என் மலர்
நீங்கள் தேடியது "அனுமன்"
- சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
- பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.
- தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
- வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோவில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.
கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.
தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள் பஞ்ச பாண்டவர்கள்.
இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.
இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் 'காடு' என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் 'காடு ஹனுமந்தராயன்' என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது.
இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன.
திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோவிலின் சம்பிரதாயமாகும்.
துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 0458 220749.
- இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.
- அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் சென்னையின் நுழைவாயிலான கிண்டியில், எம்.கே.என். சாலையில், மாங்குளம் அருகில் உள்ளது.
வியாசராஜரால் நிறுவப்பட்ட இந்த ஆஞ்சநேயர், சென்னையின் நுழைவாயிலில் இருப்பதால் இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.
இந்த அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.
இவருக்கு வெண்ணைக்காப்பு சாத்தி வேண்டிக் கொண்டால் தீராத நோய்தீரும். கல்யாண வரம் வேண்டுவோர் ஒன்பது வியாழக்கிழமை இவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வலம்வர கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம் என்கிறார்கள்.
- அனுமன், சிவபெருமானின் அம்சம்.
- சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர்.
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை 'ஆதியந்த பிரபு' என்பார்கள். ஒரு புறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது இந்த வடிவம். `ஆதி' என்பது `முதல்' என்றும், `அந்தம்' என்பது `முடிவு' என்றும் பொருள்படும்.
அந்த வகையில் முதல் கடவுளான விநாயகரை வணங்கி ஒரு காரியத்தை தொடங்கினால், அதை அனுமன் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு பிரம்மச்சாரிகள் இணைந்த இந்த வடிவத்தை தங்கள் இஷ்டதெய்வமாக வழிபடுவார்கள்.
அனுமன், சிவபெருமானின் அம்சம். அதே போல் சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர். இதனால் இவர்களை வழிபடுவது பரம்பொருளான ஈசனையும், அம்பாளையும் வணங்குவதற்கு சமமானது.
- ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
- திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-ரவுத்திர துர்க்கை
தியாகேசர் ஆலயத்தில் தெற்கு பிரகாரத்தில் ரவுத்திர துர்க்கைக்கு தனி ஆலயம் உள்ளது.
மண பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ராகுகால பூஜையின்போது இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கப் பெறலாம்.
ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த துர்க்கையை லட்சார்ச்சனை செய்து வழிபடலாம்.
திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.
முதல் பிரகாரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி பிரதான துர்க்கை.
இரண்டாம் பிரகாரத்தில் அதற்கு அங்கமாக முதல் பிரகாரத்தில் மூன்றும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என எட்டு துர்க்கைகள் உள்ளன.
- இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
- திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை சிறப்பு
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன.
இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.
லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர்.
இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.
திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும்
புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.
சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,
அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,
அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும்
சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.
- அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
- அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்
திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள முக்கிய புறக்கோவில்கள்
1. அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
2. அருள்மிகு கமலாம்பாள்
3. அருள்மிகு நீலோத்பலாம்பாள்
4. அருள்மிகு ராகுகால ரவுத்திர துர்க்கை
5. அருள்மிகு ருணவிமோசனர்
6. அருள்மிகு விஸ்வகர்மேஸ்வரர்
7. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி சுவாமி
8. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் கோவில்
9. அருள்மிகு சித்திஸ்வரர் கோவில்
10. அருள்மிகு ஹயக்ரீஸ்வரர் கோவில்
11. அருள்மிகு தட்சனேஸ்வரர் கோவில்
12. அருள்மிகு அண்ணாமலேஸ்வரர் கோவில்
13. அருள்மிகு வருணேஸ்வரர்
14. அருள்மிகு ஓட்டு தியாகேசர்
15. அருள்மிகு துளசிராஜா பூஜித்த கோவில்
16. அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்
17. அருள்மிகு சேரநாதர்
18. அருள்மிகு பாண்டியநாதர்
19. அருள்மிகு ஆடகேஸ்வரம்
20. அருள்மிகு புலஸ்தியரட்சேஸ்வரர் கோவில்
21. அருள்மிகு புலஸ்திய பிரம்மேஸ்வரர் கோவில்
22. அருள்மிகு பக்தேஸ்வரர் கோவில்
23. அருள்மிகு வில்வாதீஸ்வரர் கோவில்
24. அருள்மிகு பாதாளேஸ்வரர்
- ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-கமலாம்பாள் கோவில்
திருவாரூர் திருக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக் கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.
இவள் க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள், ஆகிய மூன்று தேவியரின் ஒருங்கிணைந்த ஒருமித்த சங்கமமாக கருதப்படுகிறாள்.
ஆதலால் புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாகவும் (காசி&விசாலாட்சி, காஞ்சி&காமாட்சி, மதுரை&மீனாட்சி,
ஆரூர்&கமலாலயதாட்சி, நாகை & நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் அருள்மிகு கமலாம்பாள் திகழ்கிறாள்.
மூன்று தேவியரும் ஒன்றாய் நிற்கும் அன்னையை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார்.
அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தினை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போல் காட்சி அளிக்கிறாள்.
இவளின் அருளை வியந்து திருவாரூர் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் "நவாவர்ண கீர்த்தனை" பாடியுள்ளார்.
அன்னையின் தவத்தினால் தான் வன்மீகநாதரே (புற்றிடங் கொண்ட பெருமான்) இத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள்.
இத்திருத்தலத்தில் அருள்மிகு கமலாம்பாள் திருக்கோவில் தனிக்கொடி மரம், தனித்திருமதில் கொண்டு தனிக்கோவிலாக உள்ளது மிகவும் சிறப்புடையதாகும்.
ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அன்னையை வலம் வந்தால் வேண்டியவருக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பாள் அன்னை கமலாம்பிகை என்பது ஐதீகம்.
- ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
- சோழர்கள், பாண்டியர்கள், ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
திருவாரூர் கோவில் சிறப்புகள்
*அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
*சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோவில் ஏதுமில்லை.
*திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
*திருவாரூர் - கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
*திருவாரூர்க் கோவில் - தியாகராஜர் திருக்கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது..
*சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
*திருவாரூர் கோவிலில் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு எதிராக இரண்டு கொடிக்கம்பங்கள் உள்ளன.
*ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
*மழை இல்லாத நாட்களில் இவரை வழிபட்டு அறுகம்புல் மாலை சாத்திப் பூஜைகள் செய்து அந்த அறுகம்புல்லை பசுக்களுக்கு கொடுத்தால் பசுக்கள் நன்கு பால் சுரக்கும்.
*மழை பொழிந்து நீர்வளம் பெருகும்.
- ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
- சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்கினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் கவரத்தக்க வகையில் பண்டைகால திராவிட கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்த காரணத்தால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமர், ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமென்று கூறினார்.
உடனே, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
அதன்படி ஆஞ்சநேயர் கைலாச பர்வதத்திற்கு சென்றார்.
லிங்கத்தை கொண்டு வர சற்று தாமதமானதும் சீதாபிராட்டி விளையாட்டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் ஒன்றை செய்தார்.
குறித்த ஒரு லக்கின நேரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தாமதம் ஆகலாம்.
ஆஞ்சநேயர் வருவதற்குள் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்க,
அகத்திய முனிவர் குறித்த நல்ல நேரம் முடிவதற்குள் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.
பிறகு கொண்டு வந்த ஆஞ்சநேயர் தான் வருவதற்குள் இங்கு மணலால் லிங்கத்தை பூஜை செய்வதைக் கண்ட அவர் கோபமுற்று அது விஷயமாக கேட்க
ஸ்ரீராமபிரானானவர் அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று உத்தரவிட்டார்.
அதைக்கேட்ட அனுமன் தன் வாலினால் சுழற்றி அந்த லிங்கத்தை அகற்ற முயற்சி செய்து, அம்முயற்சியில் தோல்வியுற்று, தன் வால் அறுந்து விழுந்து மயக்கமடைந்தார்.
பின்னர் ராமபிரானாரால் எழுப்பப்பட்டு, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் தாங்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை நடைபெறும் என்று சொன்னார்.
இவ்வாறு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் ராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்ற பொருள் கொண்ட ராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றது.
- இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
- இது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தலமானது மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது.
இத்தலத்தில் உள்ள சுவாமிகள் ராமேஸ்வரர் ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
வடநாட்டவர்கள் காசியில் உள்ள விசுவநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்து, அங்கிருந்து கங்கை ஜலத்துடன் ராமேஸ்வரம் ராமனாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்ல இருப்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்திற்கு சென்று,
இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதுடன் இங்கிருந்து மணல் எடுத்து அதற்கு பூஜை செய்து அதை எடுத்துக் கொண்டு போய் பிரயாகை திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் போட்டுவிட்டு,
காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கங்கை ஜலத்தை கொணர்ந்து ராமநாதசுவாமி அபிஷேகம் செய்து வழிபடுவதுடன் தங்களுடைய காசி, ராமேஸ்வரம் யாத்திரையை பூர்த்தி செய்வர்.
இதன்மூலம் இவ்வூரின் பெருமையால், இது அனைத்திந்ததிய மக்களை ஒன்றாக இணைத்து நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, சர்ப்ப சாந்தி, நாக பிரதிஷ்ட முதலியவை செய்து சுவாமி தரிசனம் செய்தால் மக்கள் செல்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் உண்டு.
- சக்தி பீடங்களில் இத்தலம் “சேது பீடம்” ஆகும்.
- விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.
தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.
இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.
இந்த அபிஷேகத்தை தரிசக்க கட்டணம் உண்டு.
பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
சக்தி பீடங்களில் இத்தலம் "சேது பீடம்" ஆகும்.
அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.
விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.
இந்த பாவம் நீங்க விபிஷணன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி-இந்த லிங்கத்தில் ஐக்கியமானார்.
இதுவே "ஜோதிர்லிங்கம்"ஆயிற்று.
இந்த லிங்கம் சுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
ஆஞ்சநேயருக்கு தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.
ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.
ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால் தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.
அதன்படி இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.
விசாலாட்சிக்கு தனி சன்னதி இருக்கிறது.
சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சக்ர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.
அம்பாள் சன்னதியில் அஷ்ட லட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.
இந்தக் கோவில் எந்தப் பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால் சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.
கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது. வித்தியாசமான அமைப்பு.