என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் நிலம்"
- தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.
- அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது.
- கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே கருப்பராயன் கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இதன் அருகில் கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ஊர் கட்டுப்பாடு குத்தகை அடிப்படையில் கிராம மக்களில் சிலர் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கருப்பராயன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பிறகும் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தி வந்தோம்.
இந்த நிலையில் கடந்த வருடத்தில் கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் கோவில் நிலத்தை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகளும் தோண்டப்பட்டது.அதன்பின்னர் கடந்த ஒரு வருடமாக யாரும் இங்கு எட்டிப் பார்ப்பதில்லை. இந்த நிலையில் கம்பி வேலிகள் பழுதடைந்து விழுந்ததால், அந்த கோவில் நிலத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. கோவில் நிலம் குடிமகன்களின் பாராக மாறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதனைப் பார்த்து எங்களுக்கு வேதனையாக உள்ளது. தற்பொழுது இந்த கோவில் நிலம் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, அல்லது காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டும் எந்தத் தகவலும் இல்லாததால், தகவல் உரிமைச் சட்டத்தில் கூட கேட்டுள்ளோம். ஆனால் அதிலும் முறையான தகவல்கள் இல்லை. கண்ணெதிரே கோவில் நிலம் சீரழிவதை கண்டு வேதனையாக உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தேவகோட்டை அருகே கோவில் நிலங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
- இதுகுறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம் நடத்தினர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் ஊராட்சி கோட்டூர் நயினார் வயல் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சுமார் 200 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் கோட்டூர் நைனார் கோவில் கிராமத்தில் உள்ளன. இந்த விளை நிலங்களை 6 தலைமுறைகளாக இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை ஏக்கருக்கு சுமார் ரூ.350 வீதம் வரியை அறநிலையத்துறை வசூலித்து வந்தது. இந்த நிலையில் தேவகோட்டை சிலம்பணி விநாயகர் கோவிலில் செயல்படும் அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து இந்த விவசாயிகளுக்கு தற்போது விவசாயம் செய்யும் நபர்களின் மீது ரசீது போடப்படும் என தகவல் தெரிவித்தது.
ஏற்கனவே இறந்தவர்கள் பெயரில் ரசீது உள்ள நிலையில் அவரது வாரிசுதாரர்கள் பெயரில் ரசீது போடப்படும் என்ற தகவலால் அனைத்து விவசாயிகளும் அறநிலையத்்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அறநிலையத்துறை அதி காரிகள் கடந்த ஆண்டுகளை விட இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 12 மடங்கு அதிக வரி விதித்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி காமராஜ் கூறுகையில், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்று இருக்க 6 தலைமுறைகளாக விவசாயம் செய்த நிலத் திற்கு நாங்கள் பட்டா கேட்கவில்லை. நிலங்களை தரிசாக போடவில்லை. இதற்கு பலனாக தற்பொழுது 12 மடங்கு வரி விதித்திருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் அதை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகையை அறநிலையத்துறை பெற்று வருவது வேதனை அளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் நிலையில் அவற்றிலும் குறைந்த அளவே விளைச்சலும் உள்ளது. விவசாயம் இல்லை என்றால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றார்.
- மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது.
- நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்டு எல்லைக் கற்கள் நடும் பணியை அறநிலையத் துறை புதன்கிழமை தொடங்கியது. வெள்ளக்கோவிலை அடுத்த மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 520 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க, நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரன், செயல்அலுவலா் சு. இராமநாதன், திருக்கோயில் எழுத்தா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்கட்டமாக வெள்ளக்கோவில் கிராமம் கணபதிபாளையம், சுப்பிரமணியக்கவு ண்டன்வலசு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 ஏக்கா் நிலங்களை மீட்டு அந்த இடத்தில் எல்லைக் கற்களை நட்டுள்ளனா்.
இதேபோல கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."
- காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.
- 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா்.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம், வடசின்னாரிபாளையம் ஊராட்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காடையூா் காடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்ளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின்பேரில் இந்த நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். திருப்பூா் தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) சு.மகேஸ்வரன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை நில அளவையா், செயல் அலுவலா் அடங்கிய குழுவினா் முதற்கட்டமாக வடசின்னாரிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா். அதேபோல, கோவிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்த விவசாயிகள்.
- இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப் பட்டது.
மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சித்திரை திருநாளான இன்று திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி இன்று விவசாயம் செழிக்க வேண்டி தார் குச்சியில் பூச்சூடி திருப்பரங் குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் உழுது சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கிரிவலமாக வந்து மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோயில் பகுதியில் விவசாயி கள் அனைவரும் அமர்ந்து இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.
தங்களது பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினை களை பேசி தீர்த்தனர். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கிரிவலம் சுற்றி கோவில் வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
- கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.
கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக 900 ஏக்கா் நிலம் உள்ளது.
- முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக காங்கயம் வட்டாரத்தில் 900 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் சிவன்மலை சுற்றுப் பகுதியில் மட்டும் 233 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில் காங்கயம் அருகே நீலக்காட்டுபுதூா் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அதிகாரிகள் 2022ம் ஆண்டு அளவீடு செய்தனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் தற்போது அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நடுவதற்கு சிவன்மலை முருகன் கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, கண்காணிப்பாளா் பால்ராஜ், நில அளவையாளா்கள் கிருஷ்ணகாந்த், பிரதீஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.
அப்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருபவா் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், கல் நடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் கல் நடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினா்.
இதையடுத்து கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, காங்கயம் காவல் ஆய்வாளா் காமராஜ் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இப்பிரச்னை தொடா்பாக வருவாய் வட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
- தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளச்சேரி:
வேளச்சேரியில் தண்டீஸ்வரர் வேதஸ்ரேணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்ததமான காலி இடம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின்ரோட்டில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் நிலம் தற்போது பொதுமக்களின் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.
அந்த காலி இடத்தில் பழைய உபகரணங்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் புதிய குப்பை கிடங்காக கோவில் நிலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.
அப்பகுதியில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு விருந்து வைத்தார்போல் உணவு கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் மாடு உள்ளிட்ட விலங்குகள் எந்த நேரமும் அந்த இடத்தி, சுற்றி வருகின்றன.
குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் இந்த இடத்தின் குறுகலான சாலைகளில் வாகனங்களும் பல நாட் களாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்படுகின்றன.
கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, 'நான் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக கோவி லுக்கு சொந்தமான இந்த காலி இடத்தில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் நிலம் குப்பை கொட்டும் கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
இந்த இடத்தின் அருகே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோவில் இடத்தில் குப்பைகள், உணவுக்கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.
பொதுமக்களே இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கோவில் காலி இடத்தில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்து உள்ளது. இந்த மாதிரியான பொது இடத்தில் கழிவுகளை கொட்டாமல் இருக்க பொதுமக்கள், குடியிருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இல்லையெனில் கழிவுகளை கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள் விரைவில் அந்த இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
- நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
- கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான 90 சென்ட் நிலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.
இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் ஊழியர்கள் வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. மூலம் அதிரடியாக அகற்றிமீட்டனர். மேலும் அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
- கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தில் ஜோதீஸ்வரர், மாரியம்மன், அய்யனார், விநாயகர், கம்ப பெருமாள் உள்ளிட்ட கோவில்களுக்குச் சொந்தமாக சுமார் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் சொத்துக்களில் உரிமை கோரி பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதன் காரணமாக கோவில் சொத்துக்கள் முறையான பராமரிப்பின்றி இருந்தது. திருவேங்கடம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்ததால், அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.
இதையடுத்து 2019-ம் வருடம் முதல் கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனடிப்படையில் கோவில் சொத்துக்களை குத்தகை ஏலம் விடுவதற்காக, நேற்று அறநிலையத்துறை அதிகாரிகளான கோவில் தக்கார் சிவப்பிரகாசம், கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் வந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டசெயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பிச்சப்பிள்ளை, செல்வம் உள்ளிட்டோர், ஜோதீஸ்வரர் கோவில் இருக்கும் இடமே தெரியவில்லை. கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்த பின்பு தான், கோவில் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அதிகாரி களுக்கும், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் சொத்துக்களை ஏலம் விடுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.