search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பி உதயகுமார்"

    • தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
    • 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    உசிலம்பட்டி:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாமல், ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியை தர மறுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மழலையர் முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட தேவைகள் இந்த நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சகவீதம் மாநில அரசு பங்கும் உள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.3,586 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை நான்கு தவணையாக வழங்கப்படும். முதல் தவணையான ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கப்பட வேண்டும், ஆனால் செப்டம்பர் மாதம் பிறந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

    புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை இணைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இணைந்த பின்பு தான் நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் மத்திய கல்வி துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழக கல்வித்துறை அமைச்சரோ புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லை என்று கூறுகிறார்.

    இன்றைக்கு கல்விக் கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் கொண்டு, நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த கடமையும் ஆற்றவில்லை. கல்வி நிதியில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு புதிய திட்டத்திற்கு மட்டும் ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2,214 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது அது ரூ.1,978 கோடியாக சுருங்கிவிட்டது.

    மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.25 கோடியாக ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், கடலூர் கடற்கரை சாலைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, கோவை போன்ற மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, ஆனால் கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி இல்லை, ரெயில்வே துறைக்கு நிதியில்லை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, வளர்ச்சிக்கு நிதி இல்லை, வறட்சிக்கு நிதி இல்லை என தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யலாமா? மத்திய அரசு நிதி தரவில்லை, அதைப் பெற்றுத்தர மாநில அரசுக்கு வக்கில்லை. இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சராக ஆவது தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாநில நிர்வாகிகள் துரை தனராஜன், வெற்றி வேல், டாக்டர் விஜயபாண் டியன், நகர செயலாளர் பூமா ராஜா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம் பட்டி ரகு, காசிமாயன், மகேந்திரபாண்டி, சிவசக்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.செல்வகுமார், சிந்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
    • அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.

    பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
    • அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.

    அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.

    2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
    • முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது. கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

    அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.


    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார்.
    • போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருமங்கலம்:

    கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமங்கலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அது தோல்வியில் முடிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் சுங்கச்சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
    • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

    தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

    முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது.
    • கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்?

    மதுரை:

    தி.மு.க. ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகிததார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தொண்டர்கள் பொதுமக்களுக்கு நேரில் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், அதனை நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அ.தி.மு.க. அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான அன்று, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

    கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின், ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

    நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்?

    உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல, அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவில் உள்ளது. காளிமுத்து கூறியது போல கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகள் கடும் உழைப்பில் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். யாரது உள்ளடி வேலையில் மூன்றாவது முறையாக சாதனை படைக்க இருந்த எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார்.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, தொண்டர்கள் எடப்பாடியுடன் நின்ற காரணத்தினால் அ.தி.மு.க.வை முழுமையோடு எடப்பாடி வழி நடத்துகிறார். 2 கோடி தொண்டர்கள் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

    33 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர்கள் தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி கொள்கிறார். ஆனால் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களது மக்கள் படுகின்ற கஷ்டத்திற்கு தீர்வு காண ஏதாவது முயற்சி செய்தாரா? கல்வியிலே, பொருளாதாரத்திலே பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.

    அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடடிக்கை எடுத்தார். இந்த சாதிய பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்துகிறாரே தவிர நம் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

    அ.தி.மு.க.வில் மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்? ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்று இருக்கிறார். அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து, பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

    காலமும், அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சசிகலாவிடம் யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

    கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது.
    • அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை.

    டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா? இல்லையா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

    அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார் அண்ணாமலை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

    பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும். இது சத்தியம்.

    அண்ணாமலை அல்ல, எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். நாவடக்கம் இல்லாத அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்தும் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
    • அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம், முதல் ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அ.தி.மு.க. தான்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.

    விக்கிரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    இந்த இடைத்தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிறபோது இப்போது தி.மு.க. தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம், அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் ஜெயலலிதா இளையான் குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார்.

    அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.

    மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்கள் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் நடக்காது. மக்கள் தி.மு.க.வுக்கு அது போன்ற ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அ.தி.மு.க. பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க. 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று தி.மு.க.விற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார், தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.

    52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை, எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகின்றார்.

    எங்களை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
    • தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாலாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நடவடிக்கை எடுக்கக்கூடிய வேளையிலே தி.மு.க. அரசு மவுனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பறிபோகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நம்முடைய மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது.

    ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது. தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு தெரிவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த தி.மு.க. அரசு மவுனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.

    ஆகவே சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இன்றைக்கு மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத்தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.

    தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திலே நமக்கு தீர்ப்பை பெற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து இதே மதுரையில் ஒட்டுமொத்த விவசாயிகள் பங்கேற்று மாநாடு நடத்திக் காட்டினார்கள். இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் தி.மு.க. அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது. கேரளா அரசின் செயலுக்கு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார்.

    ஜனவரி மாதமே அணை கட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். இது தொடர்பாக எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற நிலையை தி.மு.க. அரசு தொடருமானால் எடப்பாடியாரை நேரில் அழைத்து வந்து அவருடைய தலைமையில் எங்கள் ஐந்து மாவட்ட விவசாயிகளுடைய வாழ்வாதார ஜீவாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதா வழியில் எந்த அறப்போராட்டத்திற்கும் அ.தி.மு.க. தயங்காது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்தவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கமும், அரசியல் சூழ்ச்சியும் இருக்கிறது. இந்துத்துவா என்பது தனி விவாதமானது. அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அதற்கு எடப்பாடியார் விரிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார். உங்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது.

    அ.தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைப்பது போல் நீங்கள் பேசுவதை மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சேவை செய்து வருகிறார். அதில் அண்ணாமலைக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம், அச்சம் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை.
    • அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும். இந்த முல்லை பெரியாறில் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

    ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கேரளா அரசு புதிய அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

    ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு மனுவை கேரளா அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்து 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறின் உரிமை காக்க வேண்டிய தமிழக அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது. இது தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தற்போது முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர். அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா?.

    முல்லை பெரியாறு உரிமை பிரச்சனையில் தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம்.

    ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

    சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவை இல்லை. அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை அவரது தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, வீரசாவர்கர் ஆகியோரின் சாதனையை சொல்லி ஏன் பாராட்டவில்லை.

    மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவை அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் புகழ்ந்து பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×