search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை அபகரிப்பு"

    • ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார்.
    • நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ். இவரது மனைவி அபிநயா. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

    அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேசிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தற்போது வரை நகையை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் 21 பவுன் நகைகளை கணவன்-மனைவி அபகரித்தனர்.
    • கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). இவருக்கு மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக விளாம்பட்டியை சேர்ந்த ஜூலியட் ராணி, அவரது கணவன் சுந்தரமூர்த்தி ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் நட்பாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக மகேஸ்வரியிடம் ஜூலியட் ராணி கேட்டார். ஆனால் தற்போது பணம் இல்லை என்று மகேஸ்வரி கூறி யுள்ளார். ஆனால் ஜூலியட் ராணி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதன்பின்னர் தனது 3 பவுன் நகையை மகேஸ்வரி கொடுத்துள்ளார்.

    இதனிடையே வீட்டு கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜூலியட் ராணியிடம் மகேஸ்வரி கூறியுள்ளார். அப்போது தாங்கள் நகையை அடகு வைத்து கடன் பெற்று தருவதாக ஜூலியட் ராணி கூறியுள்ளார்.

    அதனை கேட்ட மகேஸ்வரி தான் ஏற்கனவே அடகு வைத்திருந்த 18 பவுன் நகைகளை திருப்பி ஜூலியட் ராணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். சந்தேகமடைந்த மகேஸ்வரி அதுகுறித்து விசாரித்த போது

    ஜூலியட் ராணியும், அவரது கணவரும் தங்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதும், அந்த பணத்தை மகேஸ்வரிக்கு கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜூலியட் ராணியிடம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நகைகளை திருப்பி கொடுக்குமாறு மகேஸ்வரி கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. நகைகளையும் கொடுக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மகேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×