என் மலர்
நீங்கள் தேடியது "சட்டம் ஒழுங்கு"
- சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
- தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
- நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
- நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? முப்போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.
மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்துகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.
கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும்.
இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.
நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கத்தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தி.மு.க.வை போல பா.ம.க. கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாடு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
- கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.
சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இ.பி.எஸ் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அனுமதிக்கவில்லை.
* எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன்.
* அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
* சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுப்பை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
* மதுரை பெருங்குடி அருகே காவலர், கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் காரில் சென்றபோது வழிமறித்து சினிமா பாணியில் கொலை, நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தொழுகை முடித்துவிட்டு வந்தபோது கொலை, சென்னையில் தி.மு.க. நிர்வாகியை கடத்தி வெட்டிக்கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
* கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.
* தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
* முதலமைச்சருக்கு கீழுள்ள காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-
* சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா?
* சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது.
* கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
* தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.
* மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன.
* ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
* குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.
* தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
- தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.
ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.
எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.
பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்ததாக முதல்வர் தகவல்
- உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக பேச்சு
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் ரவுடி அத்திக் அகமது, அவரது சகோதரர் படுகொலை போன்ற சம்பவங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில், லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசும்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
இனி உத்தரபிரதேசத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் கலவரங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சமடைவார்கள். இப்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2017-2023 காலகட்டத்தில் ஒரு கலவரம்கூட வெடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த நிலை ஏற்படவில்லை. உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
- விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
சாலைகளில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள வேகத் தடைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று தொடர்ந்து காவல்துறை மூலம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும், போதை பொருள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் குழு கண்கா ணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கோட்டப் பொறியாளர்(நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு) பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
- விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி 46,47, 48,49- வது வார்டிற்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர், மாநகர செயலாளர் என்.எஸ். சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பகுதி பொறுப்பாளர் டி. மனோகரன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அ.தி.மு.க. தனித்துவம் வாய்ந்த கட்சியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறம்பட வழி நடத்தி வருகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் நிலம் எடுப்புக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தி.மு.க அரசு குண்டர் சட்டம் போட்டது.
உடனடியாக இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டம் தெரிவித்து தானே தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.
அதன் பிறகே விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.
இதேபோல் தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இப்படி மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அடுத்து மக்களின் பேராதரவோடு மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பகுதி துணைச் செயலாளர் சிவகுமார், வட்ட செயலாளர்கள் கிருபாகரன் (46-வது வார்டு), மோகன் (47-வது வார்டு), பழனிவேல் (48-வது வார்டு), அண்ணாதுரை (49-வது வார்டு), தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி சிறுபான்மை பிரிவு சையது முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.
இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.
- காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
- இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்கிறார்.
மேலும் காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
- சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஜி.கே வாசன் வெளியிடுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பொது மக்களைப் பாதுகாக்க, அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது.
எனவே தமிழக அரசே, காவல் துறையே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் முறையான, சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.