search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிவிபத்து"

    • பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
    • 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

    • ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று பட்டாசு ஆலையில் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டது.

    இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு தீக்காயத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்த சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55), சின்னனூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (30), முத்துராஜ் (29), சுரேஷ் ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடித்த ஆலை முழுவதும் தண்ணீரை ஊற்றி பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    போலீசாரின் விசாரணையில் ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்க முற்படும்போது ஏற்பட்ட உரசலில் மருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    சிவகாசி:

    சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
    • காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
    • மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
    • தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

    நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அங்கு நேற்று மதியம் 2.10 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் ஆலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. 8 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. வெடி விபத்து நடந்ததும் அறைகளில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களில் சிலர் வெடிவிபத்தில் சிக்கினர். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டனர்.

    இந்த பயங்கர வெடி விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் சிலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில் ஆலை ஒப்பந்ததாரார் முத்து கிருஷ்ணனை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி:

    குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.

    5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.

    மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.

    கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.

    அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.

    காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.

    மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.

    இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

    மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.

    • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.

    • சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
    • இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.

    ×