search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112989"

    மேட்டூர் அணைக்கு நேற்று 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 55.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 55.13 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை என்பதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. #PlasticBan
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. சிறுவியாபாரிகளும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தினர்.

    ஆனால் அதன்பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. இதனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சுற்றுலா இடங்களுக்கு செல்ல வத்தலக்குண்டு முக்கிய சந்திப்பு என்பதால் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவது இல்லை. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு குறைந்ததால் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவியத்தொடங்கியுள்ளன. பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது.

    எனவே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுவியாபாரிகளை குறிவைக்காமல் மொத்தமாக தயாரிக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #PlasticBan

    பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. #BrazilDamCollapse
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.

    இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. 
     
    அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    உள்ளூர் ஊடகத்தில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 188 ஆக உயர்ந்தது. மேலும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 108 பேர் மாயமாகி உள்ளனர் எனவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #BrazilDamCollapse
    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வெயில் வாட்டி வதைத்தது. உடலில் நெருப்பை அள்ளி போட்டதை போல வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.

    இதைபோல் இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்விசிறியை பயன்படுத்தினால் அனல் காற்றாக வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பலர் குடை பிடித்தபடியும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் துப்பட்டாவில் தலை மற்றும் முகத்தை மூடியபடியும் சென்றனர்.

    பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை, இளநீர் கடை, மோர் கடை, கம்பங்கூழ், கேழ்வரகு கடை, சர்பத் கடை போன்ற கடைகளை நாடி வருகின்றனர்.

    இதனால் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது.

    நுங்குகள், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலை ஓரமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-பெங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலையோரமாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.
    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

    இதே போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்து வேகமாக வறண்டு வருகின்றன.

    இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது வெறும் 949 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    இதையடுத்து மாற்று வழியில் தண்ணீரை பெறும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 9-ந் தேதி ஜதராபாத்தில் நடந்த கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர விவசாயிகளும், ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நேற்று காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் பூண்டி ஏரியை நோக்கி பாய்ந்து வருகிறது.

    இன்று காலை 6 மணிக்கு கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்த பின்னர் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் வர உள்ளது. கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையை கிருஷ்ணா தண்ணீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

    கிருஷ்ணா தண்ணீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் நேற்று 70.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. #MetturDam
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 150 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 243 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 70.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #MetturDam
    சேலம்:

    கடந்த 23-ந் தேதி 71 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 131 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 254 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று 71.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 71.71 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
     
    கஜா புயலால் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, பெரிய பட்டினம், தாமரைக்குளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வந்தது.

    இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வந்தனர். அங்கிருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு போன்ற ஊர்களில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    மாவட்டத்தில் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் தேங்காய் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டது. தேங்காய் விலையும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

    இந்த விலை வீழ்ச்சி படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து கொப்பரை தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    கஜா புயலுக்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்பனையான தேங்காயை புயலுக்கு பின் தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.33 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியும் சில வாரங்களில் சரியாவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் கஜா புயலுக்கு பின்பு விலை அதிகரித்து வருகிறது.

    ரெகுநாதபுரம் தேங்காய் மொத்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டுகளில் மழை இல்லாததால் காய்களின் வடிவம் மாறி காய்ப்பு குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு தேங்காய் எடை 400 கிராம் வரை இருக்கும். மழை இல்லாததால் காயின் எடை குறைந்து தற்போது அதிகபட்சமாக 250 கிராம் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறிக்கக் கூடிய தேங்காய் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி பல்வேறு கூடுதல் செலவினங்களை தாங்கி கொண்டு தென்னை விவசாயிகள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னை விவசாயி பெரியபட்டினம் அப்துல் மாலிக் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்து தென்னந்தோப்புகளை வீட்டடி மனைகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

    பல்வேறு சுமைகளை தாங்கி தென்னை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தோம். விலை அதிகரித்துள்ள நிலையில் மரத்தில் காய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

    மரத்திற்கு தண்ணீர் விடுவதற்கு கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தேங்காய் காய்ப்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

    மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. கடந்த 16-ந் தேதி 86 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 118 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 73.09 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 72.7 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #Metturdam

    தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.1700 அதிகரித்துள்ளது. #Jasmine
    நாகர்கோவில்:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல விதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    பழவூர், ஆவரைக்குளம், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் இருந்து மல்லிகைப்பூ தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூவும் குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1100-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது.

    ரூ.750-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.850 ஆக உயர்ந்திருந்தது. அதேபோல ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக இருந்தது. சம்பங்கி ரூ.50, மஞ்சகேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.150, வாடாமல்லி ரூ.60, கோழிப்பூ ரூ.60 ஆக விற்பனையானது.

    ரூ.5-க்கு விற்பனையான தாமரைப்பூ இன்று ரூ.10 ஆக விற்கப்பட்டது.

    புத்தாண்டு மற்றும் திருமண நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. #Jasmine
    சபரிமலையில் போராட்டங்கள் குறைந்ததால் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அப்பம், அரவணை விற்பனையும் உயர்ந்துள்ளது. #Sabarimala #Devotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    சபரிமலையில் பக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. வெளி மாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினர்.

    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்களுக்கு போலீசார் இடையூறு செய்யக்கூடாது. அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பவும் தடை விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

    மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் குழுவையும் நியமித்தனர்.

    ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகள் குறைந்தன. போராட்டக்காரர்களும், சபரிமலையில் நடந்த போராட்டங்களை நிறுத்திக் கொண்டனர்.

    அவற்றை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன்பு நடத்தி வருகிறார்கள். இதனால் சபரிமலையில் அமைதி திரும்பியது. இதற்கிடையே ஆய்வுக்கு சென்ற ஐகோர்ட்டு குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர்.

    போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், ஐகோர்ட்டு குழுவின் திருப்திகர பேட்டிகளும் ஐயப்ப பக்தர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்கத்தொடங்கியது.

    தொடக்க நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்ற நிலையில் கடந்த வாரம் முதல் 50 முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் அப்பம் விற்பனையும், உண்டியல் வசூலும் பல லட்சங்களை தாண்டும். இந்த ஆண்டு முதல் 15 நாட்களில் அப்பம், அரவணை விற்பனை, உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

    கடந்த 3 நாட்களாக அப்பம் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிமாநில பக்தர்கள் வருகையால் உண்டியல் வசூலும் கணிசமாக உயரும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் இலவச ஓய்வு மையம் செயல்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. கோட்டயம், செங்கனூர் ரெயில் நிலையங்களில் 24 மணி நேரம் செயல்படும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு 500 பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  #Sabarimala #Devotees



    ×