என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி சுட்டுக்கொலை"

    • காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 40). இவர் மதுரை மாநகர தி.மு.க பிரமுகரும், முன்னாள் மண்டல தலைவருமான வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். காளீஸ்வரன் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரில் 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே சென்ற போது காளீஸ்வரனை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), மதுரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் நவீன்குமார் (22), ஜெயக்கொடி (65), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 18 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் பாலகிருஷ்ணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வி.கே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் இரு தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் 3 நாட்களுக்கு முன்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 கிலோ கஞ்சாவுடன் நின்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அதில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர்தான், கஞ்சா விற்பனை செய்ய சொன்னதாக தகவல் தெரியவந்தது. மேலும் அவர் காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

    அவரை தனிப்படை போலீசார் தேடிய நிலையில் விளாச்சேரி பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

    விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார். போலீசாரும் அவரை காரில் விரட்டிச் சென்றனர். மேலும் அந்த பகுதிகளில் இருந்த சோதனைச்சாவடிகளில் இருந்த போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஒரு சோதனைச்சாவடியில் சுபாஷ் சந்திரபோசின் காரை போலீசார் மடக்கியபோது அவர்களிடம் இருந்து தப்பி சென்றார்.

    இதையடுத்து ரிங்ரோடு கல்லம்பல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அவரது காரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்து தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சரண் அடையுமாறு கூறினர்.

    ஆனால் அவர் தன்னிடமிருந்த பெரிய கத்தியை எடுத்து போலீசாரை தாக்கினார். அதில் போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது துப்பாக்கியை காட்டி சுபாஷ் சந்திர போசை சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார். அதில் அந்த குண்டு கார் மீது பட்டது.

    எனவே தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் திருப்பிச் சுட்டபோது மார்பில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மதுரையில் வி.கே.குருசாமி, வெள்ளை காளி தரப்பினரிடையே நடைபெற்று வரும் 22 ஆண்டு கால பகை காரணமாக 21 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் வெள்ளைக்காளி தரப்பில் 3 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையர் கூறுகையில்,

    ரவுடி சுபாஷ் சந்திர போஸ், போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதால், தற்காப்புக்காக என்கவுண்ட்டர் நடந்தது. காலில் சுட முயன்றபோது, குனிந்ததால் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்தார்.

    • 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர்.
    • கடந்த 12-ந் தேதி 4 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.

    கோவை,

    கோவை ஆவாரம்பா ளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 4 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.

    இந்த முன் விரோதத்தில் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்திய பாண்டியை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சஞ்சய், அவரது கூட்டாளிகளான காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சம்பவம் கோவையில் நடைபெற்றதால் இந்த வழக்கு கோவை கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

    மேலும் சரண் அடைந்தவர்களை கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.

    அதன்படி சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் கோவை தனிப்படை போலீசார் வேலூர் சென்று, பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்களை கோவை மத்திய ஜெயலில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரேஸ்கோர்ஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.3 கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை நாளை வர உள்ளது.விசாரணையின் போது, கைதான சஞ்சய் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.விசாரணையில் முடிவில் அவர்களுக்கு காவல் வழங்கப்படும் என தெரிகிறது. அதன்பின்னர் அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன.
    • 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குர்பான் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் உத்தரபிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர். இதுபோல சுல்தான்பூர் போலீசாரும் குர்பான் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டம் மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை அருகே குர்பான் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அதிரடி படை போலீசார், மஞ்சன்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி குர்பானை போலீசார் கண்டுபிடித்தனர். அவனை சரணடையும்படி போலீசார் கூறினர். ஆனால், அவன் சரணடைய மறுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி குர்பான் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தான். அவனை மீட்ட போலீசார், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கவுசாம்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

    கவுசாம்பி மஞ்சன்பூரில் ரவுடி ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த ரவுடி போலீசாரை நோக்கி சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டதில் அவன் மயங்கி விழுந்தான். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியதில் அந்த ரவுடி இறந்திருப்பது தெரியவந்தது.

    இறந்த ரவுடி யார்? என விசாரித்த போது, அவன் போலீசார் தேடிய குர்பான் என தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று குர்பான் என்ற ரவுடியும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

    • ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
    • அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    டெல்லி:

    டெல்லியில் முண்ட்கா பகுதியை சேர்ந்தவர் அமித்லக்ரா (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் ஜாமீனில் வந்த இவர் நேற்றிரவு வீட்டருகே நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அமித்லக்ரா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    அமித்லக்ரா அப்பகுதியை சேர்ந்த கோகி கும்பலில் ஒருவராக இருந்துள்ளார். இந்த கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததும், இந்த விரோதத்தில் தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று அமித்லக்ராவை சுட்டுக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கொலையாளிகளை அடையாளம் காண, கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பகுதியில் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. அங்குள்ள வெல்கம் பகுதியில் கபீர் நகரில் மொபட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு விட்டு அவரது மொபட்டை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் நதீம் என்ற பாபி மற்றும் ஷான வாஸ் என்ற 2 பேர் காயம் அடைந்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நதீம் இறந்து விட்டார். ஷானவாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஜோதி நகரிலும் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    ×