என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை பெரியார்"
- அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.
- பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நமது கவியரசர் கண்ணதாசன் 1927-ம் ஆண்டிலேயே சிறுகூடல் பட்டியிலே பிறந்திட்டார். சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டின் போது கண்ணதாசனுக்கு வயது இருபது. எனவே சுதந்திரப்போராட்ட வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர். சிறுகூடல் பட்டியிலே இருந்த `பாரதமாதா' வாசகசாலைதான் கண்ணதாசனுக்கு அறிவை வளர்த்தது. சிந்தனையை ஊட்டியது என்பதே உண்மையாகும்.
அண்ணல் காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை விரும்பி தேர்ந்தெடுத்து படிப்பார். ஏடுகளில் காந்தியடிகளை பற்றி வருகிற செய்திகளை எல்லாம் படித்து உள்வாங்கிக் கொள்வார். எவ்வித ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.
அப்படிப்பட்ட காந்தியடிகளை பற்றி பல மேடைகளில் கண்ணதாசன் உதாரணம் காட்டி அவரது அருமை பெருமைகளை பேசுவதுண்டு. கட்டுரைகளை எழுதியதும் உண்டு. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டுமே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 6-ம் தொகுதியிலே காந்தியடிகளைப்பற்றி `தீபம் போதும்' என்ற தலைப்பிலே வெளியாகி உள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காட்டினுள் தேடித் தேடிக்
கற்பகத் தருவைக் காண்போம்...!
வீட்டினிள் தேடித் தேடி
விளக்கையோர் இடத்திற் கண்டோம்...!
ஏட்டினுள் தேடித் தேடி
இணையிலாக் கவிதை கண்டோம்
நாட்டினுள் தேடுகின்றோம்
நாயக! நின்னைக்காணோம்...!
நாற்பது கோடிக் கென்று
நடுங்கிய தடியை ஊன்றி
ஏற்பதை ஏற்று வாழ
இருப்பினும் தொடர்ந்து சென்று
நூற்பது முதலாய் நன்மை
நுவல்வது வரையிற் சொல்லி
வேற்படை திரட்டி வென்றாய்
வீரனே நின்னைக் காணோம்...
காந்தியின் பெயரைக் கண்டோம்
காலடிச் சுவடைக் கண்டோம்
காந்தமென் றொன்றைக் கண்டோம்
தனியறம் தழைக்க கண்டோம்
மாந்தருள் நின்னைப் போல
மற்றொரு வைரம் காணோம்...
ஏந்திய தீபம் நின்சொல்
இன்னொளி போதும் தேவா...
என்று காந்தியை பற்றிய கவிதையை நிறைவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
சாந்தமாய் திகழ்ந்து சரித்திரம் படைத்திட்ட ஒரு மகத்தான மாமனிதரை எங்கெல்லாமோ தேடிப்பார்க்கிறோம். அப்படி ஒரு மனிதர் எங்கள் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை என்று காந்திக்கு புகழாரம் சூட்டுவதோடு, கொள்கையிலும், மனதைரியத்திலும் ஒரு வைரம் போலே ஒளிவீசி வாழ்ந்து மறைந்தார் என்று வர்ணித்து எழுதுகிறார் கண்ணதாசன்.
`ராஜாஜி பற்றி கண்ணதாசன்'
முதறிஞர் ராஜாஜி மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். கட்சி ரீதியாக அவரோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், அவருடைய வயதின் மூப்புக்கருதியும், அவருடைய இலக்கிய ஞானம் கருதியும் ராஜாஜி மீது தனி மரியாதை வைத்திருந்தார் கண்ணதாசன்.
`சக்கரவர்த்தி திருமகன்' என்ற ராமாயணம் பற்றிய நூலில் ராஜாஜி ரத்தின சுருக்கமாக எழுதி வெளியிட்டதை எப்போதும் பெருமையுடன் கண்ணதாசன் கூறி மகிழ்ந்திடுவார். அதேபோல மகாபாரதத்திலும் ராஜாஜிக்கு நல்ல புலமை உண்டு. ராஜாஜியின் சில புத்தகங்கள், திரைப்படங்களாக வடிவம் பெற்றுள்ளதையும் கண்ணதாசன் அடிக்கடி குறிப்பிடுவார்.
'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நாவல் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றதையும் கண்ணதாசன் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனால் ராஜாஜி முதல்வராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் கண்ணதாசனும் ஒருவர். ராஜாஜி எப்பொழுதுமே மேல்தட்டு மக்களின் பக்கமே இருப்பார் என்பதிலும் கண்ணதாசனுக்கு ராஜாஜியின் மீது கடும் கோபம் இருந்தது.
ஆனால் ஒரு கவிஞன் என்று வரும் போது, பொது மனிதனாக இருந்து எல்லோரையும் சமமாக பாவிப்பதே கவிஞருடைய கொள்கை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட சமநோக்கில் தான் ராஜாஜியின் குணநலன் குறித்தும், அவருடைய ஒழுக்கமான பொது வாழ்க்கை குறித்தும், மதி நுட்பம் குறித்தும் கவிதையில் மிக சிறப்பான பாராட்டுக்களை வழங்கியுள்ளார் கண்ணதாசன்...
தலை சிறந்த தமிழர்களான பேராசிரியர் கல்கியும், கல்கி சதாசிவமும், தமிழ் அறிஞர் டி.கே.சி.யும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்கியின் எழுத்துகளில் மனதை பறிகொடுத்தவர் கண்ணதாசன். எனவே அந்த வகையிலும் ராஜாஜியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். 'தேசத்தை ஈர்த்த தமிழன்' என்ற தலைப்பிலே கண்ணதாசன் எழுதிய கவிதையை பார்ப்போம்.
ஊராண்டு நாடாண்டு
உயர்வான மேதைகளின்
உள்ளத்தை ஆண்ட மனிதன்...
உடலாண்டு மனம் ஆண்டு
ஒரு தொன்னூற் றைந்தாண்டு
உலகத்தில் வாழ்ந்த அறிஞன்
சீராண்டு வேதாந்த
சித்தாந்த மெஞ்ஞானம்
சேர்த்தாண்ட ஞான முனிவன்
தெளிவோடு பலவாண்டு
தென்னாட்டு மாந்தர்க்கு
தெய்வத்தை சொன்ன கலைஞன்
என்று முதல் கவிதையிலேயே முத்திரைபதிக்கிறார் கண்ணதாசன். ராஜாஜியின் தேசத் தொண்டினை மட்டுமல்ல தெய்வீகத் தொண்டினையும் பாராட்டி மகிழ்ந்தார் கண்ணதாசன்.
ஊராட்சி என்றாலும்
நகராட்சி என்றாலும்
ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்
ஒரு போதும் தன் கட்சி
நிருவாக தலையீட்டை
ஒப்புக் கொள்ளாத தலைவன்
சீரான அரசாட்சி
சிலகாலம் செய்தாலும்
திறமாக செய்த புனிதன்
தென்னாட்டு மாந்தர்தம்
திறமைக்குச் சான்றாகி
தேசத்தை ஈர்த்த தமிழன்
தேராத நூலில்லை
தெளியாத பொருளில்லை
சென்றோடி விட்டதெனவோ...
என்று அடுத்த கவிதையில்... ராஜாஜியின் குண நலன்களை பாராட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்
வாழ்வாங்கு வாழ்வாரைத்
தெய்வத்துள் வைக்குமொரு
வையத்துள் வாழும் மனிதா- இந்த
வையத்துள் ராஜாஜி
வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா...?
மாபார தத்தினிலும்
ராமாயணத்திலும்
மனதார மூழ்கி நீந்தி
மனநீதி பொய்யாது
மறைநீதி அகலாது
வாழ்வார்க்கு ஆத்ம சாந்தி
பூபாரம் ஏற்றானை
புகழ்பாரம் கொண்டானை
பொழுதென்றும் வாழ்த்து மனமே
என்று பாடி ராஜாஜியை போல பொய்யாத மானிடர்கள் வருக தினமே என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்...
பெரியார் பற்றி கண்ணதாசன்
பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன். ஆரம்ப காலங்களில் நாத்திகராகவும், பகுத்தறிவு வாதியாகவும் இருந்தவர் தான் கண்ணதாசன்... அப்போதெல்லாம் பெரியாரின் கொள்கை பற்றி பேசாத நாளில்லை. தி.மு.க.வில் இணைந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னும் பெரியாரை பற்றி எந்த விமர்சனமும் செய்ததில்லை. பெரியார் மட்டும் இல்லையெனில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் இப்படி ஓர் விழிப்புணர்வு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதே கண்ணதாசனின் கருத்தாகும். "ஈரோட்டு விடிவெள்ளி" என தலைப்பிட்டு
தங்க வண்ண மேனியும், புன்னகை
தாங்கும் இன்ப வதனமும், கண்களில்
பொங்கும் வீரப்புலிப் பார்வையும்
புவனம் யாவையும் தன் வயமாக்கிடும்
எங்கள் தந்தை ஈரோட்டு அண்ணல்
என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்.
'மேடை ஏறி நின்றிடில் ஓர்எழில்
மெய் சிலிர்க்க பேசிடில் ஓர் எழில்
தாடை தாங்கும் தாடி அசைந்திடில்
தனிப்பெரும் எழில்! கருநிறத் தமிழ்
ஆசை காற்றில் அசைந்திடில் ஓர்எழில்
ஈடிலாத நம் ஈவெரா' என்று
பெரியாரின் தோற்றப் பொலிவை வர்ணித்து மகிழ்கிறார் கண்ணதாசன்.
'தூங்கினோர் தமை தட்டி எழுப்பியும்
சோம்பல் நெஞ்சினை சுறுசுறுப்பாக்கியும்
பாங்கு காட்டியும், பண்பை ஊட்டியும்
பாதை மாறிய வேதனை கூறியும்
தீங்கு நீங்கிட தினவு கொண்டெழு
தீரனே என வீரம் ஊட்டிய வேந்தர்'
என்றும்...
எனது தாயகம்! எனது தோழர்கள்
எனது தாய்மொழி! எனது சோதரர்
என்பதே நினைவான உள்ளமாம்
இழையும் மூச்சிலும் இந்த வெள்ளமாம்
என்றும் பெரியாருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் கண்ணதாசன்.
ஊன்றி வரும் தடிசற்று நடுங்கக் கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை
தோன்றி வரும் வடிவினிலே நடுக்கள் தோன்றும்
துவலாத கொள்கையிலே நடுக்கமில்லை
வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை.
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்
ஐயாவுக்கிணை அவரே! மாற்றோர் இல்லை.
சாதியெனும் நாகத்தை தாக்கி தாக்கி
சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு
நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்
நாற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்.
பிறப்பினிலே பெரியாராய்தான் பிறந்தார்.
ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தோய்ந்து
அளிக்காத கருத்தில்லை; அழுத்தமாக
தாக்காத பழமையில்லை, தந்தை நெஞ்சில்
தழைக்காத உவமையில்லை, தமிழ் நிலத்தில்
நீக்காத களையில்லை, நினைத்துச் சொல்லி
நிலைக்காத பொருளில்லை, நீதி கூடக்
காக்காத உலகத்தை பெரியார் காத்தார்'
என்று பெரியாரின் 85-வது ஆண்டு பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது எழுதியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப்பட்ட பெருமைகளுக்குரிய பெரியார் மறைந்த போது...
சரித்திரம் இறந்த செய்தி
தலைவனின் மரணச் செய்தி
விரித்ததோர் புத்தகத்தின்
வீழ்ச்சியைக் கூறும் செய்தி
மரித்தது பெரியாரல்ல..
மாபெரும் தமிழர் வாழ்வு...
இறக்கவே மாட்டார் என்று
இயற்கையே நம்பும் வண்ணம்
சிறக்கவே வாழ்ந்த வீரன்
சென்றதை நம்புவேனா
மறக்கவா முடியும் அந்த
மன்னனை, அவன் எண்ணத்தை'... என்று
பெரியாரின் பெருமையை வரிசைப்படுத்தி அஞ்சலி செலுத்துகிறார் கண்ணதாசன்...
அடுத்த வாரம் சந்திப்போம்...
- சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்
- மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.
2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல் படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று "சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ' கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்" என அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விருதானது ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது. வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றவர். இவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர்: 92 ஆண்டுகள் நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.
தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
பல்வேறு நூல்களைப் படைத்துள்ள வி.என்.சாமி அவர்கள் எழுதிய "புகழ்பெற்ற கடற்போர்கள்" என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தமிழ்நாட்டின் வால்ட்விட்மன் என்று வி.என்.சாமி அவர்களைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது.
- மாணவர்கள் சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள்.
பெங்களூர்:
கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்கொ ரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது. இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்சபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு கர்நாடக அரசின் 6 முதல் 10 ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.
இந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, 10-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சமூக சீர்த்திருத்தங்கள் பாடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மாணவர்களை சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள் என கர்நாடகா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில், தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடன்பிறப்பே,
வைக்கோம் 100 வழங்கிய அறிவொளியில் சமத்துவச் சமூகத்திற்கான வெளிச்சத்தைப் பார்…
காரிருள் என வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைவோம்! வெற்றி காண்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
- பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும், தமிழ்நாடு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய போராட்டங்களின் விளைவாகவே பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும்.
வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள் முனையளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள்.
- சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதேபோல் சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் அமைதியை சீர் குளைக்கும் விதமாக பேசுவது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
- தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.
தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.
அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.
தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.
ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.
அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.
ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.
அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
- சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, " பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது.
அதனால் சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.
- ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும்.
சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.
என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள்.
திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.
- சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், நாம் தழிமர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.