என் மலர்
நீங்கள் தேடியது "lake"
- காணை போலீசார் விசாரணை
- உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன.
- ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டலத்துக்குட்பட்ட பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கீழ்கட்டளை ஏரிஉள்ளது. இது கிழக்குகடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பெரும்பாலான ஐ.டி நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர். புறநகர் பகதிகளிள் அசூர வளர்ச்சியின் காரணமாக இந்த சாலையும் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டு உள்ளது. கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன. இதானல் ஏரி இடமும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. மேலும் ஏரிக்கு வரும் கழிவுநீரும் அதிகரித்து உள்ளது. கழிவு நீர் பிரச்சனை குறித்து எந்த ஒரு திட்டமிடலும் இல்லாததால் ஆறுபோல் கழிவு நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக 18, 19,20, ஆகிய வார்டுகளில் நிலத்தடி நீர் பாதிக்கபட்ட தோடு குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோல் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அங்குள்ள மீன்களும் அதிக அளவில் இறந்து வருகின்றன. கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பா.ஜ.க.வினர் கீழ்கட்டளை ஏரியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறும்போது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பெருமாள், ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சூரியநாராயணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்குள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகளை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்ய உள்ளனர். அதனை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. வெளியிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகர மேம்பாட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சியை எப்படி மேம்படுத்துவது என்ற பணியை செய்ய வேண்டும். ஏரி மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தரமான வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து போராடுவோம். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அப்போது குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்நது.
இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2726மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி. இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 3115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 8811 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காணமாக ரெயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் காணப்படுகிறது. தடபெரும்பாக்கம் காலனி, துரைசாமி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நேற்று இரவு முதல் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம், திருப்பாலைவனம் பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
- ஏரிகளை பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன், ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத புள்ளி விவர கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டுள்ளது.
கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேப்பூர் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்
- கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.
கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது, ஏரியில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கர்நாடகாவில் திம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அந்த சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:
பெரம்பலூர் அருகே வேப்பூர் ஏரியில் இருந்த மனித எலும்புக்கூட்டை எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் பெரிய ஏரி உள்ளது.
ஏரியில் தற்போது தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் சாக்கில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சாக்கினை ஏரி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இழுத்துக் கொண்டு வந்தது.
இதைக்கண்ட ஊர் மக்கள் நாய்கள் இழுத்து கொண்டிருந்த சாக்கில் என்ன இருக்கின்றது என்று பார்த்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு, கை, கால்கள், எலும்பு துண்டுகள் மற்றும் முழுக்கை சட்டையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து குன்னம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏரியில் சாக்கில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
ஏரியில் புதைந்து மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு சாக்கில் இருந்தது ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து ஏரியில் புதைத்து சென்றார்களா? அல்லது மாந்திரீ கத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? என சந்தேகிக்கின்றனர்
- பாறையில் நின்று செல்பி எடுக்க முயனறபோது பாறை இடுக்கில் இளம்பெண் தவறி விழுந்துள்ளார்.
- தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இளம்பெண்ணை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கர்நாடகாவின் மைடாலா ஏரிக்கு அருகே இளம்பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 12 மணிநேர போராட்டத்திற்கு அப்பெண்ணை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள மைடாலா ஏரிக்கு தனது நண்பர்களுடன் ஹம்சா என்ற 19 வயது இளம்பெண் சென்றுள்ளார். அப்பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே, பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது பாறை இடுக்கில் அவர் தவறி விழுந்துள்ளார்.
உடனே அவளது நண்பர்கள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்கள் எவ்வளவு முயன்றும் அவளை காப்பாற்ற முடியவைல்லை. ஆகவே உடனடியாக தீயணைப்புத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் அப்பெண்ணை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று மாலை விழுந்த அப்பெண், இன்று பிற்பகலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாறை இடுக்கில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம்.
- கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது.
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வேட்டையன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் அதன் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மொரப்பூர் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேட்டையன் ஏரி 22 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியதால் கிராம மக்கள் ஆடுவெட்டி கொண்டாடினார்கள். இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது.
- ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
சென்னை:
தென்சென்னை பகுதியில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான மடிப்பாக்கம் ஏரி 62 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 2017-ம் ஆண்டு ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தது.
மேலும் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மடிப்பாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தொடங்கியது. ரூ.2 கோடி மதிப்பில் நடைபாதைகள், பெண்கள் உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.42 லட்சத்தில் வேலியுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏரி மடிப்பாக்கம் அய்யப்பன் நகர், கார்த்தி கேயபுரம், ராம் நகர், சதாசிவம் நகர், ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஏரியின் கரையோரங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை வீசி எறிவதாலும், களை செடிகள் அதிக அளவில் வளர்ந்திருப்பதாலும் மடிப்பாக்கம் ஏரி மீண்டும் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மடிப்பாக்கம் ஏரி மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல வசதிகளை செய்து கொடுத்தாலும், ஏரியை பராமரிக்க பாதுகாவலர்களும், தோட்டக்காரர்களும் இல்லை. எனவே சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் ஏரியை பாதுகாத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து வெள்ள தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மடிப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ஏரியை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
- போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தொடர் மழை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பிய நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஏரியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் 13 மில்லி கன அடி தண்ணீர் தேக்கி வைக்கவும், 20 அடி உயரத்தைக் கொண்டது.
ஃபெஞ்சல் புயல் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 63.30 அளவை எட்டியது. தற்போது அணைக்கு 375கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக்கு கருதி தினமும் 1125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெங்கட சமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி ஏரி நிரம்பி வாணியாற்று நீர் தற்போது தென்கரைக் கோட்டை ஏரியின் முழு அளவை எட்டியுள்ளது.
இதை அடுத்து திடீரென நேற்று அணையின் கிழக்குப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில்அரூர் கோட்டாட்சியர் சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஏரி பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு தீவிர பாதுகாப்பு பணியை எடுக்க தொடங்கினர்.
அதன்படி உடனடியாக ராமியமபட்டி- ஏ. பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை உடனடியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது,
போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது, அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் உடனடியாக ஏரியில் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெறியேற்றப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தென்கரைக்கோட்டை ஏரியில் பாதுகாப்புக் கருதி ஏரிக்கு வரும் நீர் பெருமளவு உபர் வெளியேற்றும் கால்வாய் வழியாக சில அடைப்புக்களை எடுத்து விட்டு கல்லாற்றில் தண்ணீர் அனுப்பப்பட்டு அரூர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையினர் விரிசலை தடுக்கும் பொருட்டு உடனடியாக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் செய்து ஏரியில் விரிசல் பகுதியில் அடுக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி காட்டுத் தீயாக இந்தப் பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
- ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.
- காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள மிகப்பெரிய ஏரியாக திருக்காலிமேடு ஏரி விளங்குகிறது. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காலிமேடு, திருவீதி பள்ளம், நத்தம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களை இந்த ஏரி விளைய வைத்தது. இதற்கி டையே காஞ்சிபுரம் வேகமாக நகரமாக வளர்ச்சி அடைந்ததால் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டது. விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறின. அதன் பிறகு திருக்காலிமேடு ஏரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஏரியின் அனைத்து பக்கங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் திருக்காலிமேடு ஏரி குப்பை மேடாக மாறி வருகிறது. இந்த குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் அடர்ந்த புகைமூட்டம் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது.
மேலும் காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் இந்த ஏரிக்கு வரும் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமி க்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் தூர்வாரப்படுவதும் இல்லை. இதனால் மழைநீர் இந்த காய்வாய்க்கு செல்ல முடியாமல் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழை காலங்களில் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த ஏரி மாசுபட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஏரியில் கருவேல மரங்களும் அதிக அளவில் இருப்பதால் புதர் மண்டி காணப்படுகிறது. காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில் இருந்தாலும், இந்த ஏரி முற்றிலும் பராமரிப்பு இன்றியே காணப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை விளைய வைத்த திருக்காலிமேடு ஏரி இப்போது குப்பை கிடங்காக மாறி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த ஏரி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரமாக உள்ளது. மேலும் இந்த ஏரியை அழிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே இந்த ஏரியில் லாரிகளில் கழிவுநீர் கொண்டு வந்து கொட்டுவதையும், குப்பைகளை கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஏரியை தூர்வாரி நன்றாக பராமரிக்க வேண்டும். ஏரியை சுற்றிலும் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்த பூங்கா மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன் இந்த ஏரியும் பாதுகாக்கப்படும். மேலும் காஞ்சிபுரம் நகரில் குடிநீர் பிரச்சனையும் தீரும். மழை காலங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருக்காலிமேடு ஏரியை சீரமைத்து அதை சுற்றி பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது' என்றார்.