என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"

    • தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    • மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

    திருச்சி:

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்பில் இனி 30 சதவீதம் குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாற்றுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், சி.பி.எஸ்.இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. தேசிய கல்வி கொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார். 

    • தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார்.
    • தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு.

    திருச்சி:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு எப்பொழுது ஆரம்பிக்கும்? எப்பொழுது முடியும்? என தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றனர். பீகார் உள்பட 5 மாநில தேர்தல் வர இருக்கிறது. தேர்தல்கள் காலம் வரும்பொழுது இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

    இது அறிவிப்போடு இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் . தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார். தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

    திருச்சியில் நேற்று கூட 104 வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறோம். அந்த சமயத்தில் கடும் வெயில் இருந்தால் அது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அப்போது முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு. அப்படி வாங்க கூடாது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது கூறியுள்ளேன். 2009-ல் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் வைத்துள்ளோம்.

    அந்த கமிட்டி என்ன சொல்கிறதோ அவர்கள் நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறி உள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    தமிழக வெற்றிக்கழகம் 2026-ல் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது எனக் கூறியிருப்பது அவர்களது எண்ணம், கட்சி ஆரம்பித்து விட்டார்கள், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லுகிறார்கள் என நான் பார்க்கிறேன் . தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்துகின்றனர்.

    தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது மட்டுமல்லாமல், அதில் நிறைய ஷரத்துக்கள் உள்ளன. நாம் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என வைத்து உள்ளோம். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளில் தான் தேர்வுகள் வைக்கின்றோம்.

    ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் உள்ளன. இது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதும் ஒரு காரணம். குறிப்பாக நாம் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் போது அவர்கள் தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு கூறுகின்றனர். அது ஏற்கத்தக்கது அல்ல.

    ஆசிரியர் காலி பணியிடங்கள் பொறுத்தவரை நீங்கள் காத்திருப்பது போலவே நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது வந்தவுடன் அவர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
    • திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

    இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவச் செல்வங்களைச் சந்தித்து பதற்றம் இல்லாமல், மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ளுமாறு அவர் நம்பிக்கையூட்டினார்.

    • பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.
    • சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமான செங்கோட்டையனுக்கு கடைசி வரை வாய்ப்பு தரப்படவில்லை.

    3, 4 முறை கையை உயர்த்தியும் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    செங்கோட்டையனை பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.
    • இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    * மொத்தம் 1,635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

    * மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.

    * மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்வதில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

    * தமிழ்நாட்டில் கல்விமுறை சிறந்தது என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும்?

    * தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல - அது நமது வேர்கள், வரலாறு மற்றும் மதிப்புகளுடன் தொடர்புடையது.

    * நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.

    * இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    * NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜனவரி மாதம் நடக்கிறது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளது.

    இந்த கண்காட்சியின் இலச்சினையையும் (லோகோ), நிகழ்ச்சி நிரலையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிட்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

    சர்வதேச ஒலிம்பியாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டியாக இருந்ததோ, அதனைத்தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    20 நாடுகளில்... 50 நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். குறுகிய காலமாக இருப்பதால், 20 நாடுகளில் இருந்தாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். முதல் முறையாக நடத்த இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் அதிக நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்றார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழைக்காலத்தையொட்டி விடுமுறை விடப்படும் நாட்களை எவ்வாறு ஈடுசெய்ய போகிறீர்கள்? அதற்கு எதுவும் திட்டம் இருக்கிறதா? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக்காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.
    • சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் மாணவர்கள் காண உள்ளனர்.

    திருச்சி:

    கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் அவர்கள் காண உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வந்த மாணவர்கள் அனைவரும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    அவர்களை வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை அனைத்து மாணவ- மாணவிகளும் 4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார்.

    இந்த சுற்றுலா குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து தான் எங்களை படிக்க வைக்கிறார்கள். வெளிநாடு செல்வதெல்லாம் எங்களுக்கு கனவு போன்றது. நாங்கள் அதையெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. தற்போது அது நடக்க போகிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்றனர்.

    பள்ளி மாணவ, மாணவிகள் காலை 8 மணி அளவில் துபாய் செல்வதற்காக தங்கள் உடமைகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் வந்திருந்தனர். முதலில் அவர்கள் திருச்சி விமான நிலையம் முனையம் பகுதியில் அமரவைக்கப்பட்டனர்.

    அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி காலை 9 மணி அளவில் விமான நிலையத்திற்கு வந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விமானத்தில் புறப்பட்டார்.

    • வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
    • புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது, ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக அப்போது அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம்.

    சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன்.

    தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.

    புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார்.

    அதை அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.

    பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு காரணமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். இ.வி.எஸ். இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும்.
    • பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    பிற்போக்கு எண்ணங்கள் கூடாது, அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நூலக நண்பர்கள்' திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் இல்லங்களை தேடி புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

    பொது நூலகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 'நூலக நண்பர்கள் திட்டம்' என்றழைக்கப்படுகிறது. நூலகத்திற்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள். மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி, அவர்கள் இருக்குமிடத்திற்கே நூலக நண்பர்கள் மூலம் நூல்களை கொண்டு செல்ல இருக்கிறது. நூலகத்திற்கும் இல்லங்களுக்கும் இடையே நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வலர்களே நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    இதில் நூலகத்தில் தொடர்ந்து வாசகர்களாக இருப்பவர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்கள், நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்கள் நூலக நண்பர்களாகலாம். ஒரு நூலகத்திற்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில், நூலகத்திற்குட்பட்ட மக்களுக்கு இல்லம் தேடி சென்று நூல்களை வழங்கி சேவை ஆற்றுவார்கள். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை நூலகரால் வழங்கப்படும். இல்லங்களுக்கு நூல்களை கொண்டு செல்ல பை வழங்கப்படும். 25 நூல்கள் வழங்கப்படும். அந்த நூல்கள் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படும். மக்கள் அந்த நூல்களை 15 நாள் அவகாசத்தில் படித்துவிட்டு, நூலக நண்பர்களிடம் திரும்ப கொடுத்து, வேறு நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.

    நூலகத்திற்கு வர முடியாதவர்கள், வாசிக்கும் தேவை உள்ளவர்கள், உங்களை தேடி வரும் நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நூலக நண்பர்கள் மூலம் சிறந்த நூல்களை பெற்று பயன் பெறலாம். அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும். பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். "நூலக நண்பர்கள் திட்டம்" தமிழகத்தில் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள் 300 முழு நேர கிளை நூலகங்கள். 1,463 கிளை நூலகங்கள், 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இத்திட்டம் திண்டுக்கல் மாவட்ட நூலகத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்படுகிறது.

    நூலகர் தினவிழா, புத்தக தினவிழா, நூலக வார விழா உள்ளிட்ட பல்வேறு நூலக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் திண்டுக்கல்லில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்களாக சேவையாற்ற 300 பேர் முன்வந்துள்ளனர். புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும். எனவே மேலும் பலர் நூலக நண்பர்களாக சேர முன்வர வேண்டும். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகப் பையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி, இல்லங்களை தேடி வருவார்கள். அவர்கள் மூலம் இல்லங்களில் உள்ளவர்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இல்லம் தேடி கல்வி பணியாற்றும் தன்னார்வலர்கள். பள்ளி நூலக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள். ஆசிரியர்கள் நூலக நண்பர்களாக சேர்ந்து நூலக சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
    • விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது.

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் சசிகலா வரவேற்றார். இயக்குனர் குப்புசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும். ஜனவரியில் முதல்-அமைச்சரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்-அமைச்சர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.

    நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

    விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம்.
    • பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு 400 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், பாக்கு, சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தின் மூலம் 2950 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு தேவையான புடவைகள் வழங்கும் பணியை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மேற்கொண்டுள்ளார். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வருகிறோம்.

    அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம். அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பள்ளியில் பாதியிலே படிப்பை விட்ட இடைநிற்றல் மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரை கண்டறிந்து பள்ளியில் சேர்த்துள்ளோம். எந்த மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளாவார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    நம்ம ஊரு பள்ளி திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். பள்ளியில் படித்து பெரிய தொழில் அதிபராக உள்ளவர்கள், பெரிய இடத்தில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். நிதி வழக்குபவர்களுக்கு உடனுக்குடன் ரசீது கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளே ரூ.50 கோடி வசூலாகி உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    • தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ந் தேதிவரை நடக்க இருக்கிறது.

    சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

    3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×