என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி"
- லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
- பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.
சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.
சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.
இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.
அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள போதிலும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அதிகாரிகள் செல்லும்போதெல்லாம் கேரள அரசு அதிகாரிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் அணை பலம் இழந்து விட்டதாக அடிக்கடி வதந்தி கிளப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து தமிழக பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வருகிற 1ந் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டுகள் அணையை கொண்டு வர உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற ஆய்வு அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளாவுக்கு சாதகமாகும் என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கமிஷன் பரிந்துரையை கண்டித்து இன்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இருமாநில எல்லையில் பதட்டம் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு படி பேபி அணையை பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்துச் செல்லக்கூடாது. ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வருகிறது. ஆனால் போலி அறிக்கை வெளியிட்ட சர்வே ஆப் இந்தியாவை கண்டித்தும் போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
- வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாபேட்டை, வெட்டிக் காடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான அம்மாபேட்டை, விழுதியூர், உக்கடை, புத்தூர், கோவிந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
வயல்களில் தண்ணீர் தேங்கியதற்கும், மழைநீர் வடியாததற்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே காரணம் எனக்கூறி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உடனடியாக வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
- கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பல்லடம்:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எரிவாயு குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிவாயு குழாய்களை ஐ.டி.பி.எல். நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தைச் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம் கிராமத்தில் நேற்று விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரும், கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
- பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்தது. 3-வது நாளாக இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதபுரம் நகர், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. விடுமுறை எதுவும் அறிவிக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
குறிப்பாக முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் விவசாய நிலங்களில் மழை புகுந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-15.20, திருவாடானை-9, பரமக்குடி-30, கமுதி-19, கடலாடி-41.80, வாலிநோக்கம்-18.80, தொண்டி-3.40, முதுகுளத்தூர்-6.60. மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 175.10 மி.மீட்டர் ஆகும்.

விருதுநகர் மாவட்டத்திலும் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது.
விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி ரோடு பாவாலி ரோடு பாத்திமா நகர் மற்றும் எம்ஜிஆர் சிலை எதிரில் அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது சராசரியாக 68.53 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 114 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் கண்மாய் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கரைபுரண்டு ஓடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் திருச்சுழி அருகே கொப்புசித்தம்பட்டி அருந்ததியர் தெருவில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் பெரிய கண்மாய் நிறைந்து மறுகாலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மறவர் பெருங்குடி உப்பு ஓடை, திருச்சுழி குண்டாறு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மறவர் பெருங்குடி பகுதியில் உள்ள அரசுபள்ளியின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் பள்ளி வளாகமே வெள்ள காடாக காட்சியளித்தது.
மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்துள்ள நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே பெரியகோட்டை கிராமத் தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் 300 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.
- பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
- ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு அருகே கோணக்கடுங்காலாறு உடைப்பு ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. இதேப்போல் அம்மாப்பேட்டை, புத்தூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
திருவையாறு, வளப்பக்குடி, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை தொடர்ந்து தோட்டத்தில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாலை இலை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாழை இலைகள் அறுக்க முடியாமல் மரத்திலேயே கிழிந்து வீணாகி வருவதாக விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார்.
இதேப்போல் மழையால் நிலக்கடலை, உளுந்து, செங்கரும்பு போன்ற பல பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 375 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து, வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இன்றி காணப்பட்டது. இதனால் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
- காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த காட்டு யானைகளும் ஏற்கனவே அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகள் என மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை கஸ்பா பகுதியில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
இந்த காட்டு யானைகள் கவிக்கோவில், மாரசந்திரம் மேடு, சாப்ராணப்பள்ளி, சீனிவாசபுரம், லக்கசந்திரம் வழியாக அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை கொத்தூர், உச்சனப்பள்ளி, அர்த்தகூர், பாலதோட்டனப்பள்ளி, ரங்கசந்திரம், கோட்டை உலிமங்கலம் கிராமங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் ஓசூர் சானமாவு, ராயக்கோட்டை, ஊடேதுர்கம், தேன்கனிக்கோட்டை கஸ்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
இதனிடையே, 20 யானைகள் தாவரக்கரை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் யானைகளை விரைந்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
- பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .
தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
- பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.
குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.