search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி ஆறு"

    • இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.
    • புனித தோமையார் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    தமிழ்நாட்டில் தமிழ்மொழி முதன்முதலாக அச்சேறிய இடம், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல்.

    வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் தாமிரபரணி ஆறு 5 கிளைகளாக பிரிந்து கடலில் ஐக்கியமாகிறது. அவற்றின் நடுவில் கடலின் முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வந்தடைந்து கிறிஸ்தவத்தைப் போதித்தார். பின்னர் தமிழகத்திலும் வேதத்தைப் போதித்தார்.

    அவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் புன்னக்காயலில் அவரது நினைவாக ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில், ஏராளமான புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புன்னக்காயலுக்கு வந்து, புனித தோமையார் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளின் வழியாகவும் நடந்தே புனித தோமையார் ஆலயத்துக்கு செல்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் படகில் பயணித்து புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தவக்காலத்தில் ஏராளமானவர்கள் இங்கு வந்து புனிதரை தரிசிக்கின்றனர். இங்கு புனிதர் நிகழ்த்திய அற்புதம் ஏராளம்.

    முன்பு தாழ்த்தப்பட்ட மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபட்டதும் அவர்களின் நோய் நீங்கிற்று.

    இதையடுத்து அந்த குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக அசைவ உணவு சமைத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட பிற மதத்தினர் சமைத்த உணவு என்பதால் அதனை சாப்பிட யாருமே செல்லவில்லை.

    இதனால் வருத்தம் அடைந்த அந்த குடும்பத்தினர், தாங்கள் தயாரித்த உணவை, ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மண்ணில் குழி தோண்டி, பாத்திரங்களுடன் புதைத்துச் சென்றனர்.

    இதையடுத்து சில நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது புன்னக்காயல் ஊரையே தண்ணீர் சூழ்ந்தது. உடைமைகளை படகில் ஏற்றிக்கொண்டு மக்கள் கடலின் முகத்துவாரம் வழியாக வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முகத்துவாரத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆலய வளாகத்தில் அடுத்தவேளை உணவின்றி, கடும் பசியுடன் துயருற்று சோர்வுடன் கண் அயர்ந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், "ஏன் உணவில்லாமல் அனைவரும் வாடுகிறீர்கள்? இங்குதான் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளதே?" என்று ஓரிடத்தை காட்டி விட்டு மறைந்தார்.

    அப்போது அங்கு சுடச்சுட சாதம் வடித்து, கறிக்குழம்பு வைத்த மணம் நிலத்துக்கு அடியில் இருந்து வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டியபோது, அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்த சாப்பாடு, கறிக்குழம்பு நெடுநாட்களாகியும், கெட்டுப் போகாமல் அப்போது சமைத்த நிலையிலேயே சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

    அதனை எடுத்து சாப்பிட்டு பசியாறிய மக்கள், மேலும் 2 நாட்கள் வைத்து அவற்றை ருசித்து சாப்பிட்டனர். அதற்குள் வெள்ளமும் முழுமையாக வடிந்ததால் மக்கள் தங்களது வீடுகளுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.

    சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சமத்துவமாக வாழ, புனித தோமையாரே நேரில் வந்து தங்களுக்கு உணர்த்தியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணற்ற புதுமைகளை புனிதர் நிகழ்த்தியதாக தெரிவிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளை மக்கள் கடந்து செல்லும்போது, யாரேனும் வழி தவறி சென்றால், அவர்களுக்கு முன்னால் நாய்கள் நீந்திச் சென்று ஆலயத்துக்கு வழிகாட்டி அழைத்து வந்து சேர்ப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சாதுவான நாய்கள் சுற்றித் திரிவதை எப்போதும் காண முடியும். ஆற்றைக் கடக்கும்போது பாதைக்காக ஆங்காங்கே கொடிகளை நட்டு வைத்துள்ளனர். புனித தோமையார் ஆலயத்தின் முகப்பில் 2 சிலுவைகள் உள்ளன.

    அவற்றில் ஒரு சிலுவையை தோமையார் நிறுவி வழிபட்டதாகவும், மற்றொரு சிலுவை கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை ஆலயத்தில் நிறுவி வழிபடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    • மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம்.
    • இடி-மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை தவிர்க்கலாம்.

    நெல்லை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், 18 மற்றும் 19-ந் தேதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

    தென்காசி மாவட்டத்திற்கு இன்று மற்றும் வருகிற 18, 19-ந்தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், 16, 17-ந்தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்கள் உரிய எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் இடி-மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை தவிர்க்கலாம். மரங்களுக்கு கீழே ஒதுங்க வேண்டாம். காய்ச்சிய குடிநீரை பருகுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 18-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கையும், 19-ந்தேதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).

    யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    மதுரை:

    இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.

    ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.


    அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

    ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
    • முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    காஞ்சிபுரம் நாகதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மாணிக்கம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு மோகன்ராஜ், நவீன் (வயது 23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

    துரை மாணிக்கம் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் நேற்று காலையில் நெல்லை வந்தார். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை அண்ணன் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நவீன் உடலை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நவீன் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் மகன் நீரில் மூழ்கி மாயமானதால் அவரது பெற்றோர் கரையில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது.

    • மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.


    தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    • தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    * தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.

    * பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    * ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரு வெள்ள அபாயம் எதுவுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    அதன்படி, கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 7000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    • பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசான மழை பெய்யும்.

    நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த அதி கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் பொருட்களை நிவாரணமாக வழங்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் துறை மூலமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார், நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களாக நெல்லை, பாளை, சேரன்மகாதேவி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் உள்ளிட்ட வட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 16 கிராமங்களும், நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் மாவட்டம் முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், அதன் அடிப்படையில் அரசு அறிவித்த நிவாரண தொகை எந்தெந்த கிராமங்களுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.
    • சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சடையனேரிகுளம் கனமழையால் உடைந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டது.

    குளம் உடைப்பால் பாதிக்கப்பட்ட பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், வட்டன் விளை, மருதூர்கரை ஆகிய கிராமங்களில் இன்றும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. தொடர் விடுமுறைக்கு பின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று திறந்து செயல்படுவதால், நேரடி போக்குவரத்து வசதி இல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    ×