search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் சிறைபிடிப்பு"

    • கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
    • 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி மகாராஜா உள்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

    அதேபோன்று அதே பகுதியை சேர்ந்த அந்தோணி தென் டேனிலா (வயது 23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

    இந்த 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தருவைகுளத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடற்படையில் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்ட 22 பேரை விடுதலை செய்யக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தருவைகுளம் ஊராட்சி கூட்டமைப்பினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
    • படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் நான்கு படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் படகுடன் 25 மீனவர்களை மீட்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன் தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், மீனவ சங்க நிர்வாகிகள் அலெக்ஸ், எட்வின்.டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாம்பன், தெற்குவாடி, சின்ன பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.
    • இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடுமுடியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நாங்குநேரி, ராதாபுரம் வட்டத்தில் சுமார் 16 கிராம மக்கள் பயன் அடைவார்கள். விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை செலவழித்து நல்ல முறையில் கார் பருவ சாகுபடி செய்ய வேண்டும்.

    இலங்கை அரசு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு. ஆனால் இலங்கை போன்ற சிறுநாடுகள் இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை இருந்த போதிலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு சென்று மீனவர்களின் படகுகளை திரும்ப கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.

    அதன் விளைவு இன்றளவும் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியும், மத்திய அரசும், பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அதனை பொருட்டாக எடுக்காமல், அந்த கோரிக்கையை பரிசீலனை கூட செய்வது இல்லை. 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் மீனவர்களையும், மீன்வளத்துறை அதிகாரிகளையும், இலங்கை அரசின் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

    இதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி சென்றால் தான் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்யும். மேலும் வழக்கமாக நாட்டுப்படகை பிடிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அதனையும் சிறை பிடிக்கின்றனர் என்றால், மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப்படகுகள் இலங்கை வசம் உள்ளது. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன் பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதி அன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த 3-வது சம்பவமாகும்.

    மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் அடிக்கடி நிகழும் இது போன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன.

    ஏற்கனவே இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிடவேண்டும்.

    எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப்படகுகள் இலங்கை வசம் உள்ளது. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன் பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    எனவே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும், எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் என்று மிரட்டி விரட்டியடித்தனர்.

    மேலும் 5-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தி, படகில் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகு ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • இந்திய கடல் எல்லைக்குள்ளாக இந்த சம்பவங்கள் நடப்பதால் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது; எனவே அது தொடர்பாக உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என கூறினார்.

    சென்னை:

    இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடகோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கே.கேஇ ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கு கடந்த 2-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இவ்விவகாரம் தொடர்பாக உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கே.கே. ரமேஷ் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

    அப்போது, நீதிபதிகள் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், அதே வேளையில் விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

    இவ்வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கபட்டனரா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், இதுவரை 86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை வைத்தனர்.

    அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில், இந்திய கடல் எல்லைக்குள்ளாக இந்த சம்பவங்கள் நடப்பதால் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியும் என தெரிவித்தார்.

    அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது; எனவே அது தொடர்பாக உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என கூறினார்.

    இதனைதொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்கப்படுவதாக கூறி, இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து, மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    ×