என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood pressure"

    • நடனம் உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் சமநிலையையும் பராமரிக்கிறது.
    • மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

    நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது.

    எந்த வகையான நடனமும் ஒரு அற்புதமான கலை. இது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சமநிலையையும் பராமரிக்கிறது.

    இருப்பினும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்க நடனம் ஒரு மருந்தாக செயல்பட முடியும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது மன வலிமையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


    ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மன அழுத்தத்தில் நடனத்தின் விளைவைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். நடனம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு இடையிலான உறவு ஆராயப்பட்டது.

    நடனத்தால் உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும். நடனக் கலைஞர்களில் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது.

    நடனம் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றன.

    இசையுடன் இசைந்து நிகழ்த்தப்படும் நடன அசைவுகள் மன அழுத்தம், பயம் சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கின்றன. கார்டிசோல் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    உடலின் இயற்கையான மன அழுத்த நிவாரண வழிமுறைகளை திறம்பட பயன்படுத்துவதற்கு நடனம் ஒரு அற்புதமான கருவியாகும்.

    தினசரி மன அழுத்தங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனம் இசை மற்றும் தாளத்தை உள்ளடக்கியது.

    நடனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் படிகள் அடிக்கடி மாறுகின்றன. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த முறையில் மாற்ற வேண்டும்.


    இந்த பயிற்சி மூளைக்கு ஒரு வகையான உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில்தான் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

    திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.நடனமாடும்போது செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

    நடனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் ஈடுபடுத்துகிறது. நம் உடல்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
    • உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும்.

    உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும்.

    அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.

    120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், 'சிஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் 'டயஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். ஒரு மனிதருக்கு பொதுவாக 'சிஸ்டோலிக்' அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் 'டயஸ்டோலிக்' அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.

    ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும்.

    நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும். சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

    அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.

    • உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
    • மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும்.

    எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.

    மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது. நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது. விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.

    குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும். எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.

    • ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.
    • ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

    ஒரு மனிதனின் சராசரியான ரத்த அழுத்த அளவாக 120/80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கீழாக செல்வது குறைந்த ரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    செம்பருத்தி இதழ் 5, வெண் தாமரை இதழ் 5, எலுமிச்சை பழச்சாறு போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.

    சீரகம், கொத்தமல்லி போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    வெண்தாமரை சூரணம் ஒரு டீஸ்பூன் காலை, இரவு சாப்பிடலாம்.

    சீரகம் சேர்ந்த அசைச்சூரணம் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    இதயத்தை வலுப்படுத்த மருதம்பட்டை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிடலாம்.

    வெள்ளைப்பூண்டு 5 பல் எடுத்து சுட்டு அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம்.

    தூக்கமின்மைக்கு ஒரு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காய்ச்சி தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடிக்கலாம்.

    சின்ன வெங்காயம் 5 எடுத்து சிறு துண்டுகளாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வர பல்லாண்டு வாழலாம்.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    • வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
    • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்:

    உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகம் படிவது, மன அழுத்தத்தில் இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

    அதனை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சில மாறுதல்களை செய்வதன் மூலம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

    * உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதனை தொடர்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    * வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த பழக்கங்களை அறவே தவிர்ப்பது அவசியமானது.

    * உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது. காய்கறி ஜூஸ் பருகுவதும், குறிப்பாக கோதுமை புல் ஜூஸ் பருகுவது நன்மை அளிக்கும்.

    * பூண்டு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பையும் குறைக்கக்கூடியது. அதனால் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது.

    * செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும். அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவி புரியும்.

    * மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவும்.

    • சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது.
    • சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன.

    இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப்பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. சிறுநீரகங்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது. ரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரை பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன. செரிமான அமைப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. அதேபோல் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் தீவிரத்தன்மை கொண்டவை.

    தண்ணீர் அவசியம்

    தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

    உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

    சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கினால் சிறுநீரக கற்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

    இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றாலும் சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.

    சிறுநீரக பாதிப்பில் அறிகுறிகள்:

    சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசுகிறது.

    சிறுநீரகங்கள் முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

    ரத்தத்தில் உள்ள கழிவுகளின் விளைவாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

    சிறுநீரக செயல்பாடு குறைவது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சிறுநீரகம் அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும், இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.

    • முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
    • படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும்.

    அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.

    சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    தினமும் நடைப்பயிற்சிக்கு செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.

    இதயத் துடிப்பு

    நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

    ஆற்றல்

    படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.

    ரத்த நாளங்கள்

    படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

    ரத்த ஓட்டம்

    ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.

    காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.

    ரத்த உறைவு

    படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.

    படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.

    • இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும்.
    • உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.

    உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதய நோய்களை தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    இதய நோயின் அறிகுறி, நோயை தடுக்க செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த தினத்தில் பல நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

    இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும். அதில் பாதிப்பு ஏற்பட்டால் உயிழப்பு உண்டாகும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும்.

    "இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.

    காற்று மாசுபாட்டை குறைத்தால் பொதுவாக மனிதர்களுக்கு வரும் இதய நோய்களை கனிசமாக குறைக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது. தேவையற்ற புகையை வெளியிடுவதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி உதவலாம்.

    மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையே மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி, தரமான தூக்கம் போன்றவற்றால் நமது உடல் சீராகும். இதயம் பலப்படும்.

    உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே மருத்துவர்களை அணுகி தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதேபோல் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவில் தேவையானவற்றை அதிகரித்து, தேவையில்லாததை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும். புகை இதயத்துக்கு முதல் பகையாகும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.

    எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களை குறைத்து உண்ணலாம். வயதானவர்கள் தவிர்ப்பது சிறந்தது. இதேபோல் சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும். பிரியமானவர்களிடம் பேசும்போது இதயத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன் என்று உதாரணத்துக்கு கூறுவோம். ஆனால் பலர் அந்த இதயத்தை பாதுகாக்கவே தவறிவிடுகிறார்கள். ஒருவர் இறக்கும்போது அவருக்கு மட்டும் பாதிப்பில்லை. அவருடைய மொத்த குடும்பமே பாதிக்கும். எனவே விலை மதிப்பில்லாத உயிரை காக்க இதயத்தை காப்போம். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

    • ஆரோக்கியத்துக்கு முதன்மையானது நடைபயிற்சி மட்டும் தான்.
    • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

    முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு முதன்மையானது நடைபயிற்சி மட்டும் தான். ஆனால் இதை பயிற்சியாக செய்யாமல் அன்றாட வேலைகளாக செய்து வந்தார்கள். இன்று நடைபயிற்சியே உடற்பயிற்சியாக செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம்.

    காலணிகள் இல்லாமல், பாதங்களை இயற்கையின் அதிசயமான கூழாங்கற்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்படி நடக்க வேண்டும். 10 நிமிடம் வலதுபுறமாகவும், பத்து நிமிடம் இடதுபுறமாகவும் தொடர்ந்து நடந்து வந்தால், நோய்களுக்கு நிரந்தர விடை கிடைக்கும். தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது, உடல் எடையை குறைத்து ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

    செரிமான உறுப்புகளின் திறன் கூடும், சர்க்கரை நோயை விரட்டவும், அதிக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. உடலில் ஏற்படும் சோர்வை நீக்குவதுடன், மனதில் ஏற்படும் சோர்வையும் நீக்கி உற்சாகம் அளிக்கவும் உதவுகிறது.

    வாத நோய்களுக்கான முதன்மையான எதிரி, இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதை. கூழாங்கற்கள் பொருத்திய நடைபாதையில் தினமும் நடக்கும் போது முதியவர்களின் ரத்த அழுத்தம் ஓரளவு குறைந்ததாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதனை முழுமையாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

    தினமும், காலையிலும் மாலையிலும் மக்கள் இந்த வர்ம நடைபாதையைப் பயன்படுத்தி, சிறப்பாக உணர்வதாக ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. குதிகால் வலி, இடுப்பு வலி, அதிக ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் இந்த 8 வடிவ நடைபயிற்சியில் அதிகம் நடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.
    • தற்போது 16 சதவீத இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே அடிப்படை காரணமாக உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தம் அதிகரித்தால் இதயம் தொடர்பான பல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றன. எனவே ரத்த அழுத்தம் சரியாக இருக்கின்றதா என்பதை நாம் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு நபரும் தனது ரத்த அழுத்த அளவை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.பொதுவாக ஒவ்வொருவருக்கும் உடலில் ரத்த அழுத்தம் என்பது மில்லி மீட்டர்ஸ் ஆஃப் மெர்குரி (mmHg) என்னும் அளவீடால் அளக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.

    அதுவே 130/80-க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 என்ற அளவிலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதை குறைந்த ரத்த அழுத்தம் என்றும் கருதப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது.

    இது ஒல்லியானவர்கள், பருமனானவர்கள் என்று அனைவருக்கும் பாரபட்சமின்றி வருகிறது. ஆனால் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்கள் தான் அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 1.7 மில்லியன் பேரிடம் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    அதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மக்களுக்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் கேரள மாநிலத்தில் உயர் ரத்த அழுத்தத்தால் 37 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட் டங்களிலுமே உயர் ரத்த அழுத்தத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சூர் மாவட்டம் முதலி டத்தில் உள்ளது. அங்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு 62 சதவீதமாக உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக பத்தினம்திட்டா மாவட் டத்தில் 46.2 சதவீதமும், மலப்புரம் மாவட்டத்தில் 26.7 சதவீதமும் பாதிப்பு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த அறிக்கை கேரளாவில் நிலவும் அபாயகரமான நிலையை விளக்குகிறது.

    உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறப்பு விகிதம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது 16 சதவீத இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே அடிப்படை காரணமாக உள்ளது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் முதல் 16 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாகவும், 2035-ம் ஆண்டு இது 20 லட்சத்தை எட்ட கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பிற்கு பிறகு கேரளாவில் திடீரென கீழே விழுந்து இறந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்கள் கேரளாவில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் சுகாதாரத்தில் முன்னுதாரணமாக விளங்கிய கேரளாவில் தற்போது ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு நோய்கள் பரவுகின்றன.

    உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களே இத்தகைய உயிர் கொல்லி நோய்களின் அதிகரிப்புக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கேரளாவில் துரித உணவு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.

    ஷவர்மா உள்ளிட்ட அரேபிய உணவுகளை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக ஏராளமான ஒரு பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். பல கொடிய நோய்கள் பரவுவதற்கு இது போன்ற உணவு முறைகளை பின்பற்றுவதே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஆகவே உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை, கேரள அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.

    • நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதம் குறைகிறது.
    • இந்த திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சென்னையில் தொடக்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

    நடைப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.

    மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பொருட்டு 8 கிலோமீட்டர் நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதை 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை ஒரு முழு சுற்று சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவடைகிறது.

    மேலும் இத்திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர்கலைவாணி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், கவுன்சிலர் தமிழ்வாணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×