என் மலர்
நீங்கள் தேடியது "Big Temple"
- தஞ்சாவூர் பெரியகோவிலில் வியக்க வைக்கும் சிலைகள் நிறைய இருக்கின்றன.
- ஒரு சிற்பம் கற்பனையின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். மேலும் தமிழர் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவில் அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டிட கலைநுட்பத்துக்கு சான்றாக யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இத்தகைய தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் பெரியகோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் வியக்க வைக்கும் சிலைகள் நிறைய இருக்கின்றன. இதில், சிற்பங்கள் ஒவ்வொன்றும் அக்கால நிகழ்வுகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், கருத்தையும் உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிற்பம் கற்பனையின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.இக்கோவிலின் இரண்டாம் நுழைவு ராஜராஜன் வாயிலில் மிகப் பிரமாண்டமான இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரம் உடையவை. இச்சிலைகளில் ஒன்றான இடதுபுறம் உள்ள சிலைதான் வியப்பை அளிக்கிறது.
இதில், துவாரபாலகரின் வலது கால், அவரது காலடிக்குக் கீழ், ஒரு பொந்தில் இருந்து வரும் மலைப்பாம்பு, எலியைக் கவ்வுவது போல ஒரு பெரிய யானையைத் தனது வாயில் கவ்விக்கொண்டு இருக்கிறது.யானையின் பின் பகுதி முழுவதும் அந்த மலைப்பாம்பின் வாய்க்குள் இருக்கும் நிலையில், அதன் தலையும், முன் கால்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
அதாவது ஒரு யானையை விழுங்கும் அளவுக்கு அந்த மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அந்த மலைப்பாம்பு மிகப்பிரம்மாண்டம் என்றால், அது சுற்றிக் கொண்டு இருக்கும் காலுக்குச் சொந்தக்காரரான துவாரபாலகர் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அவர் மிகப் பெரியவர் என்றால், அவருடைய காவலில் உள்ளே இருக்கும் அவருடைய எஜமானரான சிவன் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும் என்பதை நம் கற்பனையின் உச்சிக்குக் கொண்டு போன அச்சிற்பியின் பின்னணியில் இருக்கும் மாமன்னன் ராஜராஜனின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பெரியவர் என்று மமதையில் செல்ல கூடாது என்றும் நம்மை விட பெரியவர் உள்ளே இருக்கிறார் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக உள்ளது. வியக்கத்தக்க உள்ள இந்த சிலைகளை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
- வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
- இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது.
வராகி அம்மனுக்கு 18-ந்தேதி மாலையில் இனிப்பு அலங்காரமும், 19-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 20 -ந் தேதி குங்குமம் அலங்காரமும், 21--ந் தேதி சந்தன அலங்காரமும், 22-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23-ந் தேதி மாதுளை அலங்காரமும், 24-ந் தேதி நவதானிய அலங்காரமும், 25-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26-ந்தேதி கனி அலங்காரமும், 27-ந்தேதி காய்கறி அலங்காரமும் 28-ந் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
- நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 6 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
- திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும்.
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
- உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
- கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தஞ்சாவூர்:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு உழவாரப்பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று காலை புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதற்கு மன்ற நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார்.
இதில் இந்த மன்றத்தை சேர்ந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து 250 பேர் கலந்து கொண்டு வளாகத்தில் இருந்த தேவையில்லாத புல் செடிகளை அகற்றி சுத்தப்ப டுத்தினர். குப்பைகளை அகற்றினர்.
இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை-2005 இயக்கம், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், உழவாரப்பணி குழு நிர்வா கிகள் புண்ணியமூர்த்தி ,செழியன், சீனிவாசன், முத்தமிழ் ,ஜெய்சங்கர் ,விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
இதையடுத்து பெரிய கோவிலில் இருந்து உழவாரப்பணி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது தெற்கு வீதி , திலகர் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்றது. பின்னர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் அந்தந்த கோயில்களில் சுத்த பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இன்று மாலையில் பெரிய கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளன.
- அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
- பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆண்டுதோறும் எல்லா சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தண்ணீர், எண்ணெய், இளநீர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நுழைவுவாயில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், 108 சிவலிங்கங்கள், நந்தி, முருகன், வருணபகவான், சண்டீகேஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை வடக்குஅலங்கத்தில் உள்ள வடபத்ர காளியம்மன், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
- கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக தஞ்சை பெரிய கோவில் உள்ளது.
- சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் வாய்ந்தது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பெரிய கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் கொலு கண்காட்சி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.
- இன்று தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- நவராத்திரி நாட்களில் தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவின் முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
- பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்புவழிபாடு நடைபெற்றது.
திருப்புகழில் குறிப்பிடப்படும் ஆறுபடைகளில் முருகப்பெருமான் எவ்வாறு எழுந்தருளி உள்ளாரோ? அதே போல் தஞ்சை மாநகரில் உள்ள 6 கோவில்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 44-வது ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் தஞ்சை பெரியகோவிலில் இருந்து நேற்றுகாலை புறப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன்கோவிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.
தொடர்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோவில் (பழமுதிர்ச்சோலை), குறிச்சி தெரு முருகன் கோவில் (திருத்தணி), தஞ்சை ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோவில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோவில் (பழனி) ஆகிய கோவில்களுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். இறுதியாக தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு (திருச்செந்தூர்) பக்தர்கள் சென்றனர்.
பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆறுபடை முருகனையும் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தஞ்சை பெரியகோவிலில் பாதயாத்திரை நிறைவடைந்தது. இதையடுத்து பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்புவழிபாடு நடைபெற்றது. பாதயாத்திரையின் முன்பு பெண்கள், ஆண்கள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருந்த சிறிய சப்பரமும் பக்தர்களால் இழுத்து வரப்பட்டது.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.
தஞ்சாவூர்:
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்வர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.
இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பலர் தங்களது குடும்பத்தி னருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.
கோவில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலையில் இதை விட கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் தஞ்சை மணிமண்டப பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
- பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்திபெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி பெருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில் நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், பால், மஞ்சள், இளநீர், கரும்புசாறு, நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு அபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அத்துடன், நுாற்றுக்கணக்கான வளையல்களை கொண்டு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட இந்த கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க திருக்கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்கநாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.