என் மலர்
நீங்கள் தேடியது "நோய் தொற்று"
- 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
- கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடும்.
கண்வெண்படல அழற்சி என்ற 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கின்றனர். நாளுக்கு நாள் கண்நோய் சிகிச்சை பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண் சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறுகையில், `மெட்ராட்ஸ் ஐ' வைரஸ் கிருமியால் பரவி வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அதாவது, பாதிக்கப்பட்டவரின் கண்ணை பார்த்தால் மட்டும் பரவாது. அவர்கள் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உள்ள வைரஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது.
இந்த நோயில் இருந்து தப்பிக்க கண் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துத் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளை, பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டால் அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
`மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். 2 நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும் பூரண குணம் அடைய முடியும்' என்றார்.
- சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
- மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.
மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.
மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.
நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.
காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.
முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.
அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்
இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.
இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.
மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.
மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.
ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.
- ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
- சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.
நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.
எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்
சளி வந்தால் செய்ய வேண்டியவை:
* சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.
சளியுடன் வரும் இருமலுக்கு:
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.
* அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.
சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:
* திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.
* தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.
மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:
* தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.
பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.
கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.
மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:
* நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.
* படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.
சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:
* சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.
* அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.
* கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.
* தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.
- மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் ஏரிக்கரை தெரு, செல்வ விநாயகர் தெரு, திருக்கழுக்குன்றம் சாலை, முதல் குறுக்கு தெரு, 2வது மற்றும் 3வது குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதிக்கு ஏரிக்கரை தெருவை ஒட்டியுள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஏரிக்கரை தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கிய நீருடன், கருப்பு துருக்கள் கலந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 'ஃபெஞ்ஜல்' புயல் கனமழைக்கு பிறகு இது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, குடிநீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அங்கு உள்ள தரைமட்ட கிணறு மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் கிடப்பதால் தூசிகளும், சிற்பப்பட்டறை துகள்களும் கிணற்று நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாசடைந்த குடி நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தொண்டை மற்றும் உடலில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடிநீர் மாசு ஏற்படுத்தும் இந்த கிணற்றை மூடி பாதுகாத்து, நீர்தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,
தொடர்ந்து இப்படி மாசடைந்த குடிநீரை குடிப்பதால் இப்பகுதி முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, தொண்டை தொற்று, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க உள்ளோம், தற்போது பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலியாகி 60 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தால் இன்னும் கூடுதல் பயமாக உள்ளது என்றனர்.
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர், ஆக.21-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்பளிச்சாம் பாளையம் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஒட்ட பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவுநீர் வடிகால் ஊரின் எல்லை பகுதிவரை மட்டும் கட்டி நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினர் துர்நாற்றத்தினாலும், கழிவுநீர் தேங்குவதால் கொசு மற்றும் குடிநீர் குழாயில் இந்த கழிவு நீர் கலந்து வருவதால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் முகம் சுழித்து செல்லும் நிகழ்வும் தினமும்அரங்கேரி வருகின்றது.
மேலும் காலனியில் உள்பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்கிருந்து அம்மனம் பாளையம் என்ற பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் எடுத்து வருவதாகவும் இதற்கு உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.