என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள்"

    • 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
    • நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.

    பெங்களூரு:

    இந்தியாவை சேர்ந்த ஒரு தனியார் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வு அறிக்கையில் ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களிலும், மற்றவர்கள் விளையாட்டு மற்றும் பல்வேறு வீடியோக்களை பார்ப்பதில் நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது.

    ஒருவர் தினமும் செல்போனில் செலவிடும் நேரத்தை பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது தெரியவந்தது. அதே நேரம் செல்போன் பயன்படுத்துவதில் மொத்த மணி நேரங்களை பொறுத்தவரை இந்தியா உலகின் மிகப்பெரிய பயனர் நாடாக இருப்பது தெரியவந்தது.

    மேலும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் 5ஜி பயன்பாட்டிலும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது கடந்த 2024-ம் ஆண்டில் 27 மில்லியனாக உயர்ந்துள்ளது. இணைய சந்தாதாரர்களில் 40 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
    • பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

    புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

    ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.

    அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

    கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

    புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

    • நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
    • கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

    அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.

    கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
    • இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.பி. விசா வழங்கப்படுகிறது. அதே போல் தொழிலுக்காக பி1 விசாவும், சுற்றுலாவுக்காக பி2 விசாவும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் அமெரிக்காவுக்கு சென்று படிக்கவும் மாணவர்களுக்கு விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.

    இந்த நிலையில் சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.

    சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் விசாவுக்காக நேர்காணலுக்கு சுமார் 2½ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

    சுற்றுலா மற்றும் தொழில் பிரிவில் விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் குறைவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியாவில் விசா நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்க டிராப் பாக்ஸ் விண்ணப்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தீர்ப்பு வழங்குதல், தற்காலிக பணியாளர்களை அமர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

    விசா விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு முன்பு இருந்து நிலையை எட்டி விட்டதாலும் அதை செயல்படுத்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை.

    இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் கொரோனா காலத்துக்கு முந்தைய விசா செயலாக்க நிலைகளை எட்டுவோம் என்றும் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு 2022-ம் நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை வழங்கி உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

    • ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

    இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.

    இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது.

    அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

    • வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரத்து 330 இந்திய கைதிகள் உள்ளனர்.
    • அதிகபட்சமாக வளைகுடா நாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்திய கைதிகள் உள்ளனர். அதிகபட்சமாக 4,630 பேர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர்.

    நேபாளத்தில் 1222, பாகிஸ்தானில் 308, சீனா 178, வங்காளதேசத்தில் 60, இலங்கையில் 20 இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர்.

    பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என தெரிவித்தார்.

    • வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
    • 8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 பேர் மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக 8 பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில், மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து, மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

    • இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
    • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் 3 பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    • கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
    • 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.

    சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.

    பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.

    நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.

    • போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.

    ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
    • கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.

    கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.

    கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    ×