என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Om Birla"

    • சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்
    • ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேறியது.

    இதற்கிடையே நேற்று நடந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி வக்பு மசோதா குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    அவர் பேசியதாவது, வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சோனியா காந்தியின் பேச்சு இன்று மக்களவை கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. சோனியா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஓம் பிர்லா, "இவ்வளவு விரிவான விவாதம் மற்றும் விதிகளின்படி முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டபோதிலும், ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படுவது இல்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே சோனியா காந்தி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும் என பாஜக எம்.பிக்கள் இன்று மக்களவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதன்பின் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

    • இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
    • பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


    பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. சிறந்த வலுவான இந்தியாவை உருவாக, ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

    நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு பிரச்சினையான சவால்களுக்கு தீர்வு காணும் திறனைப் நமது தேசம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றங்கள், எரிசக்தி உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்திய கல்வி‌ நிறுவனங்கள் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் முடிந்து தயாராகி விட்டது. வரும் 31-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது. இதில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், ஜனாதிபதி உரை பழைய கட்டிடத்தில்தான் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஓம் பிர்லா டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார் என பதிவிட்டுள்ளார்.

    • எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை வரமாட்டேன் என கூறியதாக தகவல்.
    • பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை தலைமை தாங்கி நடத்தினார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இவ்வாறு மக்களைவயில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக நேற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை நடவடிக்கைகள் இன்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
    • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

    இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

    உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

    குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.

    • சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
    • நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா

    மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.

    இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.

    ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.

    நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.

    "பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.

    • பாராளுமன்ற மக்களவையில் இருவர் நுழைந்து வண்ண புகை குண்டு வீசினர்.
    • உயர்மட்ட விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்து ஓடினர்.

    தொடர்ந்து அவர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் அதே சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தை பாதுகாக்க துணை சபாநாயகர் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ள நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுவாக மக்களவையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார்கள். துணை சபாநாயகர் பதவி கூட்டணி கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் பல ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமல் சபை செயல்பட்டு வருகிறது.

    சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரத்தில், பா.ஜனதா எம்.பி.க்களும் ஒருவர் அவையை வழிநடத்துவார். துணை சபாநாயகர் இருந்தால், அவர்தான் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்த அம்சங்களை கவனிப்பார்.

    2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு துணை சபாநாயகர் தலைமையில்தான் கூட்டு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஒத்திகை

    சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருக்கும்போது, சரண்ஜித் சிங் அத்வால் துணை சபாநாயகராக இருந்தார். அப்போது பல பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது இவ்வாறு நடத்தப்பட்டதற்கு அரசு மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    2007-ல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பாராளுமன்றம் மூடப்பட்டது.

    தற்போது புது கட்டடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் என நினைத்திருக்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    விமான நிலையம் போன்று

    இதனால் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உடல் முழுவதும் பரிசோதனை செய்யும் இயந்திரம் (body scanner machines) பாராளுமன்றத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 

    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது.
    • பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததும் பொருளாதார நிலை எப்படி மாற்றத்தை சந்தித்தது குறித்து வெள்ளை அறிக்கை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.

    • ராஜஸ்தானின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
    • கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, ஓம் பிர்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் மூன்றாவது முறை ஆட்சிக்கு மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.

    • பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
    • தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.

    எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.

    அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.

    துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.

    ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்தனர். ஆனால் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சபாநாயகர் தேர்தல் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை சபாநாயகர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது இல்லை. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார். ஆனால் இந்த தடவை இந்தியா கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் இருப்பதால் அவர்கள் வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா சார்பில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய ஓசையின்றி ஆலோசனை நடந்து வந்தது. ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி புதிய சபாநாயகர் ஆகலாம் என்று தகவல்கள் வெளியானது.

    ஆனால் கடந்த சில தினங்களில் அதில் மாற்றம் ஏற்பட்டு கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிக்கையை பாராளுமன்ற செயலாளர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் புதிய சபாநாயகர் தொடர்பாக அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வீட்டில் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. ராஜ்நாத்சிங், அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர்.

    இன்று காலை சபாநாயகர் தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் போனில் பேசினார்.

    ஏற்கனவே அவர் இது தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து இன்று காலை சபாநாயகர் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஒருமித்த கருத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரிடமும் ராஜ்நாத்சிங் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல் ஒரு நிபந்தனையை விதித்தார். துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதற்கு ராஜ்நாத்சிங் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்தார். ஆனால் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை பா.ஜ.க. அவமதிப்பதாக கருதினார்கள்.

    ராகுல்காந்தி இது தொடர்பாக பேட்டியளித்தபோது, "சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அலுவலகத்துக்கு காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க ராஜ் நாத்சிங் மறுத்து விட்டார்.

    இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து கே.சி.வேணுகோபாலும், டி.ஆர்.பாலுவும் புறப்பட்டு சென்றனர்.

    அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. கேரளாவை சேர்ந்த 8 தடவை எம்.பி.யான சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அடுத்த சில நிமிடங்களில் பாராளுமன்ற அலுவலகத்தில் சுரேஷ் தனது மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் 1946-ம் ஆண்டு முதல் இதுவரை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதே கிடையாது.

    இதற்கு முன்பு 17 தடவை அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகர் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்நிறுத்தி போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு ஓம்பிர்லா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை சபாநாயகர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடக்கும்போது எத்தகைய நடைமுறைகளை கையாள்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.

    பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர். எனவே ஓட்டெடுப்பில் ஓம்பிர்லா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2-வது முறையாக சபாநாயகர் ஆகும் ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

    ×