என் மலர்
நீங்கள் தேடியது "M.K.Stalin"
- நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள்?
- மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.
திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் திரு.மு.க.ஸ்டாலின் ? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.
கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் ,
இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் அறிவாலயத்திற்கு, அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்?
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ?
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?
3வது மாடியில் சிபிஐ ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?
ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக.
மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் "தமிழ்நாடு மாடல்" ஆட்சி!
ஆனால், ஒன்றிற்கும் உதவாத,
உருப்படாத ஒரு வெற்று மாடல்
அரசை நடத்தி கொண்டு,
தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு,
பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள்,
மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் !
அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்-
உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா?
அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா?
எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்!
பாத்துக்கலாம் !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வரும் 4ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
- பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக்குவது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளி வந்தவுடன், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதலாவதாக அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.
திமுக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, இது தொடர்பாக முதலமைச்சர் 16.10.2022 அன்று கடிதம் எழுதி இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களில் திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் வரும் 4ந் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
- 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சென்னையில் 2 ஆம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது.
சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர்.

நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.
மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரி வெளியுறவு மந்திரிக்கு, முதலமைச்சர் கடிதம்.
- தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்,கைது சம்பவங்கள் தொடர்கின்றன.
தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்.
- ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும் திமுக தலைமை வலியுறுத்தல்.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் 12 ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் கூறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்கின்றனர்.
காந்தி கிராமம்:
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு பிரதமர் மதுரை வருகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வருவதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது.
- அடாத மழையிலும் விடாது பணியாற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நன்றி.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடித்தது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நடைபெறும் பணிகள் குறித்து அப்போது விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே, சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே.
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான் வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
- திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.
தாராபுரம் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.
கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.
தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
- வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.
சங்கரன்கோவில்:
வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பரமகுரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மாரிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் திருவேங்கடம் மாரிமுத்து மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
- விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
- சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி அக்சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- வடசென்னைப் பகுதிகளில் நேற்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.
சீர்காழி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.
சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்தது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் உதயமாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அவர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையொட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கு தென்காசி குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேற்று பார்வையிட்டார். அங்கு சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.