search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் பலி"

    • 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராயம் விஷ சாராயமாக மாறியதாலேயே அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். 

    கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்ததாகவும், அதனை அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பலியான 5 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரே தெருவில் உள்ள தங்கள் வீடுகளில் 5 பேரின் சடலங்களையும் வைத்து இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே 5 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தனர் என்ற குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மறுத்துள்ளார். அவர்கள் வயிற்றுப் போக்கு, வலிப்பு நோய்களால் இறந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

    கள்ளச்சாராயம் குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், வேறுசில உடல் பாதிப்பால் அவர்கள் உயிரிழந்ததாக கலெக்டர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


    • மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.

    சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.

    கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல... டாஸ்மாக் மதுவை குடித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
    • உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    கள்ளச்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 10 பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.

    மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

    கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் 5 உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கள்ளச்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    "கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
    • கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
    • கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, வெண்குடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் கள்ளச்சாராயம் விற்றதாக வாலாஜாபாத் போலீஸ் நிலையம், மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.

    இதையடுத்து தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று கள்ளச்சாராய வியாபாரி கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த அறிவிப்பாணையை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கள்ளச்சாராய வியாபாரி கணேசனுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வழங்கி உள்ளனர்.

    • கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

    இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    திருச்சி:

    பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

    இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பா.ஜ.க.வை தோல்வி அடைய செய்தார்கள். 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும்.

    கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சிறுபான்மையினர் அணியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.கே.கிளாரன்ஸ், வி.பி.துரைசாமி, செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் டால்பின் ஸ்ரீதர், நடிகை நமீதா, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன், தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
    • மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மதுராந்தகம்:

    செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன், முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுவையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.

    இது தொடர்பாக புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்த பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய 2 பேரை புதுவை போலீசார் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வானரகம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பியிடம் மெத்தனால் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஏழுமலை, பர்க்த்துல்லா, இளையநம்பி ஆகிய 3 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    22 பேர் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கினர்.

    சம்பவம் நடந்த மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தினர்.

    ஏழுமலையும், பர்கத்துல்லாவும் சென்னை வானகரம் தொழிற்சாலையில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்தனர். அதனை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    அந்த மெத்தனாலை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.

    அதனுடன் சேர்த்து கொரோனா காலத்தில் தயாரிக்கபட்ட காலாவதியான மெத்தனாலையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க பர்கத்துல்லாவும், ஏழுமலையும் அதிகமாக மெத்தனாலை வாங்கி வைத்திருந்தனர். அதில் கள்ளச்சாராயம் தயாரித்தது போக மீதமுள்ள மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தனர்.

    அந்த மெத்தனாலை தற்போது புதிதாக வாங்கிய மெத்தனாலுடன் கலந்து மரக்காணம், செங்கல்பட்டில் இருந்து வந்த சாராய வியாபாரிகளுக்கு விற்றுள்ளனர். அதனை அவர்கள் கள்ளச்சாராயத்துடன் கலந்து குடிமகன்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதால் அதனை வாங்கி குடித்தவர்கள் பலியானதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
    • சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து 14 பலியான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள்.55-க்கும் மேற்பட்டோர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவ மனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விஷச்சாராயம் குடித்து 14 பேரி பலியானதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிக்கு டி.எஸ்.பி. பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், சீனிவாசன், மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி, விஷச்சாராய விற்பனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம், உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.எஸ்.பி. கோமதி நியமிக்கப்படார்.

    இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. கோமதியிடம் வழங்கப்பட்டது.

    இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கினார்கள். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மெத்தனால் வழங்கிய ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்குதொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    ×