search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ்"

    • அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தெய்ஃப் முகமது.
    • சுரங்கத்தில் மறைந்து இருந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டியுள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் காசாவின் தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது.

    ரஃபா நகருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கான் யூனிஸ் நகர் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அங்கு ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டியதாக கூறியது. பின்னர் அங்கு பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ரஃபா பகுதியில் இருந்து மக்கள் அந்த பகுதிக்க செல்லுமாறு எச்சரித்தது.

    இந்த நிலையில் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ஃப் எனக் கருதப்படுகிறது. இவர் கான் யூனிஸ் அருகே உள்ள அல்-மவாசி பகுதியில் சுரங்கத்தில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.

    இதை அறிந்து கொண்ட இஸ்ரேல் அந்த பகுதியில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீது ஆர்வம் காட்டவில்லை என்பது காண்பிக்கிறது என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், 289 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்தார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

    முகமது தெய்ஃப் இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேலின் பல தாக்குதலில் உயிர்தப்பினார். தற்போதைய இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா? என்பது தெளிவாகவில்லை.

    • இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.
    • போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.

    இதில் அங்கு அகதிகளாக தங்கியிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
    • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.

    இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    ரபா:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

    ரபா நகரில் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்ரேல் படையினர் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி பீரங்கிகளுடன் முன்னேறி வருகின்றனர்.

    ஷாதி அகதிகள் முகாம் அருகே உள்ள உணவு வினியோக மையத்தின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் 3 பேர் இறந்தனர்.

    பானி சுலைகா பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் பாதுகாவலர் உள்ளிட்ட 8 பேர் உயிர் இழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார துறை தெரிவித்தள்ளது.

    நேற்று ஒரே நாள் இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆம்புலன்சு சிகிச்சை பிரிவின் இயக்குனர் இறந்தார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் படை தாக்குதலுக்கு பயந்து பல குடும்பங்கள் ரபாவில் இருந்து வெளியேறி வடக்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பாலா நகருக்கு தப்பி ஓடி விட்டனர்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.
    • புலனாய்வு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் சீனியர் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா கொல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது. புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் (ஒரு இடத்தை குறிவைத்து தாக்குதல்) தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர்.

    • காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர்.
    • காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

    இதில் காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள். இந்த நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.



    • பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக தகவல்.
    • பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ட் ஹனௌனில் ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல் சவர்கா ராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்தார்.

    இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்படுகிறது. மத்திய காசா மற்றும் தெற்கு ரஃபா பகுதிகளில் ஹமாஸ்-ஐ அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து காசாவில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் கூறும் போது இதுவரை பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 653 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
    • ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம்.

    ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் முடிவில் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

    ஹமாஸ் உடனான போர் குறித்து பேசிய இஸ்ரேல் மூத்த செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது," என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹமாஸ்-ஐ முழுமையாக ஒழித்துக் கட்டும் வரை எங்களின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார்.

    "பிரதமர் நேதன்யாகு தலைமையில் கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மந்திரிசபை கூட்டத்தில் ஹமாஸ் ராணுவம் மற்றும் நிர்வாக அமைப்பு கொண்ட கட்டமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டுவது தான் இந்த போரின் மிகமுக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பை சித்தாந்த முறையில்தான் ஹகாரி குறிப்பிட்டார், அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவாகவே இருந்தது என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது தெரிவித்தார்.
    • இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாக பதில் அளிக்கப்பட்டது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய போர் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இருதரப்பும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக இஸ்ரேல் மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. மேலும், கத்தார் மற்றும் எகிப்து சார்பில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாகவே பதில் அளிக்கப்பட்டது. 

     


    ஹமாஸ் விடுத்த கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க முடியும், சிலவற்றை ஏற்க முடியாது என ஆண்டனி பிளிங்கென் தெரிவித்தார். போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டான் கூறும் போது, "நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது," என தெரிவித்தார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரேபிய நாடுகள் இணைந்து உருவாக்கிய மூன்று கட்ட திட்டமிடலில், ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம், பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் சர்வதேச உதவியுடன் காசாவில் மறுக்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது என பரிந்துரைக்கப்பட்டது.

    "ஹமாஸ் விடுத்த பரிந்துரைகளில் பல கோரிக்கைகள் மிகவும் சிறியது தான், சில கோரிக்கைகள் எதிர்பார்க்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்ததை விட அதிக வேறுபாடுகளை கொண்டிருக்கிறது," என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிளிங்கென் தெரிவித்தார். எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் சார்பில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நேரடி அழுத்தம் கொடுக்க ஹமாஸ் அமெரிக்காவை வலியுறுத்தியதாக பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

    "போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் யாரும் இதுவரை பேசி நாங்கள் கேட்கவில்லை," என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    • ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.
    • 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை.

    ஹமாசை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் சுரங்க பாதையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை அடைத்து வைத்துள்ளதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சரமாரியாக குண்டுகள் வீசியதிலும், துப்பாக்கியால் சுட்டத்திலும் 274 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இதில் 64 குழந்தைகள், 57 பெண்கள், 37 முதியவர்களும் அடங்குவர். இந்த தாக்குதலின் போது 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வரும் பென்னி காண்ட்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் பென்னி காண்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுக்கிறார். அதனால் நான் இன்று கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

    இஸ்ரேல் மந்திரி பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவரை பதவியை விட்டு விலக வேண்டாம். போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரி பதவி விலகிய விவகாரம் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது .

    இதனால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.

    • ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது.
    • பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 9 மாதங்களாக நீடித்து வருகிறது.

    இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் , அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதேபோல் வடக்கு காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது. இதில் 3 பேர் பலியானார்கள்.

    சமீபத்தில் மத்திய காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    • போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
    • கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த சண்டையில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும் ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

    இதனால் இந்த போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    எகிப்து வெளியுறவு துறை மந்திரி சமே ஷோத்ரி கெய்ரோவில் அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதிகளுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தநிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் இது வரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்- அன்சாரி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    ×