search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷான் மசூத்"

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் கைப்பற்றியது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.

    இதைத் தொடர்ந்து வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது.

    இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நம்மை எப்படி மேம்படுத்தலாம் என்றும், நமது டெஸ்ட் பக்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன்.

    சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

    இந்தத் தொடரை இழப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வீரர்கள் சிறப்பாகச் செயல்பட விரும்பினர் என்பதும் உண்மை.

    ஆனால் நாங்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. நாம் முன்னேற வேண்டுமானால் சில தோல்விகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

    அதில், முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க அணி முயற்சிக்க வேண்டும்.

    முக்கிய விஷயம் என்னவென்றால், வேகப்பந்துவீச்சில் நமது பங்குகளை உருவாக்க வேண்டும். தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடும் பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமளித்து நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

    ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

    முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

    ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
    • ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.

    இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.

    ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.

    எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 2-வது இடம் பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாளை கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஏறக்குறைய பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. இருந்தாலும் அடுத்த அணிகளின் செயல்பாடுகளை பொறுத்து வாய்ப்புள்ளது.

    தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +0.730) முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.441) 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.117) 3-வது இடத்தில் உள்ளது.

    நாளை தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்தையும், இந்தியா ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தான் வங்காளதேசத்தையும் எதிர்த்து விளையாட இருக்கின்றன.

    இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்காவுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் கூறியதாவது:-

    இழந்த தருணங்கள் எங்களுக்கு விலைமதிப்புமிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் நாங்கள் இன்னும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற முடியவில்லை.

    அதேசமயம் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்க்கை நமக்கு கடினமான பாடங்களை கற்று தருகிறது. அதில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் தூக்கத்தை தொலைத்ததுடன், அவர்களின் மன உறுதியையும் கெடுத்துவிட்டது.

    அந்த பின்னடைவுகளுக்குப் பிறகு நாங்கள் எவ்வாறு மீண்டு வந்தோம் என்பது எங்கள் தன்மையை காட்டியது. அது ஒரு பெரிய விஷயம்.

    தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிறந்த விஷயம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான். சமநிலையான பார்வையில் இருந்து நாம் பார்த்தோம் என்றால், ஜிம்பாப்வேயுடனான தோல்விக்குப்பின் நாங்கள் சிறப்பாக விளையாடி மீண்டு வந்தோம்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், நாங்கள் நன்றாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். மழைக்குப்பின் கூட நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை இழக்கவில்லை.

    ஆகவே, கடைசி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்துவோம். இதுதான் எங்கள் கையில் உள்ளது. எங்களுடைய குரூப்பில் கடைசி பந்து வீசும் வரை நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×