என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் போராட்டம்"

    • அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
    • அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

    கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.

    தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். 

    • தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
    • ‘எம்புரான்’ திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

    கம்பம்:

    மலையாள நடிகர் மோகன்லால், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் 17 இடங்களில் வந்த படக்காட்சிகளை துண்டித்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக காட்சிகளை வெட்டிய படக்குழு தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது 'எம்புரான்' திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கோபுரம் சினிமாஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி அந்த அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.

    விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டி அளித்து கொண்டிருந்தபோது சண்முகத்தை தள்ளிக்கொண்டு மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பி.ஏ.பி.மற்றும் இதர பாசன சங்க விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா்கள் (தாராபுரம்) குமரேசன், (உடுமலை) ஜஸ்வந்கண்ணன், பிஏபி. கண்காணிப்பு பொறியாளா் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனா்.

    இதில் பங்கேற்ற பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ப.வேலுசாமி பேசும் போது, திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதில், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    இது தொடா்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் எங்களது கோரிக்கைகளை கடந்த 36 மாதங்களாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

    ஆகவே எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு உரிய தண்ணீா் வழங்க வேண்டும். பி.ஏ.பி., வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்தனர். இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டம் இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது.

    இந்த நிலையில் வருகிற 10 நாட்களுக்குள் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர், காங்கயம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்க உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • நில உரிமைச் சான்றின் மூலம் பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் நில உரிமைச்சான்று கொடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது,

    மடத்துக்குளம் :

    கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு ஆவணப்படி நில உரிமைச்சான்று வழங்கக்கோரி மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் நாைள முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறை, பத்திரப்பதிவுத்துறை, கூட்டுறவுத்துறை, ஒன்றிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெறுவதற்கு மற்றும் அரசின் கொள்முதல் திட்டங்களில் நெல், கொப்பரை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என அனைத்திலும் கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு நில உரிமைச் சான்று மேற்கண்ட துறைகளிடம் கட்டாயம் வழங்க வேண்டியதுள்ளது.

    நிலம் அமைந்துள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் எழுதிக் கொடுக்கும் நில உரிமைச் சான்றின் மூலம் இது போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் தற்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் நில உரிமைச்சான்று கொடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கூட்டுப்பட்டா வைத்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும், நெல் கொள்முதல் திட்டத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாமலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நில உரிமைச்சான்று திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பதற்கான முறையான விளக்கம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

    தற்போது அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய பதிவு செய்வதற்காக விவசாயிகள் காத்து கொண்டிருக்கிறார்கள்.நில உரிமைச்சான்று பெற முடியாததால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே தகுதியுள்ள விவசாயிகளுக்கு நில உரிமைச்சான்று வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது எந்த அரசுத்துறைகளும் நில உரிமைச்சான்று கேட்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.பெரும்பாலான நிலங்கள் உட்பிரிவு செய்யப்படாமல் கூட்டு பட்டாவாகவே உள்ள நிலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதலை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இது தெரிகிறது.இதனைக் கண்டித்து அனைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கோரி நாளை காலை 10 மணி முதல் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள்.
    • கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர்.

    தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் இதன் மூலம் சேகரமாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதாகக் கூறினர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

    கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள்.

    மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    • பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் மறியல் செய்தனர்.
    • மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக இந்த கரும்பை வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பின் போது பன்னீர் கரும்பு வழங்கப்பட்டு வந்தது.

    இதேபோல் தி.மு.க. ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாததால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து பன்னீர் கரும்பு பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • அவிநாசிபாளையத்தில் இருந்து தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயி ஒருவரின் மகன் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை அவிநாசிபாளையத்தில் இருந்து தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயி ஒருவரின் மகன் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அப்போது பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். இதனால் விவசாயிக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விவசாயியை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உழவர் சந்தை விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் ஒன்று திரண்டு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் அங்கு பணியில் இருந்த போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன.
    • காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகளை இணைத்து பொதுப்பணித்துறை மூலம் நீர்த்தேக்க சேமிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காளியம்பாக்கம் வெள்ளகுளம் சிங்கிலி மேடு சிறுவாக்கம் தடப்பெரும்பாக்கம் ஆளாடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் ஆரணி ஆற்றின் உபரி நீர் கால்வாய் வழியாக காட்டூர் தத்தை மஞ்சு ஏரியில் சென்று உபரி நீர் பழவேற்காடு கடலில் கலக்கின்றன.

    கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று வேலூர் அத்தமஞ்சேரி எரிபிள்ளை குப்பம் மனோபுரம், கொளத்தூர், பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால்பாதிக்கப்பட்ட விவசாயிகள் இரண்டு போகும் விளைவிக்கக்கூடிய இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகியுள்ளன எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தேங்கியுள்ளமழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி விவசாயி தேவராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொன்னேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள், சார் ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் வந்து அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×