளை குறிகின்றது. இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொண்ட சுந்தரர், இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றி படாமலேயே சென்றுவிட்டார். ஏனென்றால் இவ்வளவு பழமைவாய்ந்த கோவிலைப்பற்றி பாடல் பாட சுந்தரருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் சிவபெருமானுக்கு சுந்தரின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. சிவனுடன் இருக்கும் அம்பாளுக்கும் அதே விருப்பம் தான். சுந்தரர், பாடலை பாடாமல் சென்றதில் சிவபெருமானுக்கு வருத்தம் இருந்தது. சிவபெருமான் முருகனை அழைத்து நடந்ததை கூறினார். முருகப்பெருமான் உடனே வேடனாக உருமாறி சுந்தரரிடம் சென்று அவர் கையில் இருந்த செல்வத்தை எல்லாம் திருடி விட்டார்.
இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல. அந்த இறைவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதையெல்லாம் என்னிடம் திருப்பி கொடுத்துவிடு' என்று அந்த வேடனிடம் முறையிட்டார். உனக்கு இந்த பொருட்கள் எல்லாம் திரும்பவும் வேண்டுமென்றால் திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வேடன் ரூபத்தில் இருந்த முருகன் மறைந்து விட்டார்.
அந்த சிவபெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்த சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று ஈசனிடம் மன்னிப்பு கேட்டு பாடலை பாடி இழந்த செல்வத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார். சுந்தரரை வழிமறித்த வேடன், முருகப்பெருமான்தான் என்பதை உணர்த்துவதற்கு திருமுதுகுன்றம் மேற்கு பகுதியில், சுந்தருக்கு காட்சியளித்து அருள் பாவித்தார் முருகன். காட்சியளித்த அந்த இடத்தில் 'குளஞ்சி' எனப்படும் மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் 'குளஞ்சியப்பர்' என்ற பெயரைக் கொண்டது. காலப்போக்கில் 'குளஞ்சியப்பர்' என்ற பெயர் மருவி 'கொளஞ்சியப்பர்' என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
பலன்கள்
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சீட்டு கட்டுதல். நம் மனதில் இருக்கும் குறைகளை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து கொளஞ்சியப்பரின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்பு ஒரு சிறிய நூலில் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் தொங்க விட்டால் நினைத்த காரியமானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் வேண்டிக்கொள்ளும் கோரிக்கையானது நிறைவேறிவிட்டால் அந்த சீட்டை திரும்பவும் வந்து பெற்றுக் கொள்கின்றேன், என்றும் வேண்டிக்கொண்டு, நம் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்ட பின்பு, திரும்பவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கொளஞ்சியப்பரை வழிபட்டு செல்வது வழக்கமாக இருக்கிறது.
- அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
- ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.
அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.
இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.
- ஆவணி அவிட்டம் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும்.
- குளக்கரைகளில் பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாதவர் ஒரு ஒரு பூணூல், திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்து கொள்வர். அதன்படி ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.
ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30-ந்தேதி புதன்கிழமை வருகிறது. காயத்ரி ஜெபம் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஆவணி அவிட்டம் அன்று இரவு 9.58 மணிவரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் பவுர்ணமி திதி காலை 10.45 மணி வரை மட்டுமே உள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை எமகண்ட நேரம். இதனால் பூணூல் மாற்றுபவர்கள் காலை 7.15 மணிக்கு முன்பாக மாற்றி விட வேண்டும். முடியாதவர்கள் 9.15 முதல் 10.15 வரையிலான நல்ல நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
- பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
- அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்:
ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
- புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.
- சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
- சக்தியானவள் ‘அட்சர சுந்தரி’ என்றும் போற்றப்படுகிறாள்.
படைப்பு கடவுள் என்று அறியப்படும் பிரம்மதேவன், தன்னுடைய படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க நான்கு பேரை தோற்றுவித்தார். சனத்குமாரர், சனகர், சதானந்தர், சனாதனர் ஆகிய அந்த நால்வரும், பிரம்மபுத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நால்வரும் தோன்றிய உடனேயே ஆன்மிக அறிவில் ஆழ்ந்து, நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர்.

இவர்களில் முதல்வரான சனத்குமாரர், ஒரு முறை சதச்ருங்க மலை மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த ஈசன், ரிஷபாரூடராக அங்கே தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானம் காரணமாக சனத்குமாரர், கண் விழித்துப் பார்க்கவில்லை.
இதனால் அவரை எழுப்ப சிவபெருமான் தன் கையில் இருந்த டமருகத்தை (உடுக்கை) வேகமாக அசைத்தார். அந்த உடுக்கையில் இருந்து 'டம்.. டம்..' என்று எழுந்த நாதமே, சமஸ்கிருதத்தின் 'அ முதல் க்ஷ' வரையான 51 எழுத்துக்கள் ஆகின என்றும், மேலும் அந்த எழுத்துக்கள் பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம் போல தெறித்து விழுந்தன என்றும் ஆன்மிக சான்றோர்கள் நம்புகின்றனர்.

இந்த 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனால் சக்தியானவள், 'அட்சர சுந்தரி' என்றும் போற்றப்படுகிறாள். 51 அட்சரங்களுக்கான தேவிகளின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* அமிர்தா தேவி
* ஆகர்ஷணீ தேவி
* இந்திராணி தேவி
* ஈஷிணி தேவி
* உமா தேவி
* ஊர்த்வகேஷி தேவி
* ருத்திதாயீ தேவி
* ரூகார தேவி
* லுகார தேவி
* லூகார தேவி
* ஏகபாத தேவி
* ஐஷ்வர்யாத்மிகா தேவி
* ஓம்கார தேவி
* ஔஷதா தேவி
* அம்பிகா தேவி
* அக்ஷரா தேவி
* காராத்ரி தேவி
* கண்டிதா தேவி
* காயத்ரி தேவி
* கண்டாக்ர்ஷிணி தேவி
* டார்ணா தேவி
* சாமுண்டா தேவி
* சயார்தா தேவி
* ஜயா தேவி
* ஜங்காரிணி தேவி
* ஞானரூபா தேவி
* டங்கஹஸ்தா தேவி
* டங்காரிணி தேவி
* டாமரி தேவி
* டங்காரிணீ தேவி
* ணார்ணீ தேவி
* தமஸ்யா தேவி
* ஸ்தாண்வீ தேவி
* தாக்ஷாயணி தேவி
* தத்யா தேவி
* நார்யா தேவி
* பார்வதி தேவி
* பட்காரிணி தேவி
* பந்தினி தேவி
* பத்ரகாளி தேவி
* மகாமாயா தேவி
* யக்ஷஸ்வினி தேவி
* ரக்தா தேவி
* லம்போஷ்டி தேவி
* வரதா தேவி
* திரு தேவி
* ஷண்டா தேவி
* சரஸ்வதி தேவி
* ஹம்ஸவதி தேவி
* பந்தமோகினி தேவி
* க்ஷமா தேவி
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
- இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.
அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.
இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.
திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.

பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.
சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.
- கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது.
- வடக்கு பொய்கைநல்லூரில் மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
வடக்கு பொய்கைநல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.

இவ்வணிகரின் துணைவியார் தினமும் உணவு சமைத்து பாத்திரத்தில் வைத்து எடுத்துச் சென்று கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார். உடல் தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசி தீர உணவிடுமாறு வேண்டி நின்றார்.
மனம் இறங்கிய அம்மையார், சிறிதும் தாமதிக்காமல் கொண்டு வந்த இலையை அந்த இடத்திலேயே விரித்து தம் கணவருக்காக எடுத்து வந்த உணவை சிவனடியாருக்கு படைத்தார்.
பசித்துயர் தீர்த்த அடியார் அந்த அம்மையாருக்கு ஆசிகள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். அம்மையாரும் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டு வருவதற்காக தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.
சிவனடியார் அம்மையாரை தடுத்து இந்த பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக்கொண்டு உன் கணவரின் இருப்பிடம் சென்று அவனுக்கு உணவு படை என்று கூறி அங்கிருந்து அகன்றார்.
அம்மையாரும் அடியவர் சொன்னது போல் கணவரின் இருப்பிடம் சென்று, அவரின் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! பாத்திரங்களில் உணவு குறையாமல் எடுத்து வைத்தது போல் அப்படியே இருந்தது!
அம்மையாரோ நடந்தது எதையும் சிறிதும் வெளிக்காட்டாமல் கணவருக்கு உணவு படைத்தார். அதனை உண்ட கணவர் உணவு என்றும் இல்லாத அளவுக்கு சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மையை கூறுமாறு கேட்டார்.
அம்மையாரோ நடந்ததை நடந்தபடியே கணவருக்கு எடுத்துரைத்தார். இதனை கேட்டு வியந்து போன மஞ்சுபத்து செட்டியார் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.
அங்கே சிவனடியாரை காணவில்லை. மணல் வெளியில் 2 திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த அவரின் துணைவியாரின் 2 அடிச்சுவடுகளும் காணப்பட்டன.

இந்த திருவிளையாடலை நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரியவந்தது.
சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானை காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அந்த காட்சி கிட்டவில்லையே என வேதனை அடைந்தார்.
இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுல பெண்ணிடம் அமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி மாதம் பரணி நாளாகும். எனவே, இந்த நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாளாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 13-ந்தேதி தேரோட்டம்-மகாதீபம்
- வருகிற 12-ந் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.
கார்த்திகை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.
அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.
- சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை உகந்த தினமாகும்.
- சோமவார விரதம் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை (திங்கட்கிழமை) கார்த்திகை மாத 4-வது சோமவார விரத தினமாகும். சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளதால் திங்கட்கிழமையை வடமொழியில் சோமவாரம் என்று அழைக்கப்பது உண்டு.
சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவபெருமானின் தலையில் நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தை பெற்றார் சந்திர பகவான். சோமவார விரதத்தை சந்திர பகவானே முதன் முதலில் அனுஷ்டித்ததாகவும், அதனாலேயே இதற்கு சோமவார விரதம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது. சிவபெருமானுக் குரிய விரதங்களில் சோமவார விரதம் மிக சிறப்புடையது.

இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே கடை
பிடிக்கின்றனர். ஆனால் இவ்விரதத்தை எல்லா திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கலாம்.
திங்கட்கிழமையில் சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி, வில்க இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமன் என்பதற்கு பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்ற பொருளும் உண்டு. எனவே, சோமவார விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள்.
கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்க இவ்விரதம் மிகச்சிறந்தது. திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும்.
மனக்குழப்பத்தால் துன்பப்படுபவர்கள் சோமவார விரதத்தை கடைபிடித்தால் மனத்தெளிவு உண்டாகும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். காரியத் தடைகள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கடன், வறுமை போன்றவை நீங்கி செல்வம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும். இந்து மதத்தில், கார்த்திகை மாதத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது, ஏனெனில் இந்த மாதத்தில், மகாதேவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமான் தன் பக்தர்களின் மீது ஒரு சிறப்புக் கண் வைத்திருக்கிறார்.
சிவபெருமான் மகிழ்ந்தால், பக்தர்களின் தொல்லைகள் அனைத்தும் தானாகவே நீங்கும். சிவபெருமான் பிரபஞ்சத்தின் அனைத்து தீமைகளையும் அழிக்கிறார். அம்மாதத்தில் தான் சோமவார விரதம் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம் ஆகும். இந்த விரதம் கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பதன் பல நன்மைகள் உள்ளன.
திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது திருமண தாமதம் உள்ளவர்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்த விரதத்தை பெண்கள் பெரும்பாலும் நல்ல கணவனைப் பெறுவதற்காக கடைபிடிக்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் வரும் 16 திங்கட்கிழமைகளில் விரதத்தைப் கடைப்பிடிப்பது சிவபெருமானுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், அவர் தனது பக்தர்களுக்கு செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. அதுபோல் சிவனை திருமணம் செய்து கொள்வதற்காக பார்வதி சோமவர் விரதத்தை கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

சோமவார (திங்கட்கிழமை) என்பது சிவபெருமானின் ஆயிரம் பெயர்களில் ஒன்றான சோமேஸ்வரா என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. தட்சனின் சாபத்தில் இருந்து தப்பவும், சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அவரது மெத்தை பூட்டுகளில் ஒரு இடத்தைப் பெறவும் சந்திரன் சோமவார விரதம் கடைப்பிடித்ததாக நம்பப்படுகிறது.
சூரிய உதயம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை விரதம் இருக்க வேண்டும்.
நீராடிவிட்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் சிவன் கோயிலுக்குச் செல்லலாம் அல்லது வீட்டில் பிரார்த்தனை செய்யலாம்.
அன்றைய தினம் 'ஓம் நம சிவாய' என்று ஜபிக்க முயற்சிக்கவும். நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது நாள் முழுவதும் அதை உச்சரிக்கலாம்.
விரத உணவுகளை அன்றைய தினம் உண்ணலாம். பழங்கள் மற்றும் பழச்சாறுகளும் சாப்பிடலாம்.
பிரதோஷ காலத்தில் சிவனுக்கு மாலை பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்.
மறுநாள் காலை சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஜாதகத்தில் சந்திர கிரகத்தின் நிலை வலுப்பெறும். இதனால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
திருமணமாகாத பெண்கள் சோமவார விரதம் இருப்பதன் மூலம் பலன்கள் கிடைக்கும். 16 திங்கட்கிழமைகள் விரதம் இருப்பதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு சிறந்த வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுகிறது, இது வேலை சிக்கல்களைத் தீர்க்கவும், வியாபாரத்தில் லாபம் பெறவும் உதவுகிறது.
புராணங்களின்படி, சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஒரு நபரின் அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுகிறது.
சோமவார விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் தாம்பத்திய வாழ்வு மகிழ்ச்சியடைவதோடு, எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடும். இந்த விரதத்தை ஆண் பெண் இருபாலரும் அனுஷ்டிக்கலாம்.

* சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, சிவன் படத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை சிவனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.
* இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
* அன்றைய தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும்.
* மாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை நிறைவு வேண்டும்.
* தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம்.
சோமவார விரத திருநாளன்று சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் உருவப் படத்திற்கு வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.
அதேபோல் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் அவ்வப்போது நீராகாரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது பால், பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம். சிவபெருமானுக்குப் பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்கலாம்.
இதேபோல் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து சோமவார விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் நமது வேண்டுதலில் கட்டாயம் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.
- 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
- எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற இடத்தில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது, ஜெனகை மாரியம்மன் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் இருக்கும் இடத்தை இதற்கு முன் காலத்தில் 'ஜெனகாயம்பதி', 'சதுர்வேதிமங்கலம்', 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்', 'ஜெனநாத சதுர்வேதி மங்கலம்' என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.

தல வரலாறு
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர் தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து நீர் எடுத்து வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி நதியில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நதி நீரில் தேவலோக கந்தர்வன் ஒருவரின் பிம்மம் விழுந்தது. அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ரேணுகாதேவி, அந்த நிமிடத்தில் மனதால் பதிவிரதை தன்மையை இழந்தார்.
அதோடு அவர் நீர் எடுக்க கொண்டு வந்த மண்குடமும் உடைந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டார். மறு கேள்வி இன்றி பரசுராமரும் தன்னுடைய தாயின் தலையை கொய்தார்.
உடனே ஜமதக்னி முனிவர், "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று கேட்டார். அப்போது பரசுராமர், "என் தாயின் உயிரை மீண்டும் தர வேண்டும்" என்று கேட்டார்.
அதன்படி ஜமதக்னி முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மந்திரம் ஓதி, ரேணுகா தேவியின் மீது தெளித்து அவரை உயிர்ப்பித்தார்.
ஆனால் அந்த உயிர், ஆக்ரோஷம் கொண்டு பெண்ணாக அவரை மாற்றியது. இந்த ஆக்ரோஷத்தைப் அடக்கும் பொருட்டு, இத்தலத்தில் மாரியம்மன் எழுந்தருளியதாக தல வரலாறு கூறுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் கருவறையில் இரண்டு அம்மன்கள் இருப்பதைக் காண முடியும். கருவறையில் அமர்ந்த நிலையில் சாந்தமான ஜெனகை மாரியம்மன் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் சந்தனமாரி என்ற பெயரில் நின்ற நிலையில் ஆக்ரோஷமான ரேணுகாதேவி காட்சி தருகிறார்.
இந்த ஊர், ராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் 'ஜெனகபுரம்' என்றும் முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இங்குள்ள கோவிலில் அமர்ந்த மாரியம்மனுக்கு 'ஜெனகை மாரியம்மன்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்கோவில் தல விருட்சமாக வேப்பமரம் மற்றும் அரச மரம் ஆகிய இரண்டு மரங்கள் உள்ளன.
எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டுகிறார்கள். அப்போது அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தத்தை வாங்கிக் குடிக்க வேண்டும்.
இந்த தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்ததாகும். பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, இந்த கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். இந்த ஆலயத்தில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில், ஒவ்வொரு ஆண்டும் மழைத் தூறல் விழுவது அம்பாளின் அருள் மழையே என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளன்று ஜெனகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்.