என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழு அடைப்பு போராட்டம்"

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு கடந்த மாதம் கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டார்.

    இந்த பிரச்சினை இருமாநிலத்திலும் மொழி பிரச்சினையாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த சம்பவத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.


    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடியது.

    பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ரெயில், மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் சிக்கமகளூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் பஸ்நிலைய வளாகத்தில் திறந்து இருந்த கடைகளை அடைக்க சொன்னார்கள்.


    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. மேலும் வலுகட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்ல கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இதேபோல் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மைசூர் கிராமப்புற பஸ்நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை போராட்டக்காரர்கள் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விஜயநகர மாவட்டத்திலும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், கார் ஓடியது. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் திறந்து இருந்தன.

    பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் மராட்டியத்தில் இருந்து பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெலகாவி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் பெலகாவி மாவட்டத்தில் சாலைகளில் டயர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் மட்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    • கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    • கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.

    கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

    கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது.
    • எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நாளை மறுநாள் (29-ந் தேதி) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்குகிறார்.

    இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

    நாங்கள் வருகிற 29-ந் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை நடத்தியவர்கள் ஏற்கவில்லை. பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும்.

    இந்த போராட்டத்தில் 2,000 அமைப்புகள் பங்கேற்கும். திரைத்துறை, உற்பத்தி துறை, ஓட்டல், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினர், விமான நிலைய ஊழியர்கள் பந்த்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    நேற்று பெங்களூரில் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பந்த் நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எனவே வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்லும்.

    எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
    • இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    சண்டிகர்:

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.

    இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.

    இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.

    இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    • போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
    • போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளுக்குள் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மனித உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகளவில் நடந்து வருகிறது. புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டது.


    வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி மனிதர்கள் பலியாவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இந்தநிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வனவிலங்குகள் தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் வயநாடு மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்தது.

    அதன்படி இன்று வயநாடு மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வயநாடு மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

    அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பல இடங் களில் பதட்டமாக சூழல் நிலவியது.

    போராட்டக்காரர்கள் திரண்ட இடங்களில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் வயநாட்டில் தனியார் பஸ்கள் இன்று இயக்கப்பட வில்லை. சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களையும் மறித்து நிறுத்தினர்.

    இதனால் வயநாடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும்.
    • போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கொச்சி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

    மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்தது.

    வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.
    • ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுடெல்லி :

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) பல்வேறு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தன.

    ஆனால் இந்த போராட்டத்துக்கு பிரதான கட்சிகள் எதுவும் முறைப்படி ஆதரவு அளிக்காததால், ஓரிரு பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை. அதேநேரம் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஏராளமான ரெயில்கள் எரிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் நேற்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பீகாரில் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    ஒட்டுமொத்தமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 612 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதில் 223 ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகும். இதைத்தவிர மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியும், ஒரு வழியில் ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

    அக்னிபாத் போராட்டம் மற்றும் வன்முறையின் முக்கிய களமாக திகழ்ந்த பீகாரில் நேற்றைய பாரத் பந்த், போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. இதைப்போல சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

    முழு அடைப்பையொட்டி ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில மாவட்டங்களில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

    மேற்கு வங்காளத்தில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்திலும் எவ்வித இடையூறும் இல்லை. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுரா பாலம் மற்றும் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் இந்த முழு அடைப்பு லேசான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அங்கும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அரியானா மற்றும் பஞ்சாப்பின் பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. அரியானாவின் பதேகாபாத், ரோத்தக் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் இதில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இரு மாநிலங்களிலும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தலைநகர் டெல்லியில் அக்னிபாத் திட்டம் மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணை ஆகிய இரட்டை பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிவாஜி பாலம் ரெயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் ½ மணி நேரத்துக்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதைப்போல ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போலீசார், பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்தனர். அத்துடன் தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் தலைநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நொய்டா மற்றும் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரம் டெல்லியில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. முழு அடைப்பால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

    ×