என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் டீசல்"
- உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
- விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ஐ மத்திய அரசு குறைந்தது.
அதன்பிறகு 6 மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருப்பதால் விலை குறைப்பு என்பது ஒரே நேரத்தில் இருக்குமா அல்லது படிப்படியாக விலை குறைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை.
- மதுபானம், எரிபொருட்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
ஸ்ரீநகர் :
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம்.
ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், கடந்த 190 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த மே மாதத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
- 201 நாட்களாக பெட்ரோல், டீசல் மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது. 7 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை ரூ.10-ம் குறைக்கப்பட்டது. அன்று சென்னையில் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்றது.
அதன்பிறகு ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல்-டீசல் விலையும் கடுமையாக அதிகரித்தது.
கடந்த மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலையும் குறைந்தது.
அதன்படி கடந்த மே மாதத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 201 நாட்களாக பெட்ரோல், டீசல் மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது. 7 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.
அதே நேரத்தில் கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விற்பனை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 11.7 சதவீதம் உயர்ந்து 26.6 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 23.8 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த நவம்பர் மாத பெட்ரோல் விற்பனை 2020-ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையைவிட 10.7 சதவீதம் அதிகமாகவும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தைவிட 16.2 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.
அதேபோல் டீசல் விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 27.6 சதவீதம் அதிகரித்து 73.2 லட்சம் டன்னாக இருந்தது.
இது கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 17.4 சதவீதம் அதிகமாகும். 2019-ம் ஆண்டை விட 9.4 சதவீதம் அதிகமாகும். டீசல் மாதாந்திர விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத டீசல் விற்பனையான 62.5 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பரில் 17.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான தேவை கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 21.5 சதவீதம் உயர்ந்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 200 டன்னாக இருந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் சமையல் கியாஸ் விற்பனை முந்தைய ஆண்டின் நவம்பர் மாத விற்பனையைவிட 7.8 சதவீதம் அதிகரித்து 25.5 லட்சம் டன்னாக இருந்தது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
- விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது.
சில மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை உச்சம் தொட்டதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
அதன்பிறகு கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பி.பி.சி.பி. கள் போன்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி வரை லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை.
எனவே இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரம் கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை தங்கள் நிறுவனம் இதுவரை ஈடுசெய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மத்திய அரசிடம் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் 2022-2023-ம் நிதியாண்டில் 4-வது காலாண்டில் நல்ல லாபம் பார்த்துள்ளன. மேலும் 2023-2024-ம் நிதியாண்டிலும் முதல் காலாண்டில் நன்றாக இருந்தால் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
- விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவை குறைந்திருக்கிறது.
புதுடெல்லி:
நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது.
இதன் விற்பனை, இம்மாதத்தின் முதல் பாதியில் 30 லட்சத்து 43 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீத சரிவு ஆகும்.
அதேநேரம், விவசாயத்துக்கான எரிபொருள் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயிலை சமாளிக்க கார்களில் ஏ.சி. தொடர்ந்து இயக்கப்பட்டதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமும், மே மாதத்தில் 9.3 சதவீதமும் டீசல் விற்பனை கூடியிருந்தது.
பெட்ரோல் விற்பனையும் இந்த மாத முதல் பாதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட பெட்ரோல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீத சரிவு. மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாத 2-வது பாதியில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்து வந்திருக்கிறது. அதற்கு தொழில்துறை, விவசாயத்துறை செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைந்ததுதான் காரணம்.
ஆனால் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை தணியத் துவங்கி இருக்கிறது. விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவையும் குறைந்திருக்கிறது.
அதேவேளையில், நாட்டில் விமான பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்கியிருக்கும் சூழலில், விமான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
இந்த மாதம் 1 முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விமான எரிபொருள் தேவை 2 லட்சத்து 90 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 2.6 சதவீத அதிகரிப்பு ஆகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு விற்பனை 1.3 சதவீதம் சரிந்து 10 லட்சத்து 14 ஆயிரம் டன்களாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.
- இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ஆம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.
2021-22-ம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வட்டிக்கு முந்தைய லாபம் ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் லாபம் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சந்தித்த இழப்பை ஈடு செய்து விட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் இரண்டகம் ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு முறையே ரூ.13, ரூ.11 குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது.
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொதுமக்களுக்கு கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள்.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள்ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
- சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
- அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதிலும் பெட்ரோல்- விலை குறைக்கப்பட வில்லை. முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விட்டது. சில நகரங்களில் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் ஊரடங்கு,ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டதால் பெட்ரோல்- டீசல் விலை குறையாமல் அதே விலை நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
- பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது.
இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை.
கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது.
இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது.
இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.
- இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை.
பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யாத நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகளவு வருவாய் பெற்றன.
இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமா? என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கலாம் என கருதின. அது போல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என திட்டமிட்டன.
ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றன. மேலும் டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அறிவிப்பை பிப்ரவரி 1-ந்தேதி வெளியிட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை எந்த அளவுக்கு குறையும் என்பது அடுத்த வாரம் தெரியும்.