என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட கலெக்டர்"
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இருவரும் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள்.
- முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 3 வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் கணவன்-மனைவி மற்றும் சின்ன குழந்தையும் இருப்பதால் பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இருவரும் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள். முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றிய போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றினார்.
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித் கூறியதாவது:-
நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது.
எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாக கருதுவதில்லை. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு இருவரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும். அரசு நம்பி பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
- உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர். தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் FSSAI உரிமம் /பதிவு எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.
- ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள்.
வில்லிவாக்கம்:
கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த மாஸ்டர் வசந்தகுமார்ஜி தலைமையில் பொதுமக்கள் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், "நாங்கள் 200 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.
எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்த போது இந்த பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் அரசாங்க ஏரி உள்வாயில் புறம்போக்கு என்று எங்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் தளம் போட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இதே முகவரியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 1994 -ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சர்வே எண் 13,14, பாரத் ராஜீவ் காந்தி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சிறப்பு தாசில்தார் விஜயகுமார் என்பவரின் தலைமையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நகலை வைத்து நாங்கள் பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள். எனவே தாங்கள் எங்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
- பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2025 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
- மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவு.
- விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.
மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த புகைப்படங்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் வக்கீல், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்தனர்.
மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.