search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114339"

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    • இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது.
    • கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

    கொழும்பு :

    கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

    கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

    சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவது குறிப்பிட்டத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான, சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

    • இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.
    • இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    ஜெனீவா:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

    இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

    அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.

    மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம்.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன.

    இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன.

    பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

    வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல.

    இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.

    இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது.

    இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

    • இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி உள்ளது.
    • 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த கடன்கள் தொடர்பாக கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் 'வெரிட் ரிசர்ச்' என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு செய்து உள்ளது.

    இதில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருமாறி வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இலங்கை பெற்ற 968 மில்லியன் டாலர் வெளிநாட்டு கடனில், இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் கடன் வழங்கி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தலைநகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு.

    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 9 ந் தேதி கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதில் குடிபுகுந்தனர்.

    அதற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை துறந்து விட்டு ஜூலை 13 அன்று நாட்டை விட்டே வெளியேறினார். முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அவரது கட்சி ஆதரவில் ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்ற நிலையில், மீண்டும் நாடு திரும்ப கோத்தபய ராஜபச்சே முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றிரவு அவர், தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பண்டார நாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கி கோத்தபய, அங்கிருந்து எந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் இல்லை. இந்நிலையில் கோத்தபய இலங்கை வந்துள்ளதால் மீண்டும் அவருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்புவின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் நடவடிக்கை.
    • சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் ஆறுதல்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய போராட்டத்தில் அநநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை நாடியது.

    இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, முதல் கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.

    சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை இலங்கை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் என்றும், புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் குறிப்பிட்டார்.

    தற்போதைய நிலையில் நாடு திவால் நிலையில் இருந்து விடுபடுவது முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை செலுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார். 

    • மத்திய அரசுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா தனது 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடிய நேரத்தில் இந்திய எல்கைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சமதள பகுதி யில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் அங்குள்ள தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைகோள் ஆய்வு பணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவுக்கப்பல் இலங் கையில் உள்ள அம்பாந் தோட்டைதுறை முகத்தில் வந்து நங்கூரமிடப்பட்டது. இலங்கைக்கு மிக அருகில் உள்ள குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், இயற்கை வளங்கள், அணைகள், அரியவகை மணல்களை பிரித்தெடுக்கும் மணவா ளக்குறிச்சி மணல் ஆலை உள்ளது.

    இதைப்போன்று நெல்லை மாவட்டத்தில் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்தில் அமைய இருக்கும் ராக்கெட் தளம் போன்றவை அமைந்துள்ளன.

    இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு எதிர்காலங் களில் முறையாக திட்டமிட்டு, அண்டை நாடான இலங்கையில் இதுபோன்ற உளவுக் கப்பல்கள் வருவதை தடுப்பதற்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் தளவாய்சுந்தரம் மனு அனுப்பியுள்ளார்.

    • புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • மாணவர் இயக்க தலைவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு மாணவர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

    புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மாளிகை முன்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக வேறு வடிவில் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    இதற்கிடையே கடந்த 18-ந்தேதி தலைநகர் கொழும்பில், பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் மாணவர்கள் இயக்க தலைவர்கள் 3 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதனை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, 'போராட்டக்காரர்கள் திடீரென்று இப்போது எப்படி தீவிரவாதிகள் ஆனார்கள்?

    மாணவர்களின் எதிர்ப்பை பயங்கரவாதம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிடுகிறார் என்றால் அவரும் பயங்கரவாத வழிமுறைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் என்று அர்த்தமல்லவா?' என்றார்.

    • 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை நீக்கியுள்ளது.
    • 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு :

    இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு ஆகிய 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்த்து வெளிநாடுவாழ் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தைமூர் கப்பலை ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்.
    • தைமூரை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்த பங்களாதேஷ் அனுமதி மறுப்பு.

    இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.

    இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    • வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்பு

    பர்மிங்காம்:

    பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள்.

    இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கையைச் சோந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரியை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரர்கள் காணாமல் போனதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் தங்கியிருக்கும் விளையாட்டு கிராம அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
    • இலங்கை வந்துள்ள சீன உளவு கப்பல் வருகிற 17-ந்தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள்

    சென்னை:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.

    அகதிகள் போர்வையில் சட்ட விரோத செயல்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதில் தமிழக போலீசார் கடலோர பகுதிகளை தீவிர மாக கண்காணித்து வருகி றார்கள்.

    இந்த நிலையில் சீன உளவு கப்பல் அந்த நாட்டில் இருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்திருப்பதும், அங்கு நிலை நிறுத்தப்பட்டிருப்பதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவுக்கு சொந்தமான "யுவான் வாஸ்" என்ற பிரமாண்டமான உளவு கப்பல் அந்த நாட்டின் ஜியாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பல் கடந்த மாதம் 13-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இலங்கை கடற்பகுதியை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அம்மாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கப்பலில் இருந்தபடியே இந்திய கடல் பகுதியை (தமிழக எல்லைக் குட்பட்ட இடங்களை) எளிதாக உளவு பார்க்க முடியும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த சீன உளவு கப்பலில் இருந்து 750 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான கடல் பகுதிகளை துல்லியமாக உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. கப்பலில் இருந்தபடியே செயற்கைகோள் உதவியுடன் தமிழக கடல் பகுதிகளை சீன உளவு பிரிவு அதிகாரிகளால் உளவு பார்த்து தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

    மத்திய வெளியுறவு அமைச்சகமும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தது. சீன கப்பல் வருகையால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இலங்கை வந்துள்ள சீன உளவு கப்பல் வருகிற 17-ந்தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பலில் இருந்தபடியே அணு ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய 6 துறை முகங்களையும் தீவிரமாக கண்காணித்து உளவு பார்க்க முடியும் என்பதால் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கூடங்குளம், கல்பாக்கம் போன்ற அணுமின் நிலையங்களையும் சீன உளவு கப்பலால் கண்காணிக்க முடியும் என்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக கடலோர பகுதிகள் அனைத்திலுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடலோர பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தி உள்ளார். இதில் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இலங்கை கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் அது போன்ற போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்றும் உளவு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×