என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery river"

    • 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
    • கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகளை பாதுகாக்க கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மோகனதாஸ்,

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.
    • காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.

    கடந்த 3 நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது.

    இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் வருகிற 12-ந் தேதி காவிரி நதிநீர் ஒழுங் காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது. சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தான் வருகிறது.

    இந்நிலையில் திறந்து விடப்படும் தண்ணீரை மேலும் கர்நாடக அரசு குறைத்து வருவதால் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் வருகிற 20-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவில் முறையிட இருப்பதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசும் விரிவான விளக்கத்தை தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 3686 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. அதேபோல் கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை.
    • காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

    ஆலந்தூர்:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    இதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுதான் அமைத்தது.

    எனவே இப்போது மத்திய அரசிடம் முறையிட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்கிறது. இன்று மாலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடக் கோரி வலியுறுத்த இருக்கிறோம்.

    காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தயவை நாடிதான், கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியிருக்கிறார்கள். எனவே கர்நாடகா தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்று பொய்யான காரணத்தை கூறுகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதே விமானத்தில் இந்தக் குழுவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சென்றார். இந்தகுழுவில் உள்ள மற்ற எம்பிக்கள் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.

    • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
    • போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர், விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய ப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு நாகேஸ்வ ரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்க ப்பட்டன.

    இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக் (திருவிடை மருதூர்), பூரணி (பாபநாசம்) உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி திறப்பு
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

    ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடக அரசு பெயரளவுக்கு கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 2-வது நாளாக நேற்று 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு 4 ஆயிரத்து 674 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.

    அதேபோல மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர் 2,799 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. இந்த மழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடி நீர் வந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3,367 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 39.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.13 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 38.57 அடியானது.

    • கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று 4-வது நாளாகவும் வினாடிக்கு 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 7ஆயிரத்து 134 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து 3ஆயிரத்து 837 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து 607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 607கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணை நீர்மட்டம் 76.52 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 1261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    • ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம்.
    • துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும்.

    திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும். துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்றும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்றும் பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இந்த ஆண்டு துலாஸ்நானம் நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள அகண்ட காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள்.

    பின்னர் சிறிய பல்லக்கில் பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவருக்கு ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அஸ்திர தேவர் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீரை ஊற்றிய பின்னர், அஸ்திர தேவர் அகண்ட காவிரி ஆற்றில் புனித நீராடினார்.

    அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நமசிவாயா..., நமசிவாயா... என்ற கோஷத்துடன் புனித நீராடினார்கள். காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன், கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி நேற்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

    • ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.
    • சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டனர்.

    பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டியபோது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

    எனவே, காசிக்கு நிகராக மயிலாடுதுறை போற்றப்படுகிறது.

    நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.

    கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புஷ்கர தொட்டியில் போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாக புனித நீர் தெளிக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்திருந்தது.

    காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடினர்.

    தொடர்ந்து அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனாகிய அய்யாறப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோவில் விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு பக்க கரைகளிலும் எழுந்தருளினர்.

    அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

    முக்கிய நிகழ்வாக சிவ வைணவ தலங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவமாக திருக்கல்யாணம், தேரோட்டம், அமாவாசை தீர்த்தவாரி, கடைமுழுக்கு, முடவன் முழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    இதனால் சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவது 'துலா ஸ்நானம்'
    • 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் சங்கமம் ஆவதாக ஐதீகம்

    ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று கூறுவார்கள். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், உலகில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும், 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும், காவிரி நதியில் சங்கமம் ஆவதாக ஐதீகம். அன்றைய தினம் மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் முன்பு உள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்புக்குரியது.

    புண்ணிய நதிகளில் நீராடினால் தங்களின் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கையில், பலரும் புனித தீர்த்தங்களில் நீராடி வருகிறார்கள். அப்படி தங்களை நாடி வருபவர்களின் பாவங்களைப் போக்கி, அந்த பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக்கொள்கின்றன.

    இதனால் அனைத்து பாவங்களையும் சுமந்து மாசுபட்டு நிற்கும் புண்ணிய நதிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில், மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

    அப்படி அனைத்து புண்ணிய நதிகளும் வசிக்கும் காவிரியில், ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயமாகி, 6 நாழிகைக்குள் நீராட வேண்டும். அதாவது சூரியன் உதயமாகி 2 மணி நேரத்திற்குள் காவிரியில் நீராட வேண்டும். துலா மாதத்தில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் கூட காவிரியில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

    ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்றாவது மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். ஐப்பசி கடைசி நாள் நீராடலை, "கடை முழுக்கு' என்று அழைக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும். திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றி பாடியுள்ளனர்.

    கோவிலின் முதல் சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் அம்மன். மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால். இத்திருத்தலத்திற்கு 'மயிலாடுதுறை' என்று பெயர் வந்தது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்- பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நடராஜப்பெருமான், மயூர தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில், இந்த நடராஜருக்குத் தான் முதல் பூஜை செய்யப்படும்.

    முடவன் முழுக்கு

    ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியின் துலா கட்டத்தில் நீராடினால் நன்மைகள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பதால், அந்த நாளில் நீராட ஒரு சிவ பக்தர் நினைத்தார். ஆனால் அவரால் நினைத்தபடி ஐப்பசி மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் நீராட முடியவில்லை. அந்த சிவ பக்தர், ஒரு கால் பலகீனமான மாற்றுத் திறனாளி. அந்த பக்தர் காவிரி துலா கட்டத்திற்கு வருவதற்குள், ஐப்பசி மாத இறுதி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்று முடிந்து விட்டது.

    அப்போது அவர் சிவபெருமானை நினைத்து தன் வேதனையை வெளிப்படுத்தினார். "இறைவா.. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லையே" என்று புலம்பினார். அப்போது சிவபெருமான் அசரீரியாக தோன்றி, `கார்த்திகை முதல் நாளில் நீ, இந்த துலா கட்டத்தில் நீராடு. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் உனக்கும் கிடைக்கும்" என்று அருளினார்.

    அதன்படி கார்த்திகை மாத முதல் நாளில், அந்த சிவபக்தர் தீர்த்த நீராடி பலன்களை அடைந்தார். எனவே இந்த நிகழ்வு கார்த்திகை முதல் நாளில் 'முடவன் முழுக்கு' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த தினத்திலும் பக்தர்கள் காவிரி தீர்த்தத்தில் நீராடினால், உரிய பலன்கள் கிடைக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூர்நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    ×