என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai"

    • மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார் மீது பேருந்து ஒன்று மோதியது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

    மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    • ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் புகழ்பெற்ற மும்பை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் முதலை யாரையும் பொருட்படுத்தாமல் அங்கு இருந்து அருகில் உள்ள பவாய் ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வனவிலங்கு நலச்சங்க நிறுவனர் பவான் சர்மா கூறுகையில், "ஏரியில் இருந்து வெளியே வந்தது பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டைபோட இடம் தேடி இருக்கும். அந்த பகுதியில் இருந்தவர்கள் முதலையை யாரும் துன்புறுத்தாத வகையில் பாதுகாத்து உள்ளனர். சிறிது நேரத்தில் முதலை தானாக ஏரிக்குள் சென்றுவிட்டது" என்றார்.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், முதலை நடமாட்டத்துக்கு வாய்ப்பு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    பவாய் பகுதியில் பத்மாவது ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    • மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
    • மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    மும்பை:

    மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.

    அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.

    • சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    மும்பை:

    மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.

    • மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
    • மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது சர்ச்சையானது.

    மகாராஷ்டிராவில் இந்தி Vs மராத்தி என்ற பிரச்சனை வெடித்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை பெரிதுபடுத்தி உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஏற்கனவே மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான சில தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது தான் இந்தப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் இனிமேல் மராத்தியிலும் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

    • மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது.
    • லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தலைமறைவாகிவிட்டார்.

    மும்பை:

    பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் நபர் ஒருவரிடம் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜி.எஸ்.டி. அதிகாரியை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக கூறும்படி கூறியுள்ளனர். அதன்படி புகார்தாரரும் ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.

    இதன்பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி புகார்தாரர் பணத்துடன் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது குறித்து அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
    • இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 6-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. 2 போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பெங்களூர் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

    பெண்கள் பிரீமியர் 'லீக்' போட்டியின் 7-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2 போட்டிளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது போட்டியில் பெங்களூரை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. டெல்லி அணி முதல் போட்டியில் 60 ரன்னில் பெங்களூரையும், 2-வது ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சையும் வீழ்த்தின.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சைபர் குற்றத்தில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார்.
    • மின்துறையில் இருந்து குறுந்தகவல் அனுப்புவது போல் மோசடி பேர்வழிகள் மும்பை பெண்மணியை ஏமாற்றியுள்ளனர்.

    மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை இழந்திருக்கிறார்.

    மின் கட்டணம் செலுத்தவில்லை என ஹேக்கர்கள் அனுப்பிய குறுந்தகவலை நம்பி, அவர்களை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டிருக்கிறார். மறுபுறம் பெண்மணிக்கு பதில் அளித்த ஹேக்கர்கள் பெண்ணின் கணினியில் டீம் வியூவர் (வேறொரு இடத்தில் இருந்தபடி மற்றவர் கணினியை இயக்கச் செய்யும் சேவை) எனும் செயலியை இன்ஸ்டால் செய்யக் கூறி இருக்கின்றனர்.

     

    இதை கேட்ட பெண், ஹேக்கர்களிடம் தனது கணினியை பயன்படுத்த அனுமதித்துள்ளார். இவ்வாறு செய்த சிறிது நேரத்தில், பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்டதை கூறும் நோட்டிஃபிகேஷன்கள் வந்துள்ளது. இதை பார்த்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.

    வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்பிஐ வங்கியை சேர்ந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மின் கட்டண பாக்கி இருப்பதை கூறும் எஸ்எம்எஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மொபைல் போனிற்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த எஸ்எம்எஸ்-இல் பணத்தை திரும்பி செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. இதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதன் காரணமாக அந்த பெண் எஸ்எம்எஸ்-இல் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தே ஹேக்கர்கள் நூதனமாக பேசி பெண்ணிடம் இருந்து அவரின் கணினியை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர். இவ்வாறு செய்த பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கியில் இருந்து ரூ. 4 லட்சத்து 62 ஆயிரத்து 959, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரம் பரிவர்த்தனைக்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது.

    இதை பார்த்து அதிர்ந்து போன பெண் உடனே எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனைகள் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    • வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது.
    • இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

    93 வயதான மூதாட்டி ஒருவர் எட்டு தசாப்தங்களாக நடைபெற்ற சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த எட்டு தசாப்தங்களாக நீடித்து வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது. ரூபி மேன்சன் என்று அழைக்கப்படும் இந்த குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள இந்த வீடு 500 முதல் 600 சதுர அடி அளவு கொண்டுள்ளது. இதனை மார்ச் 28, 1942 அன்று இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கையகப்படுத்தியது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    பின் ஜூலை 1946 ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கையகப்படுத்தும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதை எதிர்த்து அலைஸ் டிசோசா வழக்கு தொடர்ந்து இருந்தார். இவரது வீட்டை முன்னாள் அரசு அதிகாரியின் சட்டப்பூர்வ வாரிசுகள் பயன்படுத்தி வந்தனர்.

    கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அலைஸ் டிசோசா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களுக்காக கடந்த 80 ஆண்டுகளாக நீடித்தது. இவரது மனுவுக்கு வீட்டில் குடியிருந்த அப்போதைய அரசு அதிகாரியின் வாரிசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர்.

    வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், வீட்டை அலைஸ் டிசோசாவுக்கே ஒதுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் 80 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
    • அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

    இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.


    சல்மான்கான்

    மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் மலிஷா கார்வா.
    • இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலேயர்கள் உள்ளனர்.

    மும்பையின் தாராவியை சேர்ந்ச 14 வயது சிறுமி "ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" (Forest Essentials) எனும் அழகுசாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார்.

    ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலிஷா கார்வா. பின் மலிஷா கார்வா-வை ராபர்ட் ஹாஃப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலோயர்கள் (Followers) உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வளர்ந்து வந்த மலிஷா கார்வா ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் "லிவ் யுவர் ஃபேரிடேல்" எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், மலிஷா கார்வா அழகு சாதன பிராண்டின் விளம்பர முகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரை விளம்பர தூதராக அறிவிக்கும் பதிவில் ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ், "அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவளின் கனவுகள் அவள் கண் முன்னே நிறைவேறியது. மலிஷாவின் வாழ்க்கை, கனவுகள் உண்மையாகும் என்பதற்கு அழகான நினைவூட்டி என்றே கூறலாம் #BecauseYourDreamsMatter," என்று குறிப்பிட்டுள்ளது.

    இத்துடன் மலிஷா கார்வாவின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மலிஷா கார்வாவுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

    • சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் 2 முறை மட்டும் இயங்கும்.
    • காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்தநிலையில் மும்பை-தூத்துக்குடிக்கு இடையே தஞ்சை, கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கோடைகால நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் இரண்டு முறை மட்டும் இயங்கும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 2-ந் தேதியும் மும்பையில் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி (9.03 மணி), காஞ்சீபுரம் (10.08 மணி), கும்பகோணம் (மாலை 3.45 மணி), பாபநாசம் (3.59 மணி), தஞ்சை (4.23 மணி), மதுரை (இரவு 7.55 மணி), வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.

    தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மற்றும் ஜூன் மாதம் 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மதுரை காலை 6.30 மணி, தஞ்சை 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சீபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு 29-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.

    பயணிகள் பயன்பாட்டை பொருத்து, இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த ஒரே ரெயில் இயக்கத்தின் மூலம் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரெயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெயில்வே நிர்வாகத்துக்கு தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

    ×